மனந்திரும்ப அழைப்பு

1பண்புகெட்ட இனமே!

பகுத்தறிவோடு நடந்துகொள்.

2பதரைப்போல் நீங்கள்

தூற்றப்படுமுன்னே,

ஆண்டவரது கடும் சினம்

உங்கள் மேல் விழுமுன்னே,

ஆண்டவரது சினத்தின் நாள்

உங்கள்மேல் விழுமுன்னே,

3நாட்டிலிருக்கும் எளியோரே!

ஆண்டவரின் கட்டளையைக்

கடைப்பிடிப்போரே!

அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்;

நேர்மையை நாடுங்கள்;

மனத்தாழ்மையைத் தேடுங்கள்;

ஆண்டவரது சினத்தின் நாளில்

ஒரு வேளை உங்களுக்குப்

புகலிடம் கிடைக்கும்.

வேற்றினத்தாரின் அழிவு

4காசா குடியற்றுப்போகும்;

அஸ்கலோன் பாழடைந்துபோகும்;

அஸ்தோது நண்பகலில்

விரட்டியடிக்கப்படும்;

எக்ரோன் வேரோடு

பிடுங்கியெறியப்படும்.

5கடற்கரையில் வாழும்

இனத்தாராகிய கெரேத்தியரே!

உங்களுக்கு ஐயோ கேடு!

ஆண்டவரின் வாக்கு

உங்களுக்கு எதிராய் உள்ளது;

பெலிஸ்தியரின் நாடே! கானானே!

எவனும் குடியிராதபடி

நான் உன்னை அழித்து விடுவேன்.

6இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு

இடையரின் குடில்களுக்கும்

ஆடுகளின் பட்டிகளுக்குமே

ஏற்றதாகும்.

7அந்தக் கடற்கரை

யூதாவின் குடும்பத்தவருள்

எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்;

அங்கே அவர்கள்

தங்கள் ஆடுகளை மேய்த்து,

மாலையில் அஸ்கலோன் வீடுகளில்

படுத்திருப்பார்கள்;

ஏனெனில்

அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்

அவர்கள்மீது அக்கறை கொண்டு,

முன்னைய நன்னிலைக்கு

அவர்களை உயர்த்துவார்.

8மோவாபின் பழிப்புரைகளையும்

அம்மோனியரின் வசைமொழிகளையும்

நான் கேட்டேன்;

அவர்கள் என் மக்களை இழித்துரைத்து,

அவர்களின் நாட்டு

எல்லைகளைக் குறித்து

வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.

9ஆதலால், படைகளின் ஆண்டவரும்,

இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய

நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்;

மோவாபு சோதோமைப்போல் ஆகும்;

அம்மோனியர்

கொமோராவைப்போல் ஆவர்;

இது உறுதி.

இந்நாடுகள்

காஞ்சொறி படரும் காடாகவும்,

உப்புப் பள்ளம் நிறைந்த

பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும்.

என் மக்களில் எஞ்சியோர்

அவர்களைக் கொள்ளையடிப்பர்;

என் மக்களுள் தப்பியோர்

அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர்.

10அவர்களுடைய இறுமாப்புக்குக்

கிடைக்கும் பயன் இதுவே;

ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய

மக்களுக்கு எதிராக

அவர்கள் பழித்துரைத்தார்கள்;

வீம்பு பேசினார்கள்.

11ஆண்டவர் அவர்களை

அச்சமுறச் செய்வார்;

நாட்டின் தெய்வங்களை எல்லாம்

ஆற்றல் குன்றிப்போகச் செய்வார்.

வேற்றினத்தார் அனைவரும்

அவரவர்தம் தீவுகளில்

இருந்து கொண்டு

அவரையே வணங்குவர்.

12எத்தியோப்பியரே!

நீங்களும் எனது வாளால்

வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.

13வடதிசைக்கு எதிராகத்

தம் கையை ஓங்கி,

ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்;

நினிவே நகரைப் பாழடையச் செய்து,

வறண்ட பாலைநிலமாக்குவார்.

14அங்கே மந்தைகளும்

எல்லாவகை விலங்குகளும்

படுத்துக் கிடக்கும்;

தூண்களின் உச்சியில்

கூகையும் சாக்குருவியும்

தங்கியிருக்கும்;

பலகணியில் அமர்ந்தவாறு

ஆந்தை அலறும்;

நிலைக்கதவின்மேல் இருந்தவாறு

காகம் கரையும்;

கேதுரு மர வேலைப்பாடுகள்

அழிக்கப்படும்.

15“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்று

கவலையின்றிக் களிப்புற்றிருந்த

நகர் இதுதானோ?

இப்பொழுது அது

காட்டு விலங்குகளின் குகையாகி

எவ்வளவு பாழாய்ப் போயிற்று!

அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும்

சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.


2:4-7 எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7. 2:8-11 எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15. 2:9 தொநூ 19:24. 2:12 எசா 18:1-7. 2:13-15 எசா 10:5-34; 14:24-27; நாகூ 1:1-3:19.