கடவுளுக்காக ஏங்குதல்
(யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது, தாவீது பாடிய புகழ்ப்பா)

1கடவுளே! நீரே என் இறைவன்!

உம்மையே நான் நாடுகின்றேன்;

என் உயிர் உம்மீது

தாகம் கொண்டுள்ளது;

நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல

என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

2உம் ஆற்றலையும் மாட்சியையும்

காண விழைந்து

உம் தூயகம் வந்து

உம்மை நோக்குகின்றேன்.

3ஏனெனில், உமது பேரன்பு

உயிரினும் மேலானது;

என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

4என் வாழ்க்கை முழுவதும்

இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;

கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.

5அறுசுவை விருந்தில்

நிறைவடைவதுபோல

என் உயிர் நிறைவடையும்;

என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால்

உம்மைப் போற்றும்.

6நான் படுத்திருக்கையில்

உம்மை நினைப்பேன்;

இரா விழிப்புகளில்

உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.

7ஏனெனில், நீர் எனக்குத்

துணையாய் இருந்தீர்;

உம் இறக்கைகளின் நிழலில்

மகிழ்ந்து பாடுகின்றேன்.

8நான் உம்மை உறுதியாகப்

பற்றிக்கொண்டேன்;

உமது வலக்கை

என்னை இறுகப் பிடித்துள்ளது.

9என்னை அழித்துவிடத் தேடுவோர்

பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.

10அவர்கள் வாளுக்கு இரையாவர்;

நரிகளுக்கு விருந்தாவர்.

11அரசரோ கடவுளை நினைத்துக்

களிகூர்வார்;

அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர்

அனைவரும் பெருமிதம் கொள்வர்;

பொய் சொல்வோரின் வாய்

அடைக்கப்படும்.


63 தலைப்பு: 1 சாமு 23:14.