1நாங்கள் அறிவித்ததை நம்பியவர்

யார்? ஆண்டவரின் ஆற்றல்

யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

2இளந்தளிர்போலும்

வறண்டநில வேர்போலும்

ஆண்டவர் முன்னிலையில்

அவர் வளர்ந்தார்;

நாம் பார்ப்பதற்கேற்ற

அமைப்போ அவருக்கில்லை;

நாம் விரும்பத்தக்க தோற்றமும்

அவருக்கில்லை;

3அவர் இகழப்பட்டார்;

மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்;

வேதனையுற்ற மனிதராய் இருந்தார்;

நோயுற்று நலிந்தார்;

காண்போர் தம் முகத்தை

மூடிக்கொள்ளும் நிலையில்

அவர் இருந்தார்;

அவர் இழிவுபடுத்தப்பட்டார்;

அவரை நாம் மதிக்கவில்லை.

4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத்

தாங்கிக்கொண்டார்;

நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;

நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு

நொறுக்கப்பட்டவர் என்றும்

சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும்

எண்ணினோம்.

5அவரோ, நம் குற்றங்களுக்காகக்

காயமடைந்தார்;

நம்தீச்செயல்களுக்காக

நொறுக்கப்பட்டார்;

நமக்கு நிறைவாழ்வை அளிக்க

அவர் தண்டிக்கப்பட்டார்;

அவர்தம் காயங்களால்

நாம் குணமடைகின்றோம்.

6ஆடுகளைப் போல நாம் அனைவரும்

வழிதவறி அலைந்தோம்;

நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;

ஆண்டவரோ நம் அனைவரின்

தீச்செயல்களையும்

அவர்மேல் சுமத்தினார்.

7அவர் ஒடுக்கப்பட்டார்;

சிறுமைப்படுத்தப்பட்டார்;

ஆயினும், அவர் தம்

வாயைத் திறக்கவில்லை;

அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட

ஆட்டுக்குட்டிபோலும்

உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில்

கத்தாத செம்மறி போலும்

அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

8அவர் கைது செய்யப்பட்டு,

தீர்ப்பிடப்பட்டு,

இழுத்துச் செல்லப்பட்டார்;

அவருக்கு நேர்ந்ததைப்பற்றி

அக்கறை கொண்டவர் யார்?

ஏனெனில், வாழ்வோர் உலகினின்று

அவர் அகற்றப்பட்டார்;

என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக்

கொலையுண்டார்.

9வன்செயல் எதுவும்

அவர் செய்ததில்லை;

வஞ்சனை எதுவும்

அவர் வாயில் இருந்ததில்லை;

ஆயினும், தீயவரிடையே

அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;

செத்தபோது அவர்

செல்வரோடு இருந்தார்.

10அவரை நொறுக்கவும்

நோயால் வதைக்கவும்

ஆண்டவர் திருவுளம் கொண்டார்;

அவர் தம் உயிரைக்

குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;

எனவே, தம் வழிமரபு கண்டு

நீடு வாழ்வார்;

ஆண்டவரின் திருவுளம்

அவர் கையில் சிறப்புறும்.

11அவர் தம் துன்ப வாழ்வின்

பயனைக் கண்டு நிறைவடைவார்;

நேரியவராகிய என் ஊழியர்

தம் அறிவால்

பலரை நேர்மையாளராக்குவார்;

அவர்களின் தீச்செயல்களைத்

தாமே சுமந்து கொள்வார்.

12ஆதலால், நான் அவருக்கு

மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;

அவரும் வலியவரோடு

கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;

ஏனெனில், அவர் தம்மையே

சாவுக்கு கையளித்தார்;

கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;

ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;

கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.


53:1 யோவா 12:38; உரோ 10:16. 53:4 மத் 8:17. 53:5 1 பேது 2:24. 53:6 1 பேது 2:25. 53:7 திவெ 2:6. 53:7-8 திப 8:32-33. 53:9 1 பேது 2:22. 53:12 மாற் 15:28; லூக் 22:37.