1என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்
என் கண்கள் கண்ணீரின்
ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?
அப்படியானால், என் மகளாம்
மக்களுள் கொலையுண்டோருக்காக
இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!
2பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று
எனக்கு இருக்கக் கூடாதா?
நான் மக்களைப் புறக்கணித்து
அவர்களிடமிருந்து சென்று விடலாமே!
ஏனெனில், அவர்கள் யாவரும்
விபசாரிகள்,
நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.
3பொய்பேசத் தங்கள் நாவை
வில்லைப்போல்
அவர்கள் வளைக்கின்றனர்;
உண்மைக்காக நாட்டில்
யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை;
அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே
சென்று கொண்டிருக்கிறார்கள்;
என்னையோ அவர்கள்
அறிந்து கொள்ளவில்லை,
என்கிறார் ஆண்டவர்.
4ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப்
பொறுத்தவரை
எச்சரிக்கையாய் இருக்கட்டும்.
எந்த உறவினரையும் நம்பவேண்டாம்.
ஏனெனில், எல்லா உறவினரும்
ஏமாற்றுவர் என்பது உறுதி;
அடுத்திருப்பவர் அனைவரும்
புறணி பேசுகின்றனர்;
5எல்லாரும் அடுத்திருப்பவரை
ஏமாற்றுகின்றனர்;
யாருமே உண்மை பேசுவதில்லை;
பொய் பேசத் தங்கள் நாவைப்
பழக்கியுள்ளார்கள்;
குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.
6நீயோ வஞ்சனை செய்வார் நடுவில்
வாழ்கின்றாய்;
தங்கள் வஞ்சனையின் காரணமாக
என்னை அவர்கள்
அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
7எனவே, படைகளின் ஆண்டவர்
இவ்வாறு கூறுகின்றார்;
நான் அவர்களைப் புடமிடுவேன்;
பரிசோதிப்பேன்;
என் மகளாகிய மக்களுக்கு நான்
வேறு என்னதான் செய்யமுடியும்?
8அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு;
அது பேசுவது வஞ்சனை;
எல்லாரும் தம் வாயால்
அடுத்திருப்பவர்களோடு
சமாதானமாய்ப் பேசுகின்றனர்;
உள்ளத்திலோ அவர்களுக்குக்
குழி பறிக்கின்றனர்.
9இவற்றின் பொருட்டு
நான் அவர்களைத்
தண்டியாமல் விடுவேனோ?
இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை
நான் பழிவாங்காமல் இருப்பேனோ?
என்கிறார் ஆண்டவர்.
10மலைகளைக் குறித்து
அழுது புலம்புவோம்;
பாழ்வெளி மேய்ச்சல்
நிலத்தின் பொருட்டு
ஒப்பாரி வைப்போம்;
ஏனெனில் அனைத்தும்
தீய்ந்து போயின;
அவை வழியாய்ச் செல்வோர்
யாருமில்லை;
கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை;
வானத்துப் பறவைகள் முதல்
விலங்குகள் வரை அனைத்துமே
ஓடி மறைந்து விட்டன.
11எருசலேமை அழித்துக்
கற்குவியலாக்குவேன்;
அதனைக் குள்ளநரிகளின்
வளையாக்குவேன்;
யூதா நகர்களை யாரும் வாழாப்
பாழ்வெளியாக்குவேன்.
17படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;
இதோ! கேளுங்கள்.
ஒப்பாரி வைக்கும் பெண்களை
வரச்சொல்லுங்கள்;
அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச்
சொல்லியனுப்புங்கள்.
18அவர்கள் விரைந்து வந்து
நம்மைக் குறித்துப் புலம்பட்டும்;
நம் கண்கள் நீர் பொழியட்டும்;
நம் இமைகள் நீர் சொரியட்டும்.
19ஏனெனில், சீயோனிலிருந்து
புலம்பல் கேட்கின்றது;
“நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே;
நம் மானமெல்லாம் போயிற்றே;
நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே.
நம் குடியிருப்புகள்
தகர்க்கப்பட்டனவே.”
20பெண்டிரே!
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
உங்கள் செவிகள் அவர்தம்
வாய்மொழியை ஏற்கட்டும்;
உங்கள் புதல்வியருக்குப்
புலம்பக் கற்றுக்கொடுங்கள்.
ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு
ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.
21ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய்
வந்துவிட்டது;
நம் அரண்களுக்குள்ளும்
நுழைந்து விட்டது;
தெருக்களில் சிறுவர்களையும்
பொதுவிடங்களில் இளைஞர்களையும்
வீழ்த்திவிட்டது.
22ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்
எனச் சொல்;
மனிதரின் பிணங்கள் சாணம்போல்
வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்;
அறுவடை செய்வோனுக்குப் பின்னால்
விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.