2இதைப்போன்ற பலவற்றை
நான் கேட்டதுண்டு;
“புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.
3உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா?
வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?
4என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;
என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,
உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,
உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.
5ஆயினும், என் சொற்களால்
உங்களை வலுப்படுத்துவேன்;
என் உதட்டின் ஆறுதல்
உங்கள் வலியைக் குறைக்குமே!
6நான் பேசினாலும் என் வலி குறையாது;
அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.
7உண்மையில், கடவுளே!
இப்போது என்னை உளுத்திட வைத்தீர்;
என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.
8நீர் என்னை இளைக்கச் செய்தீர்;
அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று;
என் மெலிவு எழுந்து
எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.
9அவர் என்னை வெறுத்தார்;
வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்;
என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்;
என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.
10மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;
ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;
எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.
11இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்.
கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;
12நலமுடன் இருந்தேன் நான்;
தகர்த்தெறிந்தார் என்னை அவர்;
பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;
என்னையே தம் இலக்காக ஆக்கினார்.
13அவர் தம் வில்வீரர்
என்னை வளைத்துக் கொண்டனர்;
என் ஈரலை அவர் பிளந்து விட்டார்;
ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை
மண்ணில் சிந்தினார்.
14முகத்தில் அடியடியென்று
என்னை அடித்தார்;
போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.
15சாக்கு உடையை நான் என் உடலுக்குத்
தைத்துக் கொண்டேன்;
புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.
16அழுதழுது என் முகம் சிவந்தது;
என் கண்களும் இருண்டு போயின,
17இருப்பினும், வன்செயல்
என் கையில் இல்லை;
மாசு என் மன்றாட்டில் இல்லை.
18மண்ணே! என் குருதியை மறைக்காதே;
என் கூக்குரலைப் புதைக்காதே.
19இப்பொழுதும் இதோ!
என் சான்று விண்ணில் உள்ளது;
எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.
20என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே!
கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.
21ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல்,
அவர் மனிதர் சார்பாகக்
கடவுளிடம் பரிந்து பேசுவார்.
22இன்னும் சில ஆண்டுகளே உள்ளன;
பிறகு திரும்ப வரவியலா
வழியில் செல்வேன்.