மற்றொரு வாக்குறுதி

1காவல்கூடத்தில் எரேமியா இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்பட்டது:
2உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் — ‘ஆண்டவர்’ என்பது அவர் பெயராகும் — இவ்வாறு கூறுகிறார்:
3என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.
4முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால் தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின் வீடுகளைக் குறித்தும், யூதா அரசர்களின் அரண்மனைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே;
5எதிர்த்துப் போரிடவும், சினம்கொண்டு, சீற்றமுற்று நான் வெட்டி வீழத்திய மனிதர்களின் பிணங்களால் வீடுகளை நிரப்பவும், இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
6ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்; அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன்.
7யூதாவை அதன் அடிமைத்தனத்தினின்றும் இஸ்ரயேலை அதன் அடிமைத்தனத்தினின்றும் நான் அழைத்துவருவேன்; முன்பு இருந்தது போன்று அவற்றைக் கட்டி எழுப்புவேன்.
8எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் தூய்மைப்படுத்துவேன்; அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன்.
9நான் எருசலேமுக்குச் செய்துவரும் எல்லா நன்மைகளையும் பற்றிக் கேள்வியுறும் உலகின் மக்களினத்தார் அனைவரின் முன்னிலையில் அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி, மாட்சி தரும் நகராய் விளங்கும். நான் அதற்கு வழங்கும் அனைத்து நலத்தையும் வளத்தையும் கண்டு அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.
10ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘ஆளரவமற்ற பாழ்நிலம்’ என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் — மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் —
11மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். ‘படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது’ எனப் பாடியவாறு ஆண்டவர் இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்; ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர்.
12படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; மனிதனோ விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும், இதை அடுத்த எல்லா நகர்களிலும் இடையர் தம் மந்தைகளை இளைப்பாற்றும் குடியிருப்புகள் மீண்டும் தோன்றும்.
13மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும், பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும் ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில் அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர்.
14இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
15அந்நாள்களில் — அக்காலத்தில் — நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.
16அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ”* என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
17ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார்.
18என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும், தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும், என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும் தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே இராமல் போகார்.
19ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
20ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின்,
21என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும், தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன் அவனுக்கு இருக்கமாட்டான்; என் பணியாளர்களான லேவி குலத்துக் குருக்களுக்கும் இவ்வாறே நிகழும்.
22எண்ணமுடியாத விண்மீன்களையும் அளக்க முடியாத கடல் மணலையும் போல, என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும் என் பணியாளரான லேவியரையும் நான் பெருகச் செய்வேன்.
23ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
24ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வதை நீ கவனித்ததில்லையா? என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்; அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை.
25ஆண்டவர் கூறுவது இதுவே; நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில்,
26யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்; அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.

33:14-16 எரே 23:5-6. 33:17 2 சாமு 7:12-16; 1 அர 2:4; 1 குறி 17:11-14. 33:18 எண் 3:5-10.
33:16 எபிரேயத்தில், ‘ஆண்டவரே நமது நீதி’ என்பது பொருள். காண்: எரே 23:6.