1திரண்ட செல்வத்தைவிட நற் பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.
2செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு; ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.
3எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேக முள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.
4தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.
5நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.
6நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.
7செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்; கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.
8அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.
9கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.
10ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்; சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.
11ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்; இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.
12அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்; கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.
13“வெளியே சிங்கம் நிற்கிறது; வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்” என்கிறான் சோம்பேறி.
14பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி; ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.
15பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.
16செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.