அனைத்தையும் கடந்தவர் கடவுள்

1எலிகூ தொடர்ந்து கூறினான்:

2‘நான் இறைவன்முன் நேர்மை

யானவன்’ என நீர் சொல்வது

சரியென நினைக்கின்றீரா?

3‘நான் பாவம் செய்யாததனால்

எனக்கு என்ன ஆதாயம்?

எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர்.

4உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து

நான் பதில் அளிக்கின்றேன்;

5வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ!

உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!

6நீர் பாவம் செய்தால்,

அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்?

நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால்

அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?

7நீர் நேர்மையாய் இருப்பதால்

இவருக்கு நீர் அளிப்பதென்ன?

அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன?

8உம் கொடுமை உம்மைப்போன்ற

மனிதரைக் துன்புறுத்துகின்றது;

உம் நேர்மையும் மானிடர்க்கே

நன்மை பயக்கின்றது.

9கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்;

வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.

10ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை;

‘எங்கே என்னைப் படைத்த கடவுள்?

இரவில் பாடச் செய்பவர் எங்கே?

11நானிலத்தின் விலங்குகளைவிட

நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும்

வானத்துப் புள்ளினங்களை விட

நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?”

12அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்;

பொல்லார் செருக்கின் பொருட்டு

அவர் பதில் ஒன்றும் சொல்லார்.

13வீண் வேண்டலை

இறைவன் கண்டிப்பாய்க் கேளார்;

எல்லாம் வல்லவர் அதைக்

கவனிக்கவும் மாட்டார்.

14இப்படியிருக்க,

‘நான் அவரைப் பார்க்கவில்லை;

தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது.

நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;’

என்று நீர் கூறும்போது,

எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?

15இப்பொழுதோ,

‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை;

மனிதனின் மடமையை அவ்வளவாய்

அவர் நோக்குவதில்லை’ என எண்ணி,

16யோபு வெற்றுரை விளம்புகின்றார்;

அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.


35:6-8 யோபு 22:2-3.