பெலிஸ்தியருக்கு எதிராக

1பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

2ஆண்டவர் கூறுவது இதுவே:
வடக்கினின்று வெள்ளம்

பொங்கி எழுகின்றது;

கரை புரண்டோடும் காட்டாறென

அது மாறுகின்றது.

நாட்டையும் அதில் உள்ள

அனைத்தையும்

நகரையும் அதன் குடிகளையும்

மூழ்கடிக்கும்.

மனிதர் கூக்குரலிடுவர்;
நாட்டு மக்கள் அனைவரும்

ஓலமிடுவர்.

3போர்க் குதிரைகளின்

குளம்பொலியையும்

தேர்களின் இரைச்சலையும்

அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு,

தந்தையர் கை சோர்ந்தமையால்

தம் குழந்தைகளையும்
திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.

4பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள்,

தீர், சீதோனும் அவற்றின்

எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும்

ஒழியும் நாள் நெருங்கிவிட்டது.

ஆண்டவர் பெலிஸ்தியரையும்

கப்தோர் தீவின் எஞ்சியோரையும்
அழிக்கவிருக்கிறார்.

5காசா மொட்டையடிக்கப்படும்;

அஸ்கலோன் அழிக்கப்படும்;

அனாக்கியருள்* எஞ்சியிருப்போரே,

எத்துணைக் காலம் நீங்கள்

உங்களையே

காயப்படுத்திக் கொள்வீர்கள்?

6ஓ, ஆண்டவரின் வாளே!

என்று நீ ஓய்ந்திருப்பாய்?

நீ உன் உறைக்குள் செல்!

அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு.

7ஆண்டவர் அதற்குக்

கட்டளை கொடுத்திருக்கிறார்;

அது* எப்படி ஓய்ந்திருக்க முடியும்?

அஸ்கலோனுக்கும்

கடற்கரைப் பகுதிக்கும் எதிராக

அவர் அதற்குப் பணி

குறித்து வைத்துள்ளாரே!


47:1-7 எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.
47:5 ‘அவர்களது பள்ளத்தாக்கு’ என்பது எபிரேய பாடம். 47:7 ‘நீ’ என்பது எபிரேய பாடம்.