1இப்போது கூப்பிட்டுப்பாரும்!

யார் உமக்குப் பதிலுரைப்பார்?

எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?

2உண்மையில், அறிவிலியைத்தான்

எரிச்சல் கொல்லும்;

பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,

3அறிவிலி வேரூன்றுவதை

நானே கண்டேன்;

ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்

வெம்பழி விழுந்தது,

4அவனுடைய மக்களுக்குப்

பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்

அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;

மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.

5அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;

முள்ளுக்கு நடுவிலுள்ளதையும்

அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர்

அவன் சொத்துக்காகத் துடிப்பர்.

6ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;

மண்ணினின்று இன்னல் விளையாது.

7நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,

துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.

8ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;

அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.

9ஆராய முடியாப் பெரியனவற்றையும்

எண்ணிலடங்கா வியக்கத்

தக்கனவற்றையும் செய்பவர் அவரே.

10மண் முகத்தே மழையைப் பொழிபவரும்

வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.

11அவர் தாழ்ந்தோரை

மேலிடத்தில் அமர்த்துகின்றார்;

அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.

12வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;

அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.

13ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில்

சிக்க வைக்கின்றார்;

வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;

14அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;

நண்பகலிலும் இரவில்போல்

தடுமாறுகின்றனர்.

15அவர் வறியவரை அவர்களின்

வாயெனும் வாளினின்று காக்கின்றார்;

எளியவரை வலியவரின்

கையினின்று மீட்கின்றார்.

16எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;

அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

17இதோ! கடவுள் திருத்தும் மனிதர்

பேறு பெற்றோர்; ஆகவே,

வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.

18காயப்படுத்தினாலும்

கட்டுப்போடுபவர் அவரே;

அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.

19ஆறு வகை அல்லல்களினின்றும்

அவர் உம்மை மீட்பார்;

ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.

20பஞ்சத்தில் சாவினின்றும்

சண்டையில் வாள் முனையினின்றும்

உம்மை விடுவிப்பார்.

21நாவின் சொல்லடியினின்றும்

நீர் மறைக்கப்படுவீர்;

நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.

22அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;

மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.

23வயல்வெளிக் கற்களோடு

உம் உடன்படிக்கை இருக்கும்;

காட்டு விலங்குகளோடும்

நீர் அமைதியில் வாழ்வீர்.

24உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;

உம் மந்தையைச் சென்று காண்கையில்

ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.

25உமது வித்து பெருகுவதையும்,

உமது வழிமரபினர் நிலத்துப்

புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.

26பழுத்த வயதில் தளர்வின்றிக்

கல்லறை செல்வீர்,

பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.

27இதுவே யாம் கண்டறிந்த உண்மை!

செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுண‌ர்வீர்.


5:13 1 கொரி 3:19. 5:17 நீமொ 3:11; எபி 12:5-6. 5:18 ஓசே 6:1.