இஸ்ரயேலின் அழிவு

1“சீயோன் குன்றின்மீது இன்பத்தில்

திளைத்திருப்போரே!

சமாரியா மலைமேல்

கவலையற்றிருப்போரே!

மக்களினங்களுள் சிறந்த இனத்தின்

உயர்குடி மக்களே!

இஸ்ரயேலின் மக்கள்

தேடி வருமளவுக்குப்

பெருமை வாய்ந்தவர்களே!

உங்களுக்கு ஐயோ கேடு!

2கல்னேக்குப் போய்ப் பாருங்கள்;

அங்கிருந்து சிறந்த நகரமாகிய

ஆமாத்துக்குப் போங்கள்;

பிறகு பெலிஸ்தியரின் நகரான

காத்துக்குச் செல்லுங்கள்;

அந்த அரசுகள்

உங்கள் அரசுகளை விடச்

சிறந்தவையோ?

உங்கள் நாடுகள்

அவர்களுடைய நாடுகளைவிடப்

பரப்பளவில் பெரியவையோ?

3தீய நாளை

இன்னும் தள்ளிவைப்பதாக

நீங்கள் நினைக்கின்றீர்கள்;

ஆனால் வன்முறையின் ஆட்சியை

அருகில் கொண்டு வருகின்றீர்கள்.

4தந்தத்தாலான கட்டிலில்

பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும்

கிடையிலிருந்து வரும்

ஆட்டுக் குட்டிகளையும்

மந்தையிலிருந்து வரும்

கொழுத்த கன்றுகளையும்

உண்போருக்கும் ஐயோ கேடு!

5அவர்கள் வீணையொலி எழுப்பி

அலறித் தீர்க்கின்றார்கள்,

தாவீதைப்போல

புதிய இசைக்கருவிகளைக்

கண்டுபிடிக்கின்றார்கள்.

6கோப்பைகளில்

திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்;

உயர்ந்த நறுமண எண்ணெயைத்

தடவிக்கொள்கின்றார்கள்.

7ஆகையால் அவர்கள்தான்

முதலில் நாடு கடத்தப்படுவார்கள்;

அவர்களது இன்பக் களிப்பும்

இல்லாதொழியும்.

8தலைவராகிய ஆண்டவர்

தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்;

படைகளின் கடவுளாகிய ஆண்டவர்

இவ்வாறு சொல்கிறார்:

யாக்கோபின் செருக்கை

நான் வெறுக்கிறேன்;

அவனுடைய கோட்டைகளை

அருவருக்கிறேன்.

நகரையும் அதிலுள்ள யாவரையும்

நான் கைவிட்டு விடுவேன்.

9ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.
10வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்; ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், “உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?” என்று கேட்க, அவன், “இல்லை” என்று பதில் சொல்லி “பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது” என்பான்.

11ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்;

பெரிய மாளிகைகளைத்

தரைமட்டமாக்குவார்;

சிறிய வீடுகளைத்

தவிடுபொடியாக்குவார்.

12பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ?

எருதுகளைக் கட்டிக்

கடலை உழுவதுண்டோ?

நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள்,

நேர்மையின் கனியை

எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.

13லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப்

பூரிப்பு அடைகிறீர்கள்;

‘நம் சொந்த வலிமையால்

கர்னாயிமைப் பிடித்து

நமதாக்கிக் கொள்ளவில்லையா?’ என்கிறீர்கள்.

14‘இஸ்ரயேல் வீட்டாரே!

உங்களுக்கு எதிராக

வேற்றினம் ஒன்றைத் தூண்டிவிடுவேன்.

அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து

அராபா நீரோடை வரையில்

உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்,’

என்கிறார் படைகளின் கடவுளாகிய

ஆண்டவர்.