1நாங்கள் அறிவித்ததை நம்பியவர்
யார்? ஆண்டவரின் ஆற்றல்
யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
2இளந்தளிர்போலும்
வறண்டநில வேர்போலும்
ஆண்டவர் முன்னிலையில்
அவர் வளர்ந்தார்;
நாம் பார்ப்பதற்கேற்ற
அமைப்போ அவருக்கில்லை;
நாம் விரும்பத்தக்க தோற்றமும்
அவருக்கில்லை;
3அவர் இகழப்பட்டார்;
மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்;
வேதனையுற்ற மனிதராய் இருந்தார்;
நோயுற்று நலிந்தார்;
காண்போர் தம் முகத்தை
மூடிக்கொள்ளும் நிலையில்
அவர் இருந்தார்;
அவர் இழிவுபடுத்தப்பட்டார்;
அவரை நாம் மதிக்கவில்லை.
4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத்
தாங்கிக்கொண்டார்;
நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;
நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு
நொறுக்கப்பட்டவர் என்றும்
சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும்
எண்ணினோம்.
5அவரோ, நம் குற்றங்களுக்காகக்
காயமடைந்தார்;
நம்தீச்செயல்களுக்காக
நொறுக்கப்பட்டார்;
நமக்கு நிறைவாழ்வை அளிக்க
அவர் தண்டிக்கப்பட்டார்;
அவர்தம் காயங்களால்
நாம் குணமடைகின்றோம்.
6ஆடுகளைப் போல நாம் அனைவரும்
வழிதவறி அலைந்தோம்;
நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;
ஆண்டவரோ நம் அனைவரின்
தீச்செயல்களையும்
அவர்மேல் சுமத்தினார்.
7அவர் ஒடுக்கப்பட்டார்;
சிறுமைப்படுத்தப்பட்டார்;
ஆயினும், அவர் தம்
வாயைத் திறக்கவில்லை;
அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட
ஆட்டுக்குட்டிபோலும்
உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில்
கத்தாத செம்மறி போலும்
அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.
8அவர் கைது செய்யப்பட்டு,
தீர்ப்பிடப்பட்டு,
இழுத்துச் செல்லப்பட்டார்;
அவருக்கு நேர்ந்ததைப்பற்றி
அக்கறை கொண்டவர் யார்?
ஏனெனில், வாழ்வோர் உலகினின்று
அவர் அகற்றப்பட்டார்;
என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக்
கொலையுண்டார்.
9வன்செயல் எதுவும்
அவர் செய்ததில்லை;
வஞ்சனை எதுவும்
அவர் வாயில் இருந்ததில்லை;
ஆயினும், தீயவரிடையே
அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;
செத்தபோது அவர்
செல்வரோடு இருந்தார்.
10அவரை நொறுக்கவும்
நோயால் வதைக்கவும்
ஆண்டவர் திருவுளம் கொண்டார்;
அவர் தம் உயிரைக்
குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;
எனவே, தம் வழிமரபு கண்டு
நீடு வாழ்வார்;
ஆண்டவரின் திருவுளம்
அவர் கையில் சிறப்புறும்.
11அவர் தம் துன்ப வாழ்வின்
பயனைக் கண்டு நிறைவடைவார்;
நேரியவராகிய என் ஊழியர்
தம் அறிவால்
பலரை நேர்மையாளராக்குவார்;
அவர்களின் தீச்செயல்களைத்
தாமே சுமந்து கொள்வார்.
12ஆதலால், நான் அவருக்கு
மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;
அவரும் வலியவரோடு
கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;
ஏனெனில், அவர் தம்மையே
சாவுக்கு கையளித்தார்;
கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;
ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;
கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.