1என் ஊழியன் யாக்கோபே,
நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே,
இப்பொழுது செவிகொடு.
2உன்னைப் படைத்தவரும்,
கருப்பையில் உன்னை உருவாக்கியவரும்,
உனக்கு உதவி செய்பவருமாகிய
ஆண்டவர் கூறுவதைக் கேள்;
என் ஊழியன் யாக்கோபே,
நான் தேர்ந்துகொண்ட
‘எசுரூன்’* அஞ்சாதே!
3ஏனெனில், தாகமுற்ற நிலத்தில்
நீரை ஊற்றுவேன்;
வறண்ட தரையில்
நீரோடைகள் ஓடச் செய்வேன்;
உன் வழிமரபினர் மீது
என் ஆவியைப் பொழிவேன்;
உன் வழித்தோன்றல்களுக்கு
நான் ஆசி வழங்குவேன்;
4அவர்கள் நீரோடை அருகிலுள்ள
புல் போலும் நாணல்கள் போலும்
செழித்து வளருவர்.
5ஒருவன் ‘நான் ஆண்டவருக்கு
உரியவன்’ என்பான்;
மற்றொருவன் யாக்கோபின் பெயரைச்
சூட்டிக்கொள்வான்;
வேறொருவன் ‘ஆண்டவருக்குச்
சொந்தம்’ என்று தன் கையில் எழுதி,
‘இஸ்ரயேல்’ என்று பெயரிட்டுக் கொள்வான்.
6இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும்,
படைகளின் ஆண்டவருமான
ஆண்டவர் கூறுவது இதுவே:
தொடக்கமும் நானே; முடிவும் நானே;
என்னையன்றி வேறு கடவுள் இல்லை.
7எனக்கு நிகர் யார்?
அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும்.
என்றுமுள மக்களை
நான் ஏற்படுத்தியதிலிருந்து
நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும்.
இனி நடக்கவிருப்பன பற்றியும்,
நிகழப்போவனபற்றியும்
முன்னுரைக்கட்டும்.
8நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்;
முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா?
அறிவிக்கவில்லையா?
நீங்களே என் சாட்சிகள்;
என்னையன்றி வேறு கடவுள் உண்டோ?
நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ?
21யாக்கோபே, இஸ்ரயேலே,
இவற்றை நீ நினைவிற் கொள்வாய்;
நீ என் ஊழியன்;
நான் உன்னை உருவாக்கினேன்;
நீ தான் என் அடியான்; இஸ்ரயேலே,
நான் உன்னை மறக்க மாட்டேன்.
22உன் குற்றங்களைக் கார்மேகம் போலும்,
உன் பாவங்களைப் பனிப்படலம் போலும்
அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா,
நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.
23வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்;
ஆண்டவர் இதைச் செய்தார்;
மண்ணுலகின் அடித்தளங்களே,
ஆர்ப்பரியுங்கள்;
மலைகளே, காடே,
அங்குள்ள அனைத்து மரங்களே,
களிப்புற்று முழங்குங்கள்;
ஏனெனில் ஆண்டவர்
யாக்கோபை மீட்டருளினார்;
இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.
24கருப்பையில் உன்னை உருவாக்கிய
உன் மீட்பரான ஆண்டவர்
கூறுவது இதுவே:
அனைத்தையும் படைத்த
ஆண்டவர் நானே;
யார் துணையுமின்றி நானாக
வானங்களை விரித்து
மண்ணுலகைப் பரப்பினேன்.
25பொய்யர் சொல்லும் குறிகள்
பலிக்காதவாறு செய்கின்றேன்;
மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்;
ஞானிகளை இழிவுறச் செய்து
அவர்களது அறிவு
மடமையெனக் காட்டுகின்றேன்;
26என் ஊழியன் சொன்ன வார்த்தையை
உறுதிப்படுத்துகின்றேன்;
என் தூதர் அறிவித்த திட்டத்தை
நிறைவேற்றுகின்றேன்;
எருசலேமை நோக்கி,
‘நீ குடியமர்த்தப் பெறுவாய்’ என்றும்
யூதா நகர்களிடம், ‘நீங்கள்
கட்டியெழுப்பப் பெறுவீர்கள்’ என்றும்
அவற்றின் பாழடைந்த இடங்களைச்
சீரமைப்பேன்’ என்றும் கூறுகின்றேன்.
27ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து,
‘வற்றிப்போ; உன் ஆறுகளை
உலர்ந்த தரையாக்குவேன்’ என்றும்
உரைக்கின்றேன்.
28சைரசு மன்னனைப்பற்றி,
‘அவன் நான் நியமித்த ஆயன்;
என் விருப்பத்தை
நிறைவேற்றுவான்’ என்றும்,
எருசலேமைப்பற்றி,
‘அது கட்டியெழுப்பப்படும்’ என்றும்,
திருக்கோவிலைப்பற்றி,
‘உனக்கு அடித்தளம் இடப்படும்’ என்றும்
கூறுவதும் நானே.