கடவுளின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள யோபு தூண்டப்படல்

1அதற்கு நாமாவியனான

சோப்பார் சொன்ன மறுமொழி:

2திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா?

மிகுதியாகப் பேசுவதால்,

ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?

3உம் வீண் வார்த்தைகள் மனிதரை

வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது

உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?

4“என் அறிவுரை தூயது; நானும்

என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.

5ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை

உமக்கெதிராயத் திறக்கட்டும்” என

யாரேனும் அவரை வேண்டாரோ!

6அவரே ஞானத்தின் மறைபொருளை

உமக்கு அறிவிக்கட்டும்;

அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்;

கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை

மறந்தார் என்பதை அறிக!

7கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை

நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின்

எல்லையைக் கண்டுணர முடியுமா?

8அவை வானங்களை விட உயர்ந்தவை;

நீர் என்ன செய்வீர்?

அவை பாதாளத்தைவிட ஆழமானவை;

நீர் என்ன அறிவீர்?

9அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது;

ஆழ்கடலைவிட அகலமானது.

10அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும்,

அவைமுன் நிறுத்தினாலும்

அவரைத் தடுப்பார் யார்?

11ஏனெனில், அவர் மனிதரின்

ஒன்றுமில்லாமையை அறிவார்;

தீமையைக் காண்கின்றார்; ஆனால்,

அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.

12காட்டுக்கழுதைக்குட்டி

மனிதனாகப் பிறந்தால்,

அறிவிலியும் அறிவு பெறுவான்.

13உம்முடைய உள்ளத்தை

நீர் ஒழுங்குபடுத்தினால்,

உம்முடைய கைகளை

அவரை நோக்கி நீட்டுவீராக!

14உம் கையில் கறையிருக்குமாயின்

அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில்

தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.

15அப்போது உண்மையாகவே நாணமின்றி

உம் முகத்தை ஏறெடுப்பீர்;

நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.

16உம் துயரை நீர் மறந்துபோவீர்;

கடந்துபோன வெள்ளம்போல்

அதை நினைகூர்வீர்.

17உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்;

காரிருளால் மூடப்பட்டிருந்தாலும்

காலைபோல் ஆவீர்;

18நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;

சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;

19ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்;

உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;

20தீயோரின் கண்கள் மங்கிப்போம்;

அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்;

உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!