அகதியான இறைவாக்கினர் எசேக்கியேல்

1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2“மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.
3மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம்.
4நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல்நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.
5அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய்.
6அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச்செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.”
7எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.
8காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9“மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம்,‘ நீ செய்கிறது என்ன?’ என்று கேட்கவில்லையா?
10நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
11நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர்.
12அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.
13நான் அவன்மீது என் வலையை வீசுவேன். அவனும் என் கண்ணில் சிக்கிக்கொள்வான். நான் அவனைக் கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அந்த நாட்டைப் பார்க்காமலேயே அவன் அங்குச் செத்துப் போவான்.
14அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கும் அனைவரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், நான் எப்பக்கமும் சிதறடித்து, அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன்.
15நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து, நாடுகளிடையே சிதறடிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
16ஆயினும் அவர்களுள் சிலரை வாளுக்கும், பஞ்சத்துக்கும், கொள்ளைநோய்க்கும் இரையாக்காமல் விட்டுவைப்பேன். அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் வேற்றினத்தாரிடையே தங்கள் அருவருப்புகள் எல்லாவற்றையும்பற்றி எடுத்துக்கூறுவர். அப்போது அவர்கள் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.”

நடுநடுங்கும் இறைவாக்கினரின் அடையாளம்

17ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
18“மானிடா! நடுக்கத்தோடு உன் அப்பத்தை உண்டு, அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு.
19பின்னர், நாட்டின் மக்களை நோக்கிக் கூறு: இஸ்ரயேல் நாட்டிலுள்ள எருசலேமில் வாழ்வோரைப்பற்றித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அச்சத்தோடு தங்கள் அப்பத்தை உண்டு, திகைப்போடு நீரைப் பருகுவர். ஏனெனில், அங்கு வாழ்வோரின் வன்செயல்களை முன்னிட்டு அவர்களது நாட்டில் உள்ள அனைத்தும் பறிக்கப்படும்.
20மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்; நாடு பாழாய்ப் போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”

ஏற்புடைய பழமொழியும் எடுபடாத பேச்சும்

21ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
22“மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? ‘நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன; காட்சிகளோ பலிப்பதில்லை’ என்கிறீர்கள்.
23ஆகையால் அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அந்தப் பழமொழிக்கு நான் ஒரு முடிவு கட்டுவேன். இனி அதை இஸ்ரயேலில் வழங்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொல்; நாள்கள் நெருங்கிவிட்டன. முன்னறிவிப்புக் காட்சிகள் யாவும் நிறைவேறும்.
24இஸ்ரயேல் வீட்டினுள் இனிப் பொய்யான காட்சியும் குறி சொல்லலும் இல்லாமற்போம்.
25ஏனெனில், நானே ஆண்டவர்; நானே உரைத்திடுவேன்; நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்; இனிமேல் காலந்தாழ்த்தாது; கலகம் செய்யும் வீட்டாரே, நானே உரைத்திடுவேன்; அவ்வாக்கை நானே நிறைவேற்றுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
26ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
27மானிடா! ‘இவன் காணும் காட்சிகள் நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை; இவன் உரைக்கும் இறைவாக்கும் தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது’ என இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர்.
28எனவே அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

12:2 எசா 6:9-10; எரே 5:21; மாற் 8:18. 12:13 2 அர 25:7; எரே 52:11.