1பிறரோடு ஒத்துவாழாதவர் தன்ன லத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்..

2மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்; தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.

3கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்; மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.

4மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன் றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.

5பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல; நேர்மையானவருக்கு நீதி கிடைக் காமல் தடுப்பது நேரியதல்ல.

6மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்கு வாதம் பிறக்கும்; அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.

7மதிகேடர் தம் வாயால் அழிவார்; அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.

8புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்; அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

9தன் வேலையில் சோம்பலடைகிறவன் அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன்.

10ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை; அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.

11செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.

12முதலில் வருவது இறுமாப்பு; அதனை அடுத்து வருவது அழிவு; மேன்மை அடையத் தாழ்மையே வழி.

13வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர் களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.

14மன வலிமை நோயைத் தாங்கிக் கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?

15உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்; ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும்.

16ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர் முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.

17வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.

18திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்; வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.

19*உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்; அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான்.*

20ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்; தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும்.

21வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

22மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்.

23ஏழை கெஞ்சிக் கேட்பார்; செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார்.

24கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.


18:19 ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.