கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும்

1அதற்கு யோபு உரைத்த மறுமொழி;

2இதைப்போன்ற பலவற்றை

நான் கேட்டதுண்டு;

“புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.

3உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா?

வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?

4என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;

என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,

உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,

உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.

5ஆயினும், என் சொற்களால்

உங்களை வலுப்படுத்துவேன்;

என் உதட்டின் ஆறுதல்

உங்கள் வலியைக் குறைக்குமே!

6நான் பேசினாலும் என் வலி குறையாது;

அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.

7உண்மையில், கடவுளே!

இப்போது என்னை உளுத்திட வைத்தீர்;

என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.

8நீர் என்னை இளைக்கச் செய்தீர்;

அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று;

என் மெலிவு எழுந்து

எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.

9அவர் என்னை வெறுத்தார்;

வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்;

என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்;

என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.

10மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;

ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;

எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.

11இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்.

கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;

12நலமுடன் இருந்தேன் நான்;

தகர்த்தெறிந்தார் என்னை அவர்;

பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;

என்னையே தம் இலக்காக ஆக்கினார்.

13அவர் தம் வில்வீரர்

என்னை வளைத்துக் கொண்டனர்;

என் ஈரலை அவர் பிளந்து விட்டார்;

ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை

மண்ணில் சிந்தினார்.

14முகத்தில் அடியடியென்று

என்னை அடித்தார்;

போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.

15சாக்கு உடையை நான் என் உடலுக்குத்

தைத்துக் கொண்டேன்;

புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.

16அழுதழுது என் முகம் சிவந்தது;

என் கண்களும் இருண்டு போயின,

17இருப்பினும், வன்செயல்

என் கையில் இல்லை;

மாசு என் மன்றாட்டில் இல்லை.

18மண்ணே! என் குருதியை மறைக்காதே;

என் கூக்குரலைப் புதைக்காதே.

19இப்பொழுதும் இதோ!

என் சான்று விண்ணில் உள்ளது;

எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.

20என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே!

கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.

21ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல்,

அவர் மனிதர் சார்பாகக்

கடவுளிடம் பரிந்து பேசுவார்.

22இன்னும் சில ஆண்டுகளே உள்ளன;

பிறகு திரும்ப வரவியலா

வழியில் செல்வேன்.


16:19 யோபு 19:25.