1பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு

வாழ்நாளோ குறைவு;

வருத்தமோ மிகுதி.

2மலர்போல் பூத்து

அவர்கள் உலர்ந்து போகின்றனர்

; நிழல்போல் ஓடி

அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.

3இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?

தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?

4அழுக்குற்றதினின்று

அழுக்கற்றதைக் கொணர முடியுமா?

யாராலும் முடியவே முடியாது.

5அவர்களுடைய நாள்கள்

உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.

அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை

உம்மிடம் உள்ளது;

அவர்கள் கடக்க இயலாத

எல்லையைக் குறித்தீர்.

6எனவே அவர்களிடமிருந்து

உம் பார்வையைத் திருப்பும்;

அப்பொழுது, கூலியாள்கள்

தம் நாள் முடிவில் இருப்பது போல்,

அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.

7மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;

அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;

அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.

8அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,

அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,

9தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;

இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.

10ஆனால், மனிதர் மடிகின்றனர்;

மண்ணில் மறைகின்றனர்;

உயிர் போனபின் எங்கே அவர்கள்?

11ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;

ஆறும் வறண்டு காய்ந்துபோம்.

12மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;

வானங்கள் அழியும்வரை

அவர்கள் எழுவதில்லை;

அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.

13ஓ! என்னைப் பாதாளத்தில்

ஒளித்து வைக்கமாட்டீரா?

உமது சீற்றம் தணியும்வரை

மறைத்து வைக்கமாட்டீரா?

என்னை நினைக்க ஒருநேரம்

குறிக்கமாட்டீரா?

14மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?

எனக்கு விடிவு வரும்வரை,

என் போராட்ட நாள்களெல்லாம்

பொறுத்திருப்பேன்.

15நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;

உம் கைவினையாம் என்னைக்

காண விழைவீர்.

16அப்பொழுது, என் காலடிகளைக்

கணக்கிடுவீர்;

என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.

17என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;

என் குற்றத்தை மூடி மறைத்தீர்.

18ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;ம்

பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.

19கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;

நிலத்தின் மண்ணை வெள்ளம்

அடித்துப்போகும்; இவ்வாறே

ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.

20ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்;

ஒழிந்துபோவான் அவனும்;

அவனது முகத்தை உருக்குலைத்து,

விரட்டியடிப்பீர்.

21புதல்வர்கள் புகழ்பெறினும்

அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்

அதை அவன் கண்டான் இல்லை.

22அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;

அவன் புலம்புவது தன் பொருட்டே.