1 அரசர்கள் முன்னுரை


‘1 & 2 சாமுவேல்’ என்னும் திருநூல்களில் இஸ்ரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. ‘1 & 2 அரசர்கள்’ என்னும் இந்நூல்கள் அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளன.

‘1 அரசர்கள்’ மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:

  1. இஸ்ரயேல் மக்களினம் முழுவதன் மேலும் சாலமோன் அரசுரிமை பெறுதல்; அவர் தந்தை தாவீது இறத்தல்.
  2. சாலமோனின் ஆட்சியும் மாட்சியும்; எருசலேமில் அவர் எழுப்பிய கோவிலின் சிறப்பு.
  3. நாடு தெற்கு வடக்கு என்ற இரண்டு அரசுகளாகப் பிரிதல்; அவற்றைக் கி.மு. 850 வரை ஆண்ட அரசர்களின் வரலாறு.

இவ்விரு நூல்களிலும் ஒவ்வொரு அரசனும் ஆண்டவருக்கு அவன் காட்டிய பற்றுறுதிக்கேற்ப, தீர்ப்பு வழங்கப்படுகிறான்; ஆண்டவரிடம் காட்டும் பற்றுறுதி நாட்டுக்கு வெற்றியைத் தருகின்றது; மாறாக, வேற்றுத் தெய்வ வழிபாடும் கீழ்ப்படியாமையும் அழிவையே கொணர்கின்றன. இந்த அளவுகோலின்படி வடநாட்டு அரசர்கள் எல்லாருமே தீயவழியில் நடந்தார்கள் என்றும், தென்னாட்டு அரசர்களில் சிலரும் அவ்வாறு நடந்தார்கள் என்றும் காட்டப்படுகிறது.

பல இறைவாக்கினர் சிலைவழிபாட்டினின்றும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமையினின்றும் மக்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களுள் எலியா தலைசிறந்தவராக இந்நூலில் காட்டப்படுகின்றார்.

நூலின் பிரிவுகள்

  1. தாவீது அரசரின் இறுதி நாள்கள் 1:1 - 2:12
  2. சாலமோன் அரசராதல் 2:13 - 46
  3. சாலமோனின் ஆட்சி 3:1 - 11:43
      அ) ஆட்சியின் முற்பகுதி 3:1 - 4:34
      ஆ) எருசலேம் கோவில் கட்டுதல் 5:1 - 8:66
      இ) ஆட்சியின் பிற்பகுதி 9:1 - 11:43
  4. பிளவுபட்ட நாடு 12:1 - 22:53
      அ) வடகுலங்களின் கிளர்ச்சி 12:1 - 14:20
      ஆ) யூதா-இஸ்ரயேல் அரசர்கள் 14:21 - 16:34
      இ) இறைவாக்கினர் எலியா 17:1 - 19:21
      ஈ) இஸ்ரயேல் அரசன் ஆகாபு 20:1 - 22:40
      உ) யோசபாத் அகசியா அரசர்கள் 22:41 - 53