அரசனின் கனவும் தானியேலின் விளக்கமும்

1நெபுகத்னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு, உள்ளம் கலங்கி, உறக்கமின்றித் தவித்தான்.
2அப்பொழுது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும்படி மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அவர்களும் வந்து அரசன் முன்னிலையில் நின்றார்கள்.
3அரசன் அவர்களை நோக்கி, “நான் ஒரு கனவு கண்டேன்; அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது; நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்” என்றான்.
4அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமேய மொழியில்) “அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்” என்று கூறினார்கள்.
5அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்; உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்; இது என் திண்ணமான முடிவு.
6ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் விளக்கிக் கூறுவீர்களாகில், அன்பளிப்புகளும் பரிசுகளும் பெரு மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள். ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூறுங்கள்” என்று கூறினான்.
7அதற்கு அவர்கள் மீண்டும், “அரசர் அந்தக் கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்; அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்” என்று பதிலளித்தார்கள்.
8அதற்கு அரசன் மறுமொழியாகக் கூறியது: “நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே நீங்கள் காலம் தாழ்த்த முயலுகிறீர்கள்; இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும்.
9கனவு இன்னதென்று உங்களால் தெரிவிக்க இயலாதெனில், உங்கள் எல்லாருக்கும் ஒரே தீர்ப்புதான். சூழ்நிலை மாறும்வரை பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்ல உங்களுக்குள் உடன்பட்டிருக்கிறீர்கள். ஆதலால் கனவை முதலில் சொல்லுங்கள்; அப்பொழுது தான் அதன் உட்பொருளையும் உங்களால் விளக்கிக் கூறமுடியும் என்பதை நான் அறிந்துகொள்ள இயலும்.”
10கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, “அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை; வலிமையுடைய எந்தப் பேரரசனும் இத்தகைய காரியத்தை எந்த மந்திரவாதியிடமாவது மாயவித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது இதுகாறும் கேட்டது கிடையாது.
11ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று; தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு அதனைத் தெரிவிக்க முடியாது; ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!” என்று மறுமொழி கூறினார்கள்.
12அரசன் இதைக் கேட்டுக் கடுஞ்சினமுற்றுச் சீறி எழுந்து பாபிலோனில் இருந்த எல்லா ஞானிகளையும் அழித்து விடும்படி ஆணையிட்டான்.
13ஞானிகள் கொலை செய்யப்படவேண்டும் என்ற ஆணையின்படி தானியேலையும் அவருடைய தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள்.
14அரசனுடைய காவலர்த் தலைவன் அரியோக்கு பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்டு வந்தான்.
15தானியேல் முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் அரசனுடைய காவலர்த் தலைவனாகிய அரியோக்கிடம், “அரசனின் ஆணை இவ்வளவு கடுமையாயிருப்பது ஏன்?” என்று கேட்டார். அதற்குரிய காரணத்தை அரியோக்கு தானியேலுக்குத் தெரிவித்தான்.
16உடனே தானியேல் அரசனிடம் போய், கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார்.
17பின்னர், தானியேல் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, அனனியா, மிசாவேல், அசரியா ஆகிய தோழர்களிடம் செய்தியைக் கூறினார்.
18பாபிலோனிய ஞானிகளோடு அவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லப்படாதிருக்க, விண்ணகக் கடவுள் கருணை கூர்ந்து அம் மறைபொருளை வெளிப்படுத்தியருள வேண்டுமென்று அவரை மன்றாடுமாறு அவர்களிடம் சொன்னார்.
19அவ்வாறே அன்றிரவு கண்டகாட்சி ஒன்றில், தானியேலுக்கு அம்மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்
.

20அவர் கூறியது:

கடவுளின் திருப்பெயர் என்றென்றும்

வாழ்த்தப்படுவதாக!

ஏனெனில், ஞானமும் வல்லமையும்

அவருக்கே உரியன!

21காலங்களையும் பருவங்களையும்

மாற்றுபவர் அவரே! அரசர்களை விலக்கி

மாற்று அரசர்களை

நிலைநிறுத்துபவர் அவரே!

ஞானிகளுக்கு ஞானம்

வழங்குபவர் அவரே!

அறிவாளிகளுக்கு அறிவை

அருள்பவர் அவரே!

22ஆழ்ந்த மறைபொருள்களை

வெளிப் படுத்துபவர் அவரே!

இருளில் உள்ளதை அறிபவர் அவரே!

ஒளியும் வாழ்வது அவருடனே!

23எங்கள் தந்தையரின் இறைவா!

உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்;

ஏனெனில், எனக்கு ஞானமும்

ஆற்றலும் தந்தவர் நீரே!

நாங்கள் உம்மிடம் கேட்டதை

இப்பொழுது எனக்குத்

தெரியப்படுத்தியவர் நீரே!

அரசனது காரியத்தை

எங்களுக்கு அறிவித்தவரும் நீரே!

24பின்பு தானியேல், பாபிலோனிய ஞானிகளை அழிப்பதற்கு அரசனால் நியமிக்கப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, “நீர் பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம்; என்னை அரசர் முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்; நான் அரசரது கனவின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்” என்றார்.
25எனவே, அரியோக்கு தானியேலை, அரசன் முன்னிலைக்கு விரைவாய் அழைத்துச் சென்று, அரசனிடம், “அரசரே! சிறைப்பட்ட யூதா நாட்டினருள், அரசருடைய கனவின் உட்பொருளை விளக்கிக் கூறவல்ல ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான்.
26அரசனோ ‘பெல்தசாச்சர்’ என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா?” என்று கேட்டான்.
27தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: அரசர் கேட்கும் மறைபொருளை அரசருக்கு அறிவிக்க எந்த ஞானியாலும் மாயவித்தைக்காரனாலும் மந்திரவாதியாலும் சோதிடனாலும் இயலாது.
28ஆனால் அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள் பிற்காலத்தில் நிகழப் போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்குத் தெரிவித்துள்ளார்; நீர் கண்ட கனவும், நீர் படுத்திருந்த பொழுது, உம் மனக்கண் முன்னே தோன்றின காட்சிகளும் பின்வருமாறு:
29அரசரே! நீர் படுத்திருந்த பொழுது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் தொடங்கினீர்; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்க விருப்பதை உமக்குக் காண்பித்தார்.
30ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் மற்றெல்லா உயிர்களையும்விட நான் ஞானம் மிக்கவன் என்பதால் எனக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும் உமது இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்துகொள்ளவும் அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
31அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது.
32அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.
33அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது.
34அந்தக் கல் இரும்பினாலும் களி மண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது.
35அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.
36அரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம்.
37அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார்.
38உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது.
39உமக்குப்பின் உமது அரசைவிட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும்.
40பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும்.
41மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களி மண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும்.
42அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்.
43இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காததுபோல், அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்கமாட்டார்கள்.
44அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
45மனிதக்கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.
46அதைக் கேட்ட அரசன் நெபுகத்னேசர் தானியேலின் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்; அவருக்குக் காணிக்கைப் பொருள்களைப் படைத்துத் தூபமிடுமாறு ஆணையிட்டான்.
47மேலும், அரசன் தானியேலை நோக்கி, “நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்; அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்; அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்த வல்லவர். இது உண்மையிலும் உண்மை; ஏனெனில் உம்மால் மட்டுமே இம்மறைபொருளை விளக்கிக் கூறமுடிந்தது” என்றான்.
48பின்பு அரசன் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து அவருக்குப் பரிசில் பல தந்து, பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினான்; பாபிலோனிய ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தான்.
49மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைப் பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தான். தானியேலோ அரசனது அவையில் தொடர்ந்து பணியாற்றினார்.

2:2 தொநூ 41:8.
2:4 இவ்வசனம் தொடங்கி ஏழாம் அதிகாரம் முடிய, மூலம் அரமேய மொழியில் எழுதப் பட்டுள்ளது.