இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு

என்னைக் கண்டியாதேயும்;

என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு

என்னைத் தண்டியாதேயும்.

2ஆண்டவரே, எனக்கு இரங்கும்;

ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;

ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;

ஏனெனில், என் எலும்புகள்
வலுவிழந்து போயின.

3என் உயிர் ஊசலாடுகின்றது;

ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?

4ஆண்டவரே, திரும்பும்;

என் உயிரைக் காப்பாற்றும்.

உமது பேரன்பை முன்னிட்டு

என்னை மீட்டருளும்.

5இறந்தபின் உம்மை நினைப்பவர்

எவருமில்லை; பாதாளத்தில்

உம்மைப் போற்றுபவர் யார்?

6பெருமூச்சினால் இளைத்துப் போனேன்;

ஒவ்வோர் இரவும் கண்ணீரில்

என் படுக்கை மிதக்கின்றது.

என் கட்டில் அழுகையால் நனைகின்றது.

7துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;

என் பகைவர் அனைவரின் காரணமாக

அது மங்கிப்போயிற்று.

8தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும்

என்னை விட்டு அகன்றுபோங்கள்;

ஏனெனில், ஆண்டவர் என்

அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.

9ஆண்டவர் என் விண்ணப்பத்தைக்

கேட்டருளினார்; அவர் என்

வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.

10என் எதிரிகள் யாவரும்

வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;

அவர்கள் திடீரென

நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.


6:1 திபா 38:1.