1அரசர் நெபுகத்னேசர் உலகில் எங்கணுமுள்ள எல்லா இனத்தார்க்கும் நாட்டினர்க்கும் மொழியினருக்கும் அறிவிப்பது:
2உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக! மாட்சிமிகு கடவுள் எனக்காகச் செய்தருளிய அடையாளங்களையும் விந்தைகளையும் வெளிப்படுத்துவது நலமென எனக்குத் தோன்றுகிறது.
3அவர் தந்த அடையாளங்கள் எத்துணைப் பெரியன! அவர் ஆற்றிய விந்தைகள் எத்துணை வலியன! அவரது அரசு என்றுமுள அரசு! அவரது ஆட்சியுரிமை வழிவழி நிலைக்கும்.

நெபுகத்னேசரின் இரண்டாம் கனவு

4நெபுகத்னேசராகிய நான் வீட்டில் மன அமைதியுடனும் அரண்மனையில் வளமுடனும் வாழ்ந்து வந்தேன்.
5நான் ஒரு கனவு கண்டேன்; அது என்னை அச்சுறுத்தியது; நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய கற்பனைகளும் காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.
6ஆதலால் நான் கண்ட கனவின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறும்படி பாபிலோனிய ஞானிகள் அனைவரையும் என் முன்னிலைக்கு அழைத்துவரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தேன்.
7அவ்வாறே, மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரரும் கல்தேயரும் சோதிடரும் வந்து கூடினர்; நான் கண்ட கனவை அவர்களிடம் கூறினேன்; ஆனால் அவர்களால் அதன் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறமுடியவில்லை.
8இறுதியாக‌, என் சொந்தத் தெய்வமாகிய பெல்தசாச்சாரின் பெயர் சூட்டப்பெற்ற தானியேல் வந்தார்; அவர் புனிதமிகு கடவுளின் ஆவியால் நிரப்பப்பெற்றவர்; அவரிடம் நான் கண்ட கனவைக் கூறினேன்:
9“மந்திரவாதிகளின் தலைவராகிய பெல்தசாச்சார்! புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும், உம்மால் விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன். நான் கனவில் கண்ட காட்சி இதுதான்; அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர்.
10நான் படுக்கையில் கிடந்தபோது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன: ‘இதோ! நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்; அது மிக உயர்ந்து நின்றது.
11அது வளர்ந்து வலிமை மிக்கதாய், வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.
12அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன; மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன; அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது; அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன; அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது.
13-14நான் படுக்கையில் கிடந்தபோது என் மனக்கண்முன்னே இக்காட்சிகளைக் கண்டேன்; அப்பொழுது, இதோ! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே: இந்த மரத்தை வெட்டுங்கள்; கிளைகளைத் தறித்து விடுங்கள்; இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்; இதன் கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் விலங்குகள் ஓடிப்போகட்டும்; இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.
15ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும். வானத்தின் பனியால் அந்த மனிதன் நனையட்டும்; தரையில் புல்வெளியில் விலங்குகளோடு அவன் கிடக்கட்டும்.
16அவனது மனித உள்ளம் மாற்றப்பட்டு, அவனுக்கு விலங்கின் மனம் கொடுக்கப்படட்டும்.
17ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லட்டும். காவலர் விதித்த தீர்ப்பு இதுவே: தூயவர் வாய்மொழியின் முடிவும் இதுவே: மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்பதையும், மனிதருள் தாழ்ந்தவர்களையே அதற்குத் தலைவர்களாக்குகின்றார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது.
18அரசர் நெபுகத்னேசராகிய நான் கண்ட கனவு இதுவே: பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை எனக்குத் தெரிவியும்! என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும் இதன் உட்பொருளை விளக்கிக் கூற இயலவில்லை. நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்; ஏனெனில் புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது.”
19இதைக் கேட்டவுடன் பெல்தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்; அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட அரசன், “பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம்” என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, “என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!
20நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய் வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்திருந்தது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.
21அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன. மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன. அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது. அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன.
22அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல; மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம். உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது. உமது ஆட்சி உலகின் எல்லைகள் வரை பரவியுள்ளது.
23மேலும், அரசரே! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் கண்டீர் அல்லவா! அவர், ‘இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்; ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்; வானத்தின் பனியால் அவன் நனையட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லும்வரை அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர்.
24அரசரே! இதுதான் உட்பொருள்: என் தலைவரும் அரசருமான உமக்கு உன்னதரது தீர்ப்பின்படி நடக்கவிருப்பதும் இதுவே:
25மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்; காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.
26வேர்கள் நிறைந்த அடிமரத்தை விட்டுவைக்க வேண்டும் என்று கட்டளை பிறந்தது அல்லவா? அதன்படி, விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் உனக்குக் கிடைக்கும்.
27எனவே, அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆக! நல்லறத்தைப் பேணித் தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க! ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு இது வழியாகலாம்” என்றார்.
28அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்தும் நேர்ந்தது.
29ஓராண்டு சென்றபின், ஒருநாள் அரசன் பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான்.
30அப்பொழுது அவன், “என்வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்!” என்றான்.
31இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே, வானத்திலிருந்து ஒரு குரலொலிகேட்டது: “நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்! உன்னுடைய அரசு உன்னிடமிருந்து அகன்று விட்டது.
32மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய். காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோலப் புல்லை மேய்வாய்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீ உணர்ந்து கொள்வதற்குள் ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும்.”
33உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று. மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான். மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்; தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கும்வரை அவனது உடல் வானத்தின் பனியினால் நனைந்தது.
34குறித்த காலம் கடந்தபின், நெபுகத்னேசராகிய நான் என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே, என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது. நானோ உன்னதரை வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினேன்!

அவரது ஆட்சியுரிமை

என்றுமே அழியாது!

அவரது அரசு வழிவழி நிலைக்கும்!

35உலகின் உயிர்கள் அனைத்தும்

அவர் திருமுன் ஒன்றுமில்லை!

வான்படை நடுவிலும்

உலகில் வாழ்வோர் இடையிலும்

அவர் தாம் விரும்புவதையே

செய்கின்றார்!

அவரது வலிய கையைத் தடுக்கவோ

‘நீர் என்ன செய்கிறீர்?’ என்று

அவருடைய செயல்களைப்பற்றி

வினவவோ எவராலும் இயலாது!

36அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது; என் அரசின் மேன்மைக்காக என் சீரும் சிறப்பும் எனக்கு மீண்டும் கிடைத்தன; என் அமைச்சர்களும் உயர்குடி மக்களும் என்னைத் தேடி வந்தார்கள்; எனது அரசுரிமை மீண்டும் உறுதி பெற்றது. முன்னிலும் அதிக மாண்பு எனக்குக் கிடைத்தது.

37நெபுகத்னேசராகிய நான் விண்ணக அரசரைப் போற்றிப் புகழ்ந்து, ஏத்திப் பாடுகின்றேன்;

அவருடைய செயல்கள் யாவும்

நேரியவை!

அவருடைய வழிவகைகள் சீரியவை!

ஆணவத்தின் வழிநடப்போரை

அவர் தாழ்வுறச் செய்வார்.