மூன்றாம் பகுதி

கடவுளின் நீதிமுறை
(ஆசாபின் புகழ்ப்பா)

1உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக்

கடவுள் எவ்வளவு நல்லவர்!

தூய உள்ளத்தினர்க்கு

ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!

2என் கால்கள்

சற்றே நிலைதடுமாறலாயின;

நான் அடிசறுக்கி விழப்போனேன்.

3ஆணவம் கொண்டோர்மேல்

நான் பொறாமை கொண்டேன்;

பொல்லாரின் வளமிகு வாழ்வை

நான் கண்டேன்.

4அவர்களுக்குச்

சாவின் வேதனை என்பதே இல்லை;

அவர்களது உடல்,

நலமும் உரமும் கொண்டது.

5மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம்

அவர்களுக்கு இல்லை.

மற்ற மனிதர்களைப் போல்

அவர்கள் துன்புறுவதில்லை.

6எனவே, மணிமாலைபோல்

செருக்கு அவர்களை அணி செய்கிறது;

வன்செயல் அவர்களை

ஆடைபோல மூடிக்கொள்கிறது.

7அவர்களின் கண்கள்

கொழுப்பு மிகுதியால்

புடைத்திருக்கின்றன;

அவர்களது மனத்தின் கற்பனைகள்

எல்லை கடந்து செல்கின்றன.

8பிறரை எள்ளி நகையாடி

வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்;

இறுமாப்புக்கொண்டு

கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.

9விண்ணுலகை எதிர்த்து

அவர்கள் வாய் பேசுகின்றது;

மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல்

விரிந்து பரவுகின்றது.

10ஆதலால், கடவுளின் மக்களும்

அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்;

இவ்வாறு, கடல் முழுவதையும்

உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.

11‘இறைவனுக்கு எப்படித் தெரியும்?

உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’

என்கின்றார்கள்.

12ஆம்; பொல்லார்

இப்படித்தான் இருக்கின்றனர்;

என்றும் வளமுடன் வாழ்ந்து

செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.

13அப்படியானால், நான் என் உள்ளத்தை

மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?

குற்றமற்ற நான் என் கைகளைக்

கழுவிக்கொண்டதும் வீண்தானா?

14நாள்தோறும் நான்

வதைக்கப்படுகின்றேன்;

காலைதோறும்

கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.

15“நானும் அவர்களைப்போல் பேசலாமே”

என்று நான் நினைத்திருந்தால்,

உம் மக்களின் தலைமுறைக்கு

நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.

16ஆகவே, இதன் உண்மை என்னவென்று

கண்டறிய முயன்றேன்;

ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.

17நான் இறைவனின் தூயகத்திற்குச்

சென்றபின்புதான்

அவர்களுக்கு நேரிடப்போவது என்ன

என்பதை உணர்ந்துகொண்டேன்.

18உண்மையில் அவர்களை நீர்

சறுக்கலான இடங்களில் வைப்பீர்;

அவர்களை விழத்தாட்டி

அழிவுக்கு உள்ளாக்குவீர்.

19அவர்கள் எவ்வளவு விரைவில்

ஒழிந்து போகிறார்கள்!

அவர்கள் திகில் பிடித்தவர்களாய்

அடியோடு அழிந்து போகிறார்கள்!

20விழித்தெழுவோரின் கனவுபோல்

அவர்கள் ஒழிந்து போவார்கள்;

என் தலைவராகிய ஆண்டவரே,

நீர் கிளர்ந்தெழும்போது

அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.

21என் உள்ளம் கசந்தது;

என் உணர்ச்சிகள் என்னை

ஊடுருவிக் குத்தின.

22அப்பொழுது நான்

அறிவிழந்த மதிகேடனானேன்;

உமது முன்னிலையில்

ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.

23ஆனாலும், நான் எப்போதும்

உமது முன்னிலையிலேதான்

இருக்கின்றேன்; என் வலக்கையை

ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.

24உமது திருவுளப்படியே

என்னை நடத்துகின்றீர்;

முடிவில் மாட்சியோடு

என்னை எடுத்துக் கொள்வீர்.

25விண்ணுலகில் உம்மையன்றி

எனக்கிருப்பவர் யார்?

மண்ணுலகில் வேறு விருப்பம்

உம்மையன்றி எனக்கேதுமில்லை.

26எனது உடலும் உள்ளமும்

நைந்து போயின;

கடவுளே என் உள்ளத்திற்கு அரணும்

என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.

27உண்மையிலேயே, உமக்குத்

தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;

உம்மைக் கைவிடும்

அனைவரையும் அழித்துவிடும்.

28நானோ கடவுளின் அண்மையே

எனக்கு நலமெனக் கொள்வேன்;

என் தலைவராகிய ஆண்டவரை

என் அடைக்கலமாய்க்கொண்டு

அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.