கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்த எசாயா, இறைவனால் சிறப்பான முறையில் தெரிந்தெடுக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு யூதா மக்களிடம் அனுப்பப்பட்டவர். இந்த மாபெரும் இறைவாக்கினரின் பெயரால் வழங்கப்பெறும் இந்நூலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

  1. அதிகாரங்கள் 1 - 39: இக்காலத்தில் தென் நாடாம் யூதா, வலிமை மிக்க அண்டை நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் யூதாவுக்கு வரவிருந்த அழிவுக்கு, அசீரியாவின் ஆற்றலைவிட, அந்த நாடு கடவுள் மீது நம்பிக்கை இழந்து அவருக்குப் பணியாது செய்த பாவங்களே உண்மையான காரணம் என்று எசாயா உணர்ந்தார். எனவே அவர் எழுச்சியூட்டும் சொற்களாலும் செயல்களாலும், அம்மக்களையும் அவர்கள் தலைவர்களையும் நேர்மையோடும் நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவி கொடாவிடில் இருளும் அழிவுமே காத்திருக்கின்றன என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் வழிமரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம், அனைத்துலகும் அமைதிபெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார்.
  2. அதிகாரங்கள் 40 - 55: இப்பகுதி யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்தைச் சார்ந்தது. கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் முழக்கம் செய்தார். வரலாற்றின் ஆண்டவர் கடவுளே என்பதும் இஸ்ரயேலர் மூலமாக மாந்தர் அனைவரும் நற்செய்தி பெற்று, இறையாசி பெறுவர் என்பதும் இங்கு வலியுறுத்தப் பெறுகின்றன. இப்பகுதியில் காணப்பெறும் ‘ஆண்டவரின் ஊழியன்’ பற்றிய பாடல்கள் பழைய ஏற்பாட்டிலேயே மிகச்சிறந்த பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
  3. அதிகாரங்கள் 56 - 66: இவற்றுள் பெரும்பாலானவை எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டவை. கடவுள் இஸ்ரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது; நேர்மை, நீதி, ஓய்வுநாள், பலி, மன்றாட்டு ஆகியவற்றின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகின்றது. இயேசு பெருமான் தம் பணியின் தொடக்கத்தில் இந்நூலின் (61:1-2) சொற்களைக் கையாள்வது குறிப்பிடத்தக்கது.

நூலின் பகுதிகள்

  1. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 1:1 - 12:6
  2. வேற்றினத்தார்க்குரிய தண்டனைகள் 13:1 - 23:18
  3. உலகின்மீது ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு 24:1 - 27:13
  4. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 28:1 - 35:10
  5. யூதாவின் அரசன் எசேக்கியாவும் அசீரியரும் 36:1 - 39:8
  6. வாக்குறுதி, நம்பிக்கை உரைகள் 40:1 - 55:13
  7. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 56:1 - 66:24