இஸ்ரயேலின் சிலைவழிபாடு கண்டிக்கப்படல்

1நேர்மையாளர் அழிந்து போகின்றனர்;

இதை மனத்தில் கொள்வார்

எவரும் இல்லை;

இறைப்பற்றுடையோர்

எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்;

அதைக் கருத்தில் கொள்வார்

எவரும் இல்லை;

ஏனெனில் நேர்மையாளர்

தீமையின் முன்னின்று

எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

2அவர்கள் அமைதிக்குள்

சென்றடைகின்றனர்;

நேர்மையான வழிமுறையைப்

பின்பற்றுவோர்

தம் இறுதிப் படுக்கைகளில்

இளைப்பாறுகின்றனர்.

3சூனியக்காரியின் மக்களே,

விபசாரன், விலைமாதின் வாரிசே,

அருகில் வாருங்கள்.

4யாரைப் பார்த்து நீங்கள்

நகைக்கின்றீர்கள்?

யாருக்கு எதிராக வாயைப்பிளந்து

நாக்கை நீட்டுகின்றீர்கள்?

நீங்கள் கொடுமையின்

பிள்ளைகளன்றோ!

பொய்மையின் சந்ததியன்றோ!

5கருவாலி மரத் தோப்பிலும்,

பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும்

காமத்தீயால் எரிகிறீர்கள்;

பள்ளத்தாக்குகளில்,

பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில்,

உங்கள் பச்சிளங் குழந்தைகளைக்

கொல்கிறீர்கள்.

6பள்ளத்தாக்கின் வழவழப்பான

கற்களினின்று உருவான சிலைகளே

உன் பங்கு; ஆம், அவையே உன் பங்கு;

அவற்றிற்கு நீ நீர்மப்பலியை

ஊற்றியுள்ளாய்;

உணவுப் படையலைப் படைத்துள்ளாய்;

இவற்றால் நான் அமைதி அடைவேனோ?

7வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல்

உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்;

பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.

8கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால்

உன் நினைவுக்குறியை வைத்தாய்;

என்னை விட்டுவிட்டு

உன் மஞ்சத்தைத் திறந்தாய்;

ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்;

நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ,

அவர்களோடு ஓர் உடன்பாடு

செய்து கொண்டாய்;

அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.

9நீ எண்ணெயுடன்

மோலேக்கிடம் சென்றாய்;

நறுமணப் பொருட்களைப்

பெருக்கிக் கொண்டாய்;

தொலை நாடுகளுக்கு

உன் தூதர்களை அனுப்பினாய்;

பாதாளம் மட்டும் அனுப்பினாய்.

10உன் வழிப்பயணம் தொலைவானதால்

களைத்துப் போனாய்; ஆயினும்,

‘இது வீண்’ என்று நீ சொல்லவில்லை;

உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்;

ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.

11யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்?

நீ என்னிடம் பொய் சொன்னாயே!

நீ என்னை நினைவுகூரவில்லை;

என்னைப் பற்றி உன் மனத்தில்

எண்ணவுமில்லை!

வெகுகாலமாய் நான்

அமைதியாய் இருந்ததால் அன்றோ

நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?

12உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்;

அவை உனக்கு உதவா.

13நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது,

நீ திரட்டிய சிலைகள்

உன்னை விடுவிக்கட்டும்!

காற்று அவை அனைத்தையும்

அடித்துக் கொண்டுபோம்;

வெறும் மூச்சே அவற்றை

ஊதித் தள்ளிவிடும்;

என்னிடம் அடைக்கலம் புகுவோர்

நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;

என் திருமலையை உடைமையாய்ப்

பெறுவர்.

நலமும் துணையும் நல்கும் ஆண்டவர்

14அமையுங்கள்; பாதையை அமையுங்கள்;

அதைத் தயார் செய்யுங்கள்;

‘என் மக்களின் வழியிலிருக்கும்

தடையை அகற்றுங்கள்’

என்று கூறப்படும்.

15உயர்ந்தவரும் உன்னதரும்

காலம் கடந்து வாழ்பவரும்,

‘தூயவர்’ என்ற பெயரைக்

கொண்டவரும் கூறுவது இதுவே:

உயர்ந்த தூய இடத்தில்

நான் உறைகின்றேன்;

நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும்

நான் வாழ்கின்றேன்;

நொறுங்கிய உள்ளத்தினரை

ஊக்குவிக்கவும்

நலிந்த நெஞ்சத்தினரைத்

திடப்படுத்தவும்

நான் குடியிருக்கின்றேன்.

16ஏனெனில், என்றென்றும் நான்

குற்றஞ்சாட்டமாட்டேன்;

எப்பொழுதும்

சினம் கொண்டிருக்கமாட்டேன்;

ஏனெனில், நான் தோற்றுவித்த

உயிர் மூச்சாகிய மனித ஆவி

என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.

17பேராசை என்னும் தீமையை முன்னிட்டு

நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து,

அவனை அடித்து நொறுக்கினேன்;

சீற்றம் கொண்டு என்னை

அவனுக்கு மறைத்துக் கொண்டேன்;

அவனோ என்னைவிட்டு விலகி

மனம்போன போக்கிலே சென்றான்.

18அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்;

ஆயினும் அவனைக் குணமாக்குவேன்;

அவனை நடத்திச் சென்று அவனுக்கு

மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.

19அவனுக்காக அழுவோரின் உதடுகளில்

நன்றி ஒலி எழச்செய்வேன்;

அமைதி! தொலையில் இருப்போருக்கும்

அருகில் இருப்போருக்கும் அமைதி!

என்கிறார் ஆண்டவர்.

அவர்களை நான் நலமடையச் செய்வேன்,

என்கிறார் ஆண்டவர்.

20கொடியவரோ கொந்தளிக்கும்

கடல்போல் இருக்கின்றனர்;

அந்தக் கடலால்

அமைதியாயிருக்க இயலாது;

அதன் நீர்த்திரள்கள் சேற்றையும்

சகதியையும் கிளறிவிடுகின்றன;

21கொடியவர்களுக்கு அமைதியே இல்லை,

என்கிறார் என் கடவுள்.