யோசியா வேற்றுத் தெய்வ வழிபாட்டை ஒழித்தல்
(2 குறி 34:3-7, 29-33)

1அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர்.
2அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார்.
3அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும் அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.
4அப்பொழுது அரசர் பாகாலுக்காகவும் அசேராவுக்காகவும் வானத்தின் படைத்திரள் அனைத்துக்காகவும் பயன்படுத்திய எல்லாக் கலன்களையும், தூயகத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி தலைமைக் குரு இல்க்கியாவுக்கும் துணைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டார். அவர் அவற்றை எருசலேமுக்கு வெளியே கிதரோன் வெளிகளில் சுட்டெரித்து, சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டு சென்றார்.
5அத்தோடு, யூதாவின் நகர்களிலும் எருசலேமைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த தொழுகை மேடுகளில் தூபம் காட்டுமாறு யூதா அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர்களை நீக்கினார். மேலும் பாகால், கதிரவன், நிலா, விண்மீன்கள், வானத்துப் படைத்திரள் அனைத்திற்கும் தூபம் காட்டியவர்களையும் நீக்கினார்.
6ஆண்டவரின் இல்லத்திலிருந்து அசேராவை அகற்றி எருசலேமுக்கு வெளியே உள்ள கிதரோன் நீரோடைக்குக் கொண்டு சென்றார். அங்கே அதைச் சுட்டெரித்துத் தூளாக்கி அத்தூளைப் பொது மக்களின் கல்லறைகளின்மேல் தூவுமாறு பணித்தார்.
7மேலும், ஆண்டவரின் இல்லத்திலிருந்த விலைஆடவரின் விடுதிகளையும், அசேராவுக்குத் தேவையான துணிகளை நெய்த பெண்களின் விடுதிகளையும் இடித்துத் தள்ளினார்.
8அவர் யூதா நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் எருசலேமுக்கு அழைத்துக் கொண்டார். மேலும், அவர் கேபா முதல் பெயேர்செபாவரை அர்ச்சகர்கள் தூபம் காட்டிவந்த எல்லாத் தொழுகை மேடுகளையும் மாசுபடுத்தினார். நகர வாயிலின் இடப்புறம், நகரின் ஆளுநனான யோசுவா நுழைவாயிலின் முகப்பில் எழுப்பியிருந்த தொழுகை மேடுகளையும் இடித்துத் தள்ளினார்.
9ஆயினும், தொழுகை மேடுகளின் அர்ச்சகர்கள் எருசலேமில் இருந்த ஆண்டவரது பலிபீடத்தை நெருங்காமல் தங்கள் சகோதரர்களோடு புளியாத அப்பங்களை உண்டு வந்தனர்.
10மேலும், மோலெக்கு சிலைக்கு எவனும் தன் மகனையோ மகளையோ பலியாக்காதவாறு, பென்இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கும் தொப்பேத்தையும் மாசுபடுத்தினார்.
11அவர், ஆண்டவரின் இல்லத்தின் வாயிலருகில் இருந்த நாத்தான்மெலேக்கு என்ற மேற்பார்வையாளன் அறையை அடுத்து, யூதா அரசர்களால் கதிரவனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைச் சிலைகளையும் அகற்றினார். கதிரவனின் தேர்களையோ நெருப்பில் சுட்டெரித்தார்.
12மேலும், யூதா அரசர்களால் ஆகாசின் மாடியறை மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், ஆண்டவரின் இல்லத்தின் இரண்டு முற்றங்களிலும் மனாசேயால் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும், அரசர் இடித்துத் தூளாக்கி அந்த இடிப்பாட்டைப் கிதரோன் நீரோடையில் கொட்டினார்.
13எருசலேமுக்குக் கிழக்கே, அழிவின் மலைக்குத் தெற்கே இருந்த தொழுகை மேடுகளை அவர் மாசுபடுத்தினார். இவை, சீதோனியரின் அருவருப்பான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் இழிபொருளான மில்க்கோமுக்கும் இஸ்ரயேலின் அரசர் சாலமோனால் கட்டப்பட்டவை.
14மேலும், அவர் சிலைத்தூண்களையும், அசேராக் கம்பங்களையும் வெட்டி வீழ்த்தி, அவ்விடங்களை மனித எலும்புகளால் நிரப்பினார்.
15இஸ்ரயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாம் பெத்தேலில் எழுப்பியிருந்த தொழுகை மேட்டையும் அதன் பலிபீடத்தையும், அவர் தகர்த்துத் தீக்கிரையாக்கினார்; அசேராவைத் தூள்தூளாக்கி நெருப்பிலிட்டார்.
16யோசியா திரும்பிப்பார்த்தபோது, அங்கு மலையின்மேல் கல்லறைகள் இருக்கக் கண்டார். அவர் ஆளனுப்பி அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவந்து, கடவுளின் அடியவர் உரைத்த ஆண்டவரின் வாக்கிற்கிணங்க, அவற்றைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து மாசுபடுத்தினார்.
17பின்பு அவர், “அதோ! அங்கு தெரியும் நினைவுச் சின்னம் யாருடையது?” என்று கேட்டார். அந்நகர மக்கள், “அது யூதா நாட்டைச் சார்ந்த கடவுளின் அடியவர் ஒருவரின் கல்லறை. நீர் பெத்தேலின் பலிபீடத்திற்கு இப்படியெல்லாம் செய்வீர் என்று உரைத்தவர் அவர் தான்” என்றனர்.
18அதற்கு அவர், “அப்படியே இருக்கட்டும். அவருடைய எலும்புகளை ஒருவனும் தொடவேண்டாம்” என்றார். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியவைச் சார்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் அங்கேயே விட்டு வைத்தனர்.
19ஆண்டவருக்குச் சினமுண்டாகுமாறு, இஸ்ரயேலின் அரசர்கள் சமாரிய நகர்களில் எழுப்பியிருந்த தொழுகைமேட்டுக் கோவில்களை எல்லாம் யோசியா அகற்றி, பெத்தேலில் செய்தவாறே அவற்றிற்கும் செய்தார்.
20அவர் அங்கிருந்த தொழுகைமேடுகளின் அர்ச்சகர் அனைவரையும் பலிபீடங்களின்மேல் கொன்றார். அப்பலிபீடங்களின்மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தபின், அவர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்.

யோசியா பாஸ்காவைக் கொண்டாடல்
(2 குறி 35:1-19)

21பிறகு, அரசர் மக்கள் எல்லோரையும் பார்த்து, “இவ்வுடன்படிக்கை நூலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.”
22இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்கிய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை.
23யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் எருசலேமில் ஆண்டவரின் பாஸ்கா கொண்டாடப்பட்டது.

யோசியா செய்த பிற சீர்திருத்தங்கள்

24குரு இல்க்கியா ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த நூலில் எழுதப்பட்டிருந்த திருச்சட்டத்தின் சொற்களை நிறைவேற்றும்படி, யூதா நாட்டிலும், எருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும், குலதெய்வங்களையும், சிலைகளையும், அருவருப்புகளையும் யோசியா அகற்றினார்.
25இவரைப் போல், தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் மோசேயின் சட்ட நூலுக்கேற்ப ஆண்டவர்பால் திரும்பிய அரசர் அவருக்குமுன் இருந்ததில்லை; அவருக்குப்பின் தோன்றியதுமில்லை.
26எனினும், மனாசே செய்திருந்த அனைத்தையும் முன்னிட்டு யூதாவின் மேல் ஆண்டவர் கடும் சினம் கொண்டிருந்தார்; அதாவது கொடிய சினம் இன்றும் தணியவில்லை.
27எனவே, ஆண்டவர், “நான் இஸ்ரயேலைப் போல் யூதாவையும் என் திருமுன்னின்று தள்ளவிடுவேன். நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரையும் ‘எனது பெயர் இங்கு விளங்கும்’ என்று நான் கூறின கோவிலையும் உதறித் தள்ளுவேன்” என்றார்.

யோசியா ஆட்சியின் முடிவு
(2 குறி 35:20-36:1)

28யோசியாவின் பிற செயல்களும் அவர் செய்தவை யாவும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
29அவரது காலத்தில் எகிப்து நாட்டின் மன்னன் நெக்கோ என்ற பார்வோன் அசீரிய அரசனை நோக்கிச் செல்கையில், யூப்பிரத்தீசு ஆற்றை வந்தடைந்தான். அப்பொழுது அரசர் யோசியா அவனைத் தாக்கப் புறப்பட்டு வந்தார். ஆனால், பார்வோன் மெகிதோவில் அவரோடு போரிட்டு அவரைக் கொன்றான்.
30அவருடைய பணியாளர் அவருடைய சடலத்தை மெகிதோவிலிருந்து எருசலேமுக்குத் தேரில் கொண்டுசென்று, அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தனர். பிறகு நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவகாசைத் தேர்ந்தெடுத்து, திருப்பொழிவு செய்து அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை அரசனாக்கினர்.

யூதா அரசன் யோவகாசு
(2 குறி 36:2-4)

31யோவகாசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவனுடைய தாய்.
32யோவகாசு தன் மூதாதையர்கள் செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
33அவன் எருசலேமில் அரசாளாதபடி ஆமாத்து நாட்டு இரிபலாவில் பார்வோன் நெக்கோ அவனைச் சிறையிலிட்டான். மேலும், யூதா நாடு நாலாயிரம் கிலோ வெள்ளியும், நாற்பது கிலோ பொன்னும் கப்பமாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டான்.
34பார்வோன் நெக்கோ யோசியாவின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரசனாக்கி, அவனுடைய பெயரை யோயாக்கிம் என்று மாற்றினான். பின்னர், அவனால் எகிப்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட யோவகாசு அங்கேயே இறந்தான்.

யூதா அரசன் யோயாக்கிம்
(2 குறி 36:5-8)

35பார்வோனின் கட்டளைப்படி வெள்ளியையும் பொன்னையும் செலுத்த எண்ணிய யோயாக்கிம் தன் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். அவரவர் நிலைக்கேற்ப, அவன் வெள்ளியும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி, அவற்றைப் பார்வோன் நெக்கோவுக்குச் செலுத்தினான்.
36யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் பதினோர் ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டான். ரூமாவைச் சார்ந்த பெதாயாவின் மகள் செபுதா என்பவளே அவனுடைய தாய்.
37யோயாக்கிம் தன் மூதாதையர் செய்த அனைத்தின்படியே, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

23:4-6 2 அர 21:3; 2 குறி 33:3. 23:10 லேவி 18:21; எரே 7:31; 19:1-6; 32:35. 23:12 2 அர 21:5; 2 குறி 33:5. 23:13 1 அர 11:7. 23:15 1 அர 12:33. 23:17 1 அர 13:30-32. 23:34 எரே 22:11-12. 23:36 எரே 22:18-19; 26:1-6; 35:1-19.
23:16 ‘இவ்வாறு நிகழுமென்று கடவுளின் அடியவர் உரைத்த’ என்பது எபிரேய பாடம். 23:16 1 அர 13:2.