2இன்றுகூட என் முறைப்பாடு
கசப்பாயுள்ளது;
நான் வேதனைக் குரல் எழுப்பியும்,
என் மேல் அவரது⁕ கை பளுவாயுள்ளது.
3அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென
நான் அறிய யாராவது உதவுவாரானால்,
நான் அவர் இருக்கையை அணுகுவேன்.
4என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;
என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.
5அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என
அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு
என்ன சொல்வார் என்பதையும்
நான் புரிந்து கொள்வேன்.
6மாபெரும் வல்லமையுடன்
அவர் என்னோடு வழக்காடுவாரா?
இல்லை; அவர் கண்டிப்பாக
எனக்குச் செவி கொடுப்பார்.
7அங்கே நேர்மையானவன்
அவரோடு வழக்காடலாம்;
நானும் என் நடுவரால்
முழுமையாக விடுவிக்கப்படுவேன்.
8கிழக்கே நான் சென்றாலும்
அவர் அங்கில்லை;
மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.
9இடப்புறம் தேடினும்
செயல்படுகிற அவரைக் காணேன்;
வலப்புறம் திரும்பினும்
நான் அவரைப் பார்த்தேனில்லை.
10ஆயினும் நான் போகும் வழியை
அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால்,
நான் பொன்போல் துலங்கிடுவேன்.
11அவர் அடிச்சுவடுகளை
என் கால்கள் பின்பற்றின;
அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.
12அவர் நா உரைத்த ஆணையினின்று
நான் விலகவில்லை;
அவர்தம் வாய்மொழிகளை
அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.
13ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால்,
யாரால் மாற்ற முடியும்? ஏனெனில்,
எதை அவர் விரும்புகிறாரோ
அதை அவர் செய்கிறார்.
14ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை
அவர் நிறைவேற்றுவார்;
இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.
15ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;
அவரைப்பற்றி நினைக்கையில்
திகிலடைகின்றேன்.
16இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;
எல்லாம் வல்லவர் என்னைக்
கலங்கச் செய்தார்.
17ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;
காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.