துணை வேண்டும் மன்றாட்டு

1அழித்தொழிப்பவனே, உனக்கு

ஐயோ கேடு! நீ இன்னும்

அழித்தொழிக்கப்படவில்லையே!

நம்பிக்கைத் துரோகியே,

உனக்கு எவரும்

துரோகம் செய்யவில்லையா!

நீ அழித்தொழிப்பதை முடித்ததும்,

நீயும் அழிந்தொழிவாய்;

நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன்,

உனக்கும் துரோகம் செய்வார்கள்.

2ஆண்டவரே, எங்கள்மீது

இரக்கமாய் இரும்;

நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்;

அதிகாலைதோறும்

எங்களைக் காக்கும் கரமாகவும்,

துன்ப வேளைகளில் எங்களை

விடுவிப்பவராகவும் இருப்பீராக!

3ஆரவராப் பேரொலி கேட்க

மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன;

நீர் கிளர்ந்தெழும்போது

வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.

4பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல்

கொள்ளைப் பொருட்கள்

சேர்க்கப்படுகின்றன.

வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல்

அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.

5ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்;

ஏனெனில் அவர்

உன்னதத்தில் உறைகின்றார்;

சீயோனை அவர் நீதியாலும்

நேர்மையாலும் நிரப்புகின்றார்;

6உங்கள் காலத்தில் அவரே

பாதுகாப்பாய் இருப்பார்;

அவர் உங்களுக்கு

முழு விடுதலை வழங்கி

ஞானத்தையும் அறிவாற்றலையும்

நல்குவார்.

ஆண்டவரைப்பற்றிய அச்சமே

அவர்களது அரும்செல்வம்.

7இதோ! வலிமைமிக்க

அவர்களுடைய வீரர்கள்

வீதியில் நின்று கதறியழுகின்றனர்;

சமாதானத்தின் தூதர்

மனங்கசந்து அழுகின்றனர்.

8நெடுஞ்சாலைகளில்

ஆள் நடமாட்டம் இல்லை;

வழிப்பயணிகள்

கடந்து செல்வதும் இல்லை;

உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது;

ஒப்பந்தம் மீறப்படுகின்றது;

மனிதருக்கு மரியாதையே கிடையாது.

9நாடு புலம்பியழுது

சோர்ந்து போகின்றது;

லெபனோன் வெட்கி நாணித்

தளர்ச்சியடைகின்றது;

சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது;

பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.

பகைவருக்கு ஆண்டவரின் எச்சரிக்கை

10ஆண்டவர் கூறுகின்றார்:

இப்பொழுது நான் எழுந்தருள்வேன்;

இப்பொழுது என்னை

உயர்த்திக் கொள்வேன்;

இப்பொழுது என்னை

மாட்சிமைப் படுத்துவேன்.

11நீங்கள் பதரைக் கருத்தாங்கி,

வைக்கோலைப் பெற்றெடுத்தீர்கள்;

உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி

உங்களையே எரித்துவிடும்.

12சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல்

மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்;

முட்கள்போல் வெட்டுண்டு

நெருப்புக்கு இரையாவார்கள்.

13தொலையில் உள்ளோரே,

நான்செய்வதைக் கேளுங்கள்;

அருகில் உள்ளோரே,

என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.

14சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்;

இறைப்பற்றில்லாரைத்

திகில் ஆட்கொள்கின்றது.

சுட்டெரிக்கும் நெருப்பில்

நம்மில் எவர் தங்குவார்?

என்றென்றும் பற்றியெரியும் தழலில்

நம்மில் எவர் இருப்பார்?

15நீதிநெறியில் நடப்பவர்,

நேர்மையானவற்றைப் பேசுபவர்.

கொடுமைசெய்து பெற்ற

வருவாயை வெறுப்பவர்,

கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர்,

இரத்தப் பழிச் செய்திகளைச்

செவி கொடுத்துக் கேளாதவர்,

தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;

16அவர்களே உன்னதங்களில் வாழ்வர்;

கற்பாறைக் கோட்டைகள்

அவர்களது காவல்அரண் ஆகும்;

அவர்களுக்கு உணவு வழங்கப்படும்;

தண்ணீர் தரப்படுவதும் உறுதி.

மேன்மைமிகு வருங்காலம்

17அரசரை உங்கள் கண்கள்

அழகுமிக்கவராகக் காணும்;

பரந்து விரிந்த நாட்டை

நீங்கள் காண்பீர்கள்:

18திகிலைப்பற்றி உங்கள் மனம்

இவ்வாறு சிந்திக்கும்;

‘குடிக்கணக்குச் செய்தவன் எங்கே?

திறைப்பொருளை

நிறுத்துப் பார்த்தவன் எங்கே?

கோபுரங்களை

எண்ணிக்கை இட்டவன் எங்கே?

19உங்களுக்கு விளங்காத

குளறுபடியான பேச்சையும்

புரியாத வேற்றுமொழியையும் கொண்ட

காட்டுமிராண்டி மக்களை

நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.

20நம் விழாக்களின் நகரான

சீயோனைப் பார்;

அமைதியின் இல்லமாகவும்,

பெயர்க்கப்படாத முளைகளும்

அறுபடாத கயிறுகளும் கொண்ட

அசைக்க முடியாத கூடாரமாகவும்

எருசலேம் இருப்பதை

உங்கள் கண்கள் காணும்.

21ஏனெனில், அங்கே ஆண்டவர்

நமக்கெனத் தம் மாட்சியை

விளங்கச் செய்வார்;

அது அகன்ற ஆறுகளையும்

விரிந்த நீரோடைகளையும் உடைய

இடம் போன்றது;

துடுப்புப் படகு அங்குப் போவதில்லை;

மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.

22ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்;

ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்;

ஆண்டவரே நமக்கு வேந்தர்;

அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.

23உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்;

அவற்றால் பாய் மரத்தை

நிலையாய்ப் பிடிக்க இயலாது;

பாய் விரிக்கவும் முடியாது;

அப்பொழுது திரளான

கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்;

முடவரும் கொள்ளைப் பொருளைச்

சூறையாடுவர்.

24சீயோனில் வாழ்பவர் எவரும்

‘நான் நோயாளி’ என்று சொல்லமாட்டார்.

அதில் குடியிருக்கும் மக்களின்

தீச்செயல் மன்னிக்கப்படும்.