பாடல் 6: தலைவன்-தலைவி உரையாடல்

1சாரோன் சமவெளியில் உள்ள காட்டு

மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும்

லீலிமலர்.

2முட்புதர் நடுவில் இருக்கும்

லீலிமலர்போல், மங்கையருள்

இருக்கிறாள் என் அன்புடையாள்.

3காட்டு மரங்களிடை நிற்கும்

கிச்சிலி போல்,

காளையருள் இலங்குகின்றார்

என் காதலர்தாம்.

அவரது நிழலிலே அமர்வதில்

இன்புறுவேன்;

அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.

பாடல் 7: தலைவி கூற்று

4திராட்சை இரசம் வைக்கும்

அறைக்குள்ளே

என்னை அவர் அழைத்துச் சென்றார்;

அவர் என் மேல் செலுத்திய

நோக்கில் காதல் இருந்தது!

5திராட்சை அடைகள் கொடுத்து

என்னை வலிமைப்படுத்துங்கள்;

கிச்சிலிப்பழங்களால்

எனக்கு ஊக்கமூட்டுங்கள்.

காதல் நோயால்

தான் மிகவும் நலிந்து போனேன்.

6இடக்கையால் அவர் என் தலையைத்

தாங்கிக் கொள்வார்;

வலக்கையால் அவர் என்னைத்

தழுவிக் கொள்வார்.

7எருசலேம் மங்கையரே!

கலைமான்கள்மேல் ஆணை!

வயல்வெளி மரைகள்மேல் ஆணை!

உங்களுக்கு நான் கூறுகிறேன்;

காதலைத் தட்டி எழுப்பாதீர்;

தானே விரும்பும்வரை

அதைத் தட்டி எழுப்பாதீர்.

பாடல் 8: தலைவி கூற்று

8என் காதலர் குரல் கேட்கின்றது;

இதோ, அவர் வந்துவிட்டார்;

மலைகள்மேல் தாவி வருகின்றார்;

குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.

9என் காதலர் கலைமானுக்கு அல்லது

மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.

இதோ, எம் மதிற்சுவர்க்குப்

பின்னால் நிற்கின்றார்;

பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்;

பின்னல் தட்டி வழியாய்

நோக்குகின்றார்.

10என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:

“விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.

11இதோ, கார்காலம் கடந்துவிட்டது;

மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.

12நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;

பாடி மகிழும் பருவம் வந்துற்றது;

காட்டுப் புறா கூவும் குரலதுவோ

நாட்டினில் நமக்குக் கேட்கின்றது;

13அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;

திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;

விரைந்தெழு, என் அன்பே!

என் அழகே! விரைந்து வா.”

பாடல் 9: தலைவன் கூற்று

14பாறைப் பிளவுகளில் இருப்பவளே,

குன்றின் வெடிப்புகளில் இருக்கும்

என் வெண்புறாவே!

காட்டிடு எனக்கு உன் முகத்தை;

எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.

உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

பாடல் 10: தலைவி கூற்று

15பிடியுங்கள் எமக்காக நரிகளை;

குள்ளநரிகளைப் பிடியுங்கள்;

அவை திராட்சைத் தோட்டங்களை

அழிக்கின்றன;

எம் திராட்சைத் தோட்டங்களோ

பூத்துள்ளன.

பாடல் 11: தலைவி கூற்று

16என் காதலர் எனக்குரியர்;

நானும் அவருக்குரியள்;

லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.

17பொழுது புலர்வதற்குள்,

நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக,

என் காதலரே! மலைமுகட்டுக்

கலைமான்போன்று அல்லது

மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!