முதல் பகுதி (1-41)

நற்பேறு பெற்றோர்

1நற்பேறு பெற்றவர் யார்? – அவர்

பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்;

இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2ஆனால், அவர் ஆண்டவரின்

திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;

அவரது சட்டத்தைப்பற்றி

இரவும் பகலும் சிந்திப்பவர்;

3அவர் நீரோடையோரம் நடப்பட்ட

மரம் போல் இருப்பார்;

பருவகாலத்தில் கனிதந்து,

என்றும் பசுமையாய் இருக்கும்

அம்மரத்திற்கு ஒப்பாவார்;

தாம் செய்வதனைத்திலும்

வெற்றி பெறுவார்.

4ஆனால், பொல்லார் அப்படி இல்லை;

அவர்கள் காற்று அடித்துச் செல்லும்

பதரைப்போல் ஆவர்.

5பொல்லார் நீதித் தீர்ப்பின்போது

நிலைநிற்க மாட்டார்;

பாவிகள் நேர்மையாளரின்

மன்றத்தில் இடம் பெறார்.

6நேர்மையாளரின் நெறியை

ஆண்டவர் கருத்தில் கொள்வார்;

பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.


1:3 எரே 17:8.