1அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே;
இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?
அதற்கு வழிமரபே கிடையாதா?
மில்க்கோம்*
காத்தைக் கைப்பற்றியது ஏன்?
அவன் மக்கள் அதன் நகர்களில்
குடியிருப்பது ஏன்?
2இதோ, நாள்கள் வருகின்றன,
என்கிறார் ஆண்டவர்.
அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப்
போர்முரசு ஒலிக்கச் செய்வேன்.
அது பாழடைந்த குவியல் ஆகும்;
அதன் ஊர்கள்* தீக்கிரையாகும்;
தன்னைக் கைப்பற்றியோரை
இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும்,
என்கிறார் ஆண்டவர்.
3எஸ்போனே, புலம்பியழு;
ஆயி பாழடைந்துவிட்டது.
இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்;
சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்;
ஒப்பாரி வையுங்கள்;
மதில்களுக்கிடையே
அங்குமிங்கும் ஓடுங்கள்;
மில்கோம் நாடுகடத்தப்படுவான்.
அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும்
அவனோடு செல்வார்கள்.
4பற்றுறுதியற்ற மகளே,
உன் பள்ளத்தாக்குகள் பற்றி,
உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி,
பெருமையடிப்பானேன்?
உன் செல்வங்களில்
நம்பிக்கை வைக்கிறாய்;
‘எனக்கு எதிராய் எவன் வருவான்?’
எனச் சொல்லிக்கொள்கின்றாய்.
5உன்னைச் சுற்றியிருப்போர்
அனைவரிடமிருந்தும்
உனக்குத் திகில் வருவிப்பேன்,
என்கிறார் படைகளின்
ஆண்டவராகிய தலைவர்.
நீங்கள் எல்லாரும்
தலை தெறிக்க ஓடுமாறு
விரட்டியடிக்கப்படுவீர்கள்;
தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க
எவரும் இரார்.
6பின்னர், அம்மோனியரின்
சொத்து, செல்வங்களைத்
திரும்பக் கொடுப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.
7ஏதோமைக் குறித்து,
படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே;
தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா?
மதி நுட்பமுடையோரிடமிருந்து
அறிவுரை ஒழிந்துபோயிற்றா?
அவர்களின் ஞானம்
மறைந்து போயிற்றா?
8தெதோன் குடிமக்களே,
திரும்புங்கள், தப்பியோடுங்கள்;
பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்;
நான் ஏசாவைத் தண்டிக்கும்
அவனது காலத்தில்
அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.
9திராட்சைப் பழம் பறிப்போர்
உன்னிடம் வந்தால்,
விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?
இரவில் திருடர் வருவாராயின்,
தேவைக்குமேல்
திருடமாட்டார் அன்றோ?
10நானோ ஏசாவை
வெறுமையாக்கிவிட்டேன்;
அவனுடைய பதுங்கிடங்களை
வெளிப்படுத்திவிட்டேன்.
இனி அவனால் மறைந்திருக்க முடியாது.
அவன் வழிமரபினர், சகோதரர்,
அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;
அவன் முற்றிலும் அழிந்து போவான்.
11அனாதைகளைப்பற்றிக்
கவலை கொள்ளாதே.
நான் அவர்களை வாழவைப்பேன்.
உன் விதவைகள்
என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.
14நான் ஆண்டவரிடமிருந்து
ஒரு செய்தி கேட்டேன்.
‘ஒன்றுகூடுங்கள்,
அதனை எதிர்க்க வாருங்கள்,
போருக்குப் புறப்படுங்கள்’
என்று சொல்லுமாறு,
மக்களினத்தார்க்கு ஒரு தூதன்
அனுப்பப்பட்டுள்ளான்.
15பார்! மக்களினத்தாருள்
உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்;
மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.
16பாறை இடுக்குகளில் வாழ்பவனே,
குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே,
நீ விளைவித்த அச்சமும்
உன் உள்ளத்தின் இறுமாப்பும்
உன்னை ஏமாற்றிவிட்டன;
நீ கழுகைப் போல் உன் கூட்டை
உயரத்தில் கட்டினாலும்,
நான் உன்னை அங்கிருந்து
கீழே தள்ளிவிடுவேன்,
என்கிறார் ஆண்டவர்.
23தமஸ்கு குறித்து:
ஆமாத்தும் அர்ப்பாத்தும்
கலக்கம் அடைந்துள்ளன;
கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன;
அவை அச்சத்தால் நடுங்குகின்றன;
கடலைப்போல் தத்தளிக்கின்றன;
அவற்றுக்கு அமைதியே கிடையாது.
24தமஸ்கு தளர்ந்துவிட்டது;
தப்பியோடப் பார்க்கின்றது;
அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;
வேதனை, துயரத்தின் பிடியில்
பேறுகாலப் பெண் தவிப்பதுபோல்
அதுவும் தவிக்கின்றது.
25புகழ் பெற்ற நகர் —
மகிழ்ச்சி பொங்கும் நகர் —
இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே!
26அதன் இளைஞர்கள்
தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.
அதன் படைவீரர்கள் அனைவரும்
அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
27தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்;
பென்அதாதின் கோட்டைகளை
அது சுட்டெரிக்கும்.
28பாபிலோனிய மன்னன்
நெபுகத்னேசர் வீழ்த்திய
கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,
ஆண்டவர் கூறுவது இதுவே;
புறப்படுங்கள்,
கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;
கீழ்த்திசை மக்களை
அழித்தொழியுங்கள்.
29அவர்களின் கூடாரங்களும்
மந்தைகளும் பிடிபடும்;
கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப்
பொருள்களும் கைப்பற்றப்படும்;
அவர்களின் ஒட்டகங்களை
அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்;
“எப்பக்கமும் ஒரே திகில்” என
மனிதர் ஓலமிடுவர்.
30ஆட்சோரின் குடிமக்களே!
தப்பியோடுங்கள்,
தூரமாகச் சென்று
பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,
என்கிறார் ஆண்டவர்.
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
உங்களுக்கு எதிராகச்
சதித்திட்டம் தீட்டியுள்ளான்;
உங்களுக்கு எதிராகச்
சூழ்ச்சி செய்துள்ளான்.
31புறப்படுங்கள்;
கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி
அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும்
மக்களினத்தார்க்கு எதிராக —
தனித்து வாழும்
மக்களினத்தார்க்கு எதிராக
முன்னேறிச் செல்லுங்கள்,
என்கிறார் ஆண்டவர்.
32அவர்களுடைய ஒட்டகங்கள்
கொள்ளையடிக்கப்படும்;
அவர்களின் எண்ணற்ற மந்தைகள்
பறிமுதலாகும்;
முன்தலையை
மழித்துக்கொள்ளும் மக்களைக்
காற்றில் பறக்கவிடுவேன்;
எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல்
அழிவைக் கொணர்வேன்,
என்கிறார் ஆண்டவர்.
33ஆட்சோர்,
குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்;
என்றும் பாழடைந்து கிடக்கும்;
அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்;
எவரும் அதில் தங்கவும் மாட்டார்.
35படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான
வில்லை முறித்துப்போடுவேன்.
36வானத்தின் நான்கு திசைகளினின்று
நால்வகைக் காற்றுகளை
ஏலாம்மீது வரவழைப்பேன்;
இந்த எல்லாக் காற்றுகளினாலும்
அவர்களைச் சிதறடிப்பேன்.
ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்
சென்றடையாத நாடே இராது.
37ஏலாமின் எதிரிகள் முன்னும்,
அதன் உயிரைப்
பறிக்கத் தேடுவோர் முன்னும்
நான் அதை நடுங்கச்செய்வேன்;
அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.
என் சினம் அவர்கள் மேல்
மூண்டெழும், என்கிறார் ஆண்டவர்.
அவர்களை முற்றிலும்
அழித்துத் தீர்க்கும்வரை,
அவர்களைப் பின்தொடருமாறு
வாளை அனுப்பி வைப்பேன்.
38ஏலாமில்
என் அரியணையை அமைப்பேன்;
அவர்களின் அரசரையும்
தலைவர்களையும் அழிப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.
39ஆயினும் ,இறுதி நாள்களில் நான்
ஏலாமின் சொத்து, செல்வங்களைத்
திரும்பக் கொணர்வேன்,
என்கிறார் ஆண்டவர்.