1பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு
வாழ்நாளோ குறைவு;
வருத்தமோ மிகுதி.
2மலர்போல் பூத்து
அவர்கள் உலர்ந்து போகின்றனர்
; நிழல்போல் ஓடி
அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.
3இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?
தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?
4அழுக்குற்றதினின்று
அழுக்கற்றதைக் கொணர முடியுமா?
யாராலும் முடியவே முடியாது.
5அவர்களுடைய நாள்கள்
உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை
உம்மிடம் உள்ளது;
அவர்கள் கடக்க இயலாத
எல்லையைக் குறித்தீர்.
6எனவே அவர்களிடமிருந்து
உம் பார்வையைத் திருப்பும்;
அப்பொழுது, கூலியாள்கள்
தம் நாள் முடிவில் இருப்பது போல்,
அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.
7மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;
அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;
அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.
8அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,
அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,
9தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;
இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.
10ஆனால், மனிதர் மடிகின்றனர்;
மண்ணில் மறைகின்றனர்;
உயிர் போனபின் எங்கே அவர்கள்?
11ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;
ஆறும் வறண்டு காய்ந்துபோம்.
12மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;
வானங்கள் அழியும்வரை
அவர்கள் எழுவதில்லை;
அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.
13ஓ! என்னைப் பாதாளத்தில்
ஒளித்து வைக்கமாட்டீரா?
உமது சீற்றம் தணியும்வரை
மறைத்து வைக்கமாட்டீரா?
என்னை நினைக்க ஒருநேரம்
குறிக்கமாட்டீரா?
14மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?
எனக்கு விடிவு வரும்வரை,
என் போராட்ட நாள்களெல்லாம்
பொறுத்திருப்பேன்.
15நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;
உம் கைவினையாம் என்னைக்
காண விழைவீர்.
16அப்பொழுது, என் காலடிகளைக்
கணக்கிடுவீர்;
என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.
17என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;
என் குற்றத்தை மூடி மறைத்தீர்.
18ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;ம்
பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.
19கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;
நிலத்தின் மண்ணை வெள்ளம்
அடித்துப்போகும்; இவ்வாறே
ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.
20ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்;
ஒழிந்துபோவான் அவனும்;
அவனது முகத்தை உருக்குலைத்து,
விரட்டியடிப்பீர்.
21புதல்வர்கள் புகழ்பெறினும்
அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்
அதை அவன் கண்டான் இல்லை.
22அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;
அவன் புலம்புவது தன் பொருட்டே.