பலிபீடம்
(விப 38:1-7)

1சித்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். நீளம் ஐந்து முழம், அகலம் ஐந்து முழமாகப் பலிபீடம் சதுரவடிவமாய் இருக்கட்டும். அதன் உயரமோ மூன்று முழம்.
2அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் அமைப்பாய். கொம்புகளும் பலிபீடத்தின் பாகமாகவே விளங்கும். பின் அதை வெண்கலத்தால் மூடு.
3பின்னர், அதைச் சார்ந்த சாம்பல் சட்டிகள், அள்ளுகருவிகள், பலிக் கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்வாய்.
4அதைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து, அத்தோடு இணைப்பாய். நான்கு மூலைகளிலும் நான்கு வளையங்களைப் பொருத்துவாய்.
5பலிபீடத்தின் பாதிப் பகுதியை எட்டும்படி அதன் விளிம்புக்குக் கீழே வலைப் பின்னலைப் பொருத்து.
6பலிபீடத்தின் தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து, அவற்றை வெண்கலத்தால் மூடுவாய்.
7பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் இத்தண்டுகள் வளையங்களில் செலுத்தப்படும்.
8பலகைகளைச் சேர்த்து உள்கூடாகப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலைமேல் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அது செய்யப்படட்டும்.

திருஉறைவிட முற்றம்
(விப 38:9-20)

9திருஉறைவிட முற்றத்தை நீ உருவாக்குவாய். தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் செய்த தொங்கு திரைகளை நூறுமுழ நீளத்திற்குப் போடவேண்டும்.
10அதற்கு இருபது தூண்களும், வெண்கலத்தில் இருபது பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும், பூண்களும் தேவை.
11அவ்வாறே, வடபக்கத்தில் நூறு முழ நீளமான தொங்குதிரைகளும், அவற்றுடன் இருபது தூண்களும், இருபது வெண்கலப் பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும் பூண்களும் தேவை.
12மேற்குப் பக்கத்தில் முற்றத்தின் அகலப்பகுதி ஐம்பது முழத் தொங்குதிரைகளாலும், அதற்கான பத்துத் தூண்களாலும் பத்துப் பாதப் பொருத்துகளாலும் அமையும்.
13கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கிய முற்றத்தின் அகலம் ஐம்பது முழம்.
14அதன் ஒரு பகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும் மூன்று தூண்களாலும், மூன்று பாதப் பொருத்துகளாலும் அமையும்.
15மறுபகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும், மூன்று தூண்களாலும், மூன்று பாதப்பொருத்துகளாலும் அமைக்கப்படும்.
16நடுப்பகுதியில், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த இருபது முழத்தொங்குதிரை முற்றத்தின் நுழை வாயிலாக விளங்கும். அதற்காக நான்கு தூண்களும், நான்கு பாதப் பொருத்துகளும் அமைக்கப்படட்டும்.
17முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தூண்களுமே வெள்ளியால் மூடப்பட்டிருக்கும். அவற்றின் கொளுத்துகள் வெள்ளியாலும் பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலும் செய்யப்படும்.
18முற்றத்தின் நீளம் நூறு முழம். அகலம் ஐம்பது முழம். உயரம் ஐந்து முழம். திரைகள் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலானவை. பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலானவை.
19திருஉறைவிடத் திருப்பணிகளுக்கான அனைத்துப் பொருள்களும் அங்குள்ள கொளுத்துகளும், முற்றத்திலுள்ள எல்லாக் கொளுத்துகளும் வெண்கலமாய் இருக்கும்.

விளக்கைப் பேணுதல்
(லேவி 24:1-4)

20விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய் கொண்டு வரப்பட வேண்டுமென்று இஸ்ரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய்.
21சந்திப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள தொங்குதிரைக்கு வெளியே, அணையாவிளக்கு எரிந்துகொண்டிருக்கட்டும். ஆரோனும் அவன் புதல்வரும் இரவிலும் பகலிலும் அதைக் கவனித்துக் கொள்ளட்டும். தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்களுக்கிடையில் மாறாமல் நிற்கும் சட்டம் இது.