துன்புற்றவரின் மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா; நினைவு கூர்தலுக்காகப் பாடியது)

1ஆண்டவரே, என்மீது

சினங்கொண்டு

என்னைக் கண்டியாதேயும்;

என்மீது சீற்றங்கொண்டு

என்னைத் தண்டியாதேயும்;

2ஏனெனில், உம் அம்புகள்

என்னுள் பாய்ந்திருக்கின்றன;

உமது கை என்னை

அழுத்திக் கொண்டிருக்கின்றது.

3நீர் கடுஞ்சினங்கொண்டதால்

என் உடலில் நலமே இல்லை;

என் பாவத்தால் என் எலும்புகளில்

வலுவே இல்லை.

4என் குற்றங்கள் தலைக்குமேல்

போய்விட்டன;

தாங்கவொண்ணாச் சுமைபோல

அவை என்னை வெகுவாய்
அழுத்துகின்றன.

5என் புண்கள் அழுகி

நாற்றமெடுக்கின்றன;

என் மதிகேடுதான்

இதற்கெல்லாம் காரணம்.

6நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்;

நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.

7என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று;

என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.

8நான் வலுவற்றுப் போனேன்;

முற்றிலும் நொறுங்கிப் போனேன்;

என் உள்ளக் கொதிப்பினால்

கதறுகின்றேன்.

9என் தலைவரே, என் பெருமூச்செல்லாம்

உமக்குத் தெரியும்;

என் வேதனைக் குரல்

உமக்கு மறைவாயில்லை.

10என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது;

என் வலிமை என்னைவிட்டு அகன்றது;

என் கண்களும்கூட ஒளி இழந்தன.

11என் நண்பர்களும் தோழர்களும்

நான் படும் வாதை கண்டு

விலகி நிற்கின்றனர்;

என் உறவினரும் என்னைவிட்டு

ஒதுங்கி நிற்கின்றனர்.

12என் உயிரைப் பறிக்கத்தேடுவோர்

எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;

எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர்

என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்;

எப்போதும் எனக்கெதிராய்ச்

சூழ்ச்சி செய்கின்றனர்.

13நானோ செவிடர்போல் காது கேளாமலும்

ஊமைபோல் வாய் திறவாமலும்
இருக்கின்றேன்.

14உண்மையாகவே, நான்

செவிப்புலனற்ற மனிதர் போலும்

மறுப்புரை கூறாத

நாவினர் போலும் ஆனேன்;

15ஏனெனில் ஆண்டவரே,

நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்;

என் தலைவராகிய கடவுளே,

செவிசாய்த்தருளும்.

16‛அவர்கள் என்னைப் பார்த்துக்

களிக்க விடாதேயும்;

என் கால் தடுமாறினால் அவர்கள்

பெருமை கொள்வர்’ என்று சொன்னேன்.

17நான் தடுமாறிவிழும் நிலையில்

இருக்கின்றேன்;

நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.

18என் குற்றத்தை நான்

அறிக்கையிடுகின்றேன்;

என் பாவத்தின் பொருட்டு

நான் அஞ்சுகின்றேன்.

19காரணமின்றி என்னைப் பகைப்போர்

வலுவாய் உள்ளனர்;

வீணாக என்னை வெறுப்போர்

பலராய் உள்ளனர்;

20நன்மைக்குப் பதிலாக அவர்கள்

எனக்குத் தீமை செய்கின்றனர்;

நன்மையே நாடும் என்னைப்

பகைக்கின்றனர்;

21ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்;

என் கடவுளே!

என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.

22என் தலைவரே! மீட்பரே!

எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.