தீயோரின் தவிர்க்க முடியாத முடிவு

1அதற்குச் சூகாவியனான பில்தாது

சொன்ன பதில்:

2எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள

சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்?

சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.

3மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?

மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?

4சீற்றத்தில் உம்மையே நீர்

கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு

உலகம் கைவிடப்பட வேண்டுமா?

பாறையும் தன் இடம்விட்டு

நகர்த்தப்படவேண்டுமா?

5தீயவரின் ஒளி அணைந்துபோம்;

அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.

6அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்;

அவர்கள்மீது ஒளிரும் விளக்கு

அணைந்துபோம்.

7அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்;

அவர்களின் திட்டமே

அவர்களைக் கவிழ்க்கும்.

8அவர்களின் கால்களே

அவர்களை வலைக்குள் தள்ளும்;

அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.

9கண்ணி அவர்களின் குதிகாலைச்

சிக்கிப்பிடிக்கும்;

சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.

10மண்மீது அவர்களுக்குச் சுருக்கும்,

பாதையில் அவர்களுக்குப் பொறியும்

மறைந்துள்ளன.

11எப்பக்கமும் திகில்

அவர்களை நடுங்க வைக்கும்;

கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.

12பட்டினி அவர்களின் வலிமையை

விழுங்கிடும்; தீங்கு அவர்களின்

வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.

13நோய் அவர்களின் தோலைத் தின்னும்;

சாவின் தலைப்பேறு

அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.

14அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று

பிடுங்கப்படுவர்; அச்சம்தரும்

அரசன்முன் கொணரப்படுவர்.

15அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது;

அவர்களின் உறைவிடங்களில்

கந்தகம் தூவப்படுகின்றது.

16கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;

மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.

17அவர்களின் நினைவே அவனியில்

இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே

அவனுக்குப் பெயரே இல்லாது போம்.

18ஒளியிலிருந்து இருளுக்குள்

அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே

அவர்கள் துரத்தப்படுவர்.

19அவர்களின் இனத்தாரிடையே

அவர்களுக்கு வழிமரபும்

வழித்தோன்றலுமில்லை;

அவர்கள் வாழ்ந்த இடத்தில்

அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.

20அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது

மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.

21கொடியவரின் குடியிருப்பெல்லாம்

இத்தகையதே; இறைவனை

அறியாதவரின் நிலையும் இதுவே.


18:5-6 யோபு 21:17.