எரேமியாவின் மன்றாட்டும் ஆண்டவரின் மறுமொழியும்

1பின்னர் படைத்தலைவர்கள் அனைவரும் காரயாகின் மகன் யோகனானும் ஓசயாவின் மகன் ஏசனியாவும் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரும் அருகில் வந்தார்கள்.
2அவர்கள் இறைவாக்கினர் எரேமியாவிடம் சொன்னது: “எம் வேண்டுகோளைக் கேட்டருளும், எங்களுக்காகவும் எஞ்சியிருக்கும் இவர்கள், அனைவருக்காகவும் உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும் — ஏனெனில் நீர் காண்பதுபோல் திரளாக இருந்த எங்களுள் ஒரு சிலரே எஞ்சியிருக்கிறோம் —
3நாங்கள் நடக்க வேண்டிய வழியையும் செய்யவேண்டிய செயல்களையும் உம் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் காட்டியருள்வாராக.”
4இறைவாக்கினர் எரேமியா அவர்களை நோக்கி, “நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது. அதற்கிணங்க, உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் நான் மன்றாடுவேன். ஆண்டவர் உங்களுக்குச் சொல்லவிருக்கும் மறுமொழியை உங்களிடம் தெரிவிப்பேன். உங்களிடமிருந்து ஒன்றையும் மறைக்கமாட்டேன்” என்றார்.
5அதற்கு அவர்கள் எரேமியாவிடம் கூறியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உம் வழியாக எங்களுக்கு வெளிப்படுத்தவிருக்கும் எல்லாச் சொற்களின்படியும் நாங்கள் நடப்போம் என்பதற்கு, ஆண்டவரே நமக்கு இடையில் உண்மையும் நம்பிக்கையும் உள்ள சாட்சி.
6எங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நாங்கள் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கே செவிசாய்ப்போம். அவரிடமே நாங்கள் உம்மை அனுப்பிவைக்கிறோம். ஏனெனில் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கும் பொழுது, எங்களுக்கு நன்மையே விளையும்.”
7பத்து நாள்களுக்குப் பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
8எனவே அவர் காரயாகின் மகன் யோகனானையும், தம்மோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரையும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரையும் அழைத்தார்.
9அவர் அவர்களிடம் சொன்னது; உங்கள் வேண்டுகோளை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் முன் வைத்து மன்றாடுமாறு நீங்கள் என்னை அனுப்பினீர்கள். அவர் இவ்வாறு கூறுகிறார்:
10நீங்கள் இந்த நாட்டிலேயே தொடர்ந்து குடியிருந்தால், நான் உங்களைக் கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்க மாட்டேன்; நிலை நாட்டுவேனேயன்றி, பிடுங்கி எறிய மாட்டேன். ஏனெனில் நான் உங்களுக்கு அளித்துள்ள தண்டனைபற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்.
11நீங்கள் அஞ்சி நடுங்கும் பாபிலோனிய மன்னனுக்கு இனி அஞ்சவேணடாம், நீங்கள் அவனுக்கு அஞ்ச வேண்டாம், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் உங்களை மீட்கும் பொருட்டும், அவனுடைய கையினின்று உங்களை விடுவிக்கும் பொருட்டும் நான் உங்களோடு இருக்கிறேன்.
12நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவனும் உங்கள்மீது மனமிரங்கி, உங்கள் சொந்த நாட்டுக்கே நீங்கள் திரும்பிவரச் செய்வான்.
13ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாது, “இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோம்.
14நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம். அங்கே போர் இருக்காது; போர்முரசு ஒலிக்காது; உணவுப் பஞ்சம் இராது; நாங்கள் அங்கேயே குடியிருப்போம்” என்று கூறுவீர்களானால்,
15யூதாவில் எஞ்சியிருப்போரே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் எகிப்துக்குச் சென்று, அங்கே தங்கியிருக்க முடிவு செய்திருந்தால்,
16உங்களை இங்கு அச்சுறுத்தும் அதே வாள் எகிப்து நாட்டிலும் உங்களைத் துரத்திவந்து தாக்கும்; உங்களுக்குத் திகிலூட்டுகின்ற பஞ்சம் உங்கள் பின்னாலேயே எகிப்துக்கும் தொடர்ந்துவரும்; நீங்கள் அங்கேயே மடிவீர்கள்.
17எகிப்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்க முடிவு செய்துள்ள ஆள்கள் அனைவரும் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவர். அவர்களுள் ஒருவனும் எஞ்சியருக்கமாட்டான்; நான் அவர்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனையினின்று எவனுமே தப்பமாட்டான்.
18ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: என் சினமும் சீற்றமும் எருசலேமின் குடிகள்மீது வெகுண்டெழுந்ததுபோன்று, நீங்கள் எகிப்துக்குச் செல்லும்பொழுது என் சீற்றம் உங்கள்மீது மூண்டெழும். நீங்கள் சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவீர்கள். நீங்கள் இந்த இடத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.
19யூதாவில் எஞ்சியிருப்போரே, ‘நீங்கள் எகிப்துக்குப் போகாதீர்கள்’ என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். நான் இதுபற்றி உங்களை இன்று எச்சரித்துள்ளேன் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.
20உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டீர்கள்; ஏனெனில், “எங்களுக்காக நம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்; அவர் சொல்வது அனைத்தையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்; நாங்கள் அவ்வாறே நடப்போம்” என்று கூறி, நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அனுப்பி வைத்தீர்கள்.
21நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவுளத்தை இன்று உங்களுக்கு அறிவித்துள்ளேன். நீங்களோ அதற்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்னவற்றில் எதையுமே நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
22எனவே நீங்கள் சென்று தங்க விழையும் இடத்திலேயே நீங்கள் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவீர்கள் என்பதை இப்போது திண்ணமாய் அறிந்துகொள்ளுங்கள்.