1மோவாபைப் பற்றிய திருவாக்கு:
ஒரே இரவில் ஆர் நகரம்
அழிக்கப்படுவதால்
மோவாபும் அழிக்கப்படும்.
ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால்,
மோவாபும் அழிக்கப்படும்.
2தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப
உயர்ந்த இடங்களுக்கு
ஏறிச் செல்கின்றனர்;
நெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து
மோவாபு அலறி அழுகின்றது;
அவர்கள் அனைவரின் தலைகளும்
மழிக்கப்பட்டாயிற்று.
தாடிகள் அனைத்தும்
சிரைக்கப்பட்டதாயிற்று.
3அதன் தெருக்களில் நடமாடுவோர்
சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;
வீட்டு மாடிகளிலும்
பொது இடங்களிலும் உள்ள யாவரும்
ஓலமிட்டு அழுகின்றனர்.
விழிநீர் ததும்பிவழியத்
தேம்பித் தேம்பி அழுகின்றனர்.
4எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர்
கூக்குரலிடுகின்றனர்.
யாகசு ஊர்வரை
அவர்களின் குரல் கேட்கின்றது;
படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள்
கதறுகின்றார்கள்,
ஒவ்வொருவனும் மனக்கலக்கம்
அடைகிறான்.
5மோவாபுக்காக என் நெஞ்சம்
குமுறுகின்றது;
அதன் அகதிகள் சோவாருக்கும்
எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்;
ஏனெனில் அவர்கள்
லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில்
அழுதுகொண்டு செல்கின்றனர்;
ஒரோனயிம் சாலையில்
அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்;
6நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;
புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;
பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.
7ஆதலால் தாங்கள்
மிகுதியாக ஈட்டியவற்றையும்
சேமித்து வைத்தவற்றையும்
தூக்கிக் கொண்டு அவர்கள்
அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.
8மோவாபின் எல்லையெங்கும்
கதறியழும் குரல் எட்டுகின்றது;
அவர்களின் அவலக்குரல்
எக்லயிம் நகர்வரை கேட்கின்றது;
அவர்களின் புலம்பல்
பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.
9தீபோன் நீர்நிலைகள்
இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன;
ஆயினும் தீபோன் மேல்
இன்னும் மிகுதியான
துன்பத்தைக் கொண்டு வருவேன்;
மோவாபியருள்
தப்பிப் பிழைத்தோர்மேலும்
நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும்
சிங்கத்தை ஏவிவிடுவேன்.