2 சாமுவேல் முன்னுரை


‘1 சாமுவேல்’ என்னும் நூலின் தொடர்ச்சியான ‘2 சாமுவேல்’, அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. முதல் நான்கு அதிகாரங்கள், தெற்கே யூதாவின்மேல் அவர் ஆட்சி புரிந்ததையும், பின்னைய அதிகாரங்கள், வட பகுதியான இஸ்ரயேல் உட்பட நாடு முழுவதன்மேலும் அவர் ஆட்சி புரிந்ததையும் விரித்துரைக்கின்றன. தாவீது தம் அரசை விரிவுபடுத்தவும், தம் நிலையை உறுதிப்படுத்தவும் நாட்டிலுள்ள எதிரிகளோடும் வேற்றரசுகளோடும் போராடியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

தாவீது ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததோடு, தம் மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். இருப்பினும் சில நேரங்களில் தம் தவறான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எந்தப் பாவத்தையும் செய்யத் தயங்காதவராய் இருந்திருக்கிறார். ஆயினும், அவருடைய பாவங்களை இறைவாக்கினர் நாத்தான் அவருக்குச் சுட்டிக்காட்டியபோது, அவர் அவற்றை அறிக்கையிட்டுக் கடவுள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்.

தாவீதின் வாழ்க்கையும் அவர்தம் வெற்றிகளும் இஸ்ரயேல் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன. எனவேதான் பிற்காலத்தில் நாடு தொல்லைக்குட்பட்ட நேரங்களில், அவரைப்போல் தங்களுக்காகப் போராடக்கூடிய ‘தாவீதின் மகன்’ தங்களுக்கு அரசராய் மீண்டும் வரவேண்டுமென்று அவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

நூலின் பிரிவுகள்

  1. யூதாவின் மீது தாவீதின் ஆட்சி 1:1 - 4:12
  2. அனைத்து இஸ்ரயேலின் மீதும் தாவீதின் ஆட்சி 5:1 - 24:25
    • அ) முற்பகுதி 5:1 - 10:19
    • ஆ) தாவீதும் பத்சேபாவும் 11:1 - 12:25
    • இ) துன்பங்களும் தொல்லைகளும் 12:26 - 20:26
    • ஈ) பிற்பகுதி 21:1 - 24:25