யூதாவின் அரசன் அமட்சியா
(2 அர 14:2-6)

1அமட்சியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்; எருசலேமைச் சார்ந்த எயோயதான் என்பவளே அவன் தாய்.
2ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதையே அவன் செய்தான்; இருப்பினும், முழு மனத்துடன் அவ்வாறு செய்யவில்லை.
3அவனது அரசை வலுப்படுத்தியபின் தன் தந்தையான அரசனைக் கொன்ற அலுவலர்களைக் கொலை செய்தான்.
4புதல்வர் பொருட்டுத் தந்தையரும், தந்தையர் பொருட்டுப் புதல்வரும் இறக்கக்கூடாது; மாறாக அவனவன் தனது பாவத்தின் பொருட்டே இறக்கவேண்டும் என்ற மோசேயின் திருச்சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள ஆண்டவரின் கட்டளைப்படி, அவர்களின் புதல்வர்களை அவன் கொல்லவில்லை.

ஏதோமுடன் போர்
(2 அர 14:7)

5பின்னர், அமட்சியா யூதா மக்களை ஒன்று திரட்டி, யூதா, பென்யமின் நாடெங்கும் மூதாதையரின் குடும்பங்கள் வாரியாக ஆயிரத்தவர் தலைவர்களையும், நூற்றுவர் தலைவர்களையும் ஏற்படுத்தினான். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களை அவன் ஒன்றுசேர்த்தபோது கேடயம் தாங்கிப் போரிடும் வேல்வீரர் மூன்று இலட்சம் பேர் இருந்தனர்.
6இஸ்ரயேல் நாட்டிலிருந்து ஒர் இலட்சம் போர் வீரரை நாலாயிரம் கிலோகிராம்* வெள்ளிக்கு அமர்த்தினான்.
7அப்பொழுது கடவுளின் மனிதர் ஒருவர் அவனிடம் வந்து, “அரசே! இஸ்ரயேல் படையினர் உம்மோடு செல்லக்கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலோடு இல்லை! எப்ராயிம் புதல்வரோடும் இல்லை!
8ஆனால், அப்படிச் சென்று போரில் வலிமை வாய்ந்தவராகத் திகழலாம் என்று நீர் கருதினால், கடவுள் உம்மை எதிரிகள்முன் வீழ்த்துவார்; ஏனெனில், உதவி புரியவும், வீழ்ச்சியுறச் செய்யவும் கடவுளுக்கு ஆற்றல் உண்டு” என்றார்.
9அப்பொழுது அமட்சியா கடவுளின் மனிதரை நோக்கி, “இஸ்ரயேலின் படைக்கு நான் கொடுத்துள்ள நாலாயிரம் கிலோகிராம் வெள்ளி வீணாகுமே!” என்றான். அதற்குக் கடவுளின் மனிதர், “ஆண்டவரால் இதைவிட மிகுதியாக உனக்குக் கொடுக்க முடியும்” என்றார்.
10பின்னர், அமட்சியா எப்ராயிமிலிருந்து வந்த போர்ப்படையைப் பிரித்து, அவர்கள் இடத்திற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் யூதாவின்மீது கடுஞ்சினமுற்று, கோபக்கனலுடன் தங்கள் நாடு திரும்பினர்.

அமட்சியாவின் நம்பிக்கைத் துரோகம்

11பின்னர், அமட்சியா தன்னை வலுப்படுத்திக்கொண்டு, உப்புப் பள்ளத்தாக்கிற்குத் தன் மக்களை அழைத்து சென்றான். அங்கே சேயீர் புதல்வருள் பத்தாயிரம் பேரைக் கொன்றான்.
12யூதாவின் புதல்வர் மற்றுமொரு பத்தாயிரம் பேரை உயிரோடு பிடித்து ஒரு குன்றின் உச்சிக்குக் கொண்டு சென்று, அவர்களை அங்கிருந்து கீழே தள்ள, அவர்கள் நொறுக்கப்பட்டனர்.
13இதற்கிடையில் அமட்சியா தன்னோடு போருக்கு அழைத்துச் செல்லாமல் திருப்பி அனுப்பிய போர் வீரர்கள் சமாரியா முதல் எபத்கோரோன் வரையிலுள்ள யூதா நகர்களைச் சூறையாடினர்; மூவாயிரம் பேரைக் கொன்றதுடன் மிகுந்த பொருள்களையும் கொள்ளையடித்தனர்.
14அமட்சியா, ஏதோமியரை முறியடித்து சேயீர் புதல்வர்களின் தெய்வச் சிலைகளைக் கொண்டு வந்தான்; தன் தெய்வங்களாக அவற்றை நிறுத்தி வைத்து, அவற்றின் முன்பாகப் பணிந்து, அவற்றுக்குத் தூபம் காட்டினான்.
15எனவே, ஆண்டவர் அமட்சியாவின் மீது கடுஞ்சினமுற்று, அவனிடம் ஓர் இறைவாக்கினரை அனுப்பினார். அவர் அமட்சியாவை நோக்கி, “தங்கள் மக்களை உம் கையினின்று காப்பாற்ற இயலாத தெய்வங்களில் நாட்டம் கொண்டது ஏன்?” என்று கேட்டார்.
16இவ்வாறு, அவர் பேசிக்கொண்டிருக்கையில் அமட்சியா அவரை நோக்கி, “அரசருக்கு ஆலோசகனாக உன்னை நானா நியமித்தேன்? நிறுத்து! நீ ஏன் வீணாக சாக வேண்டும்?” என்றான். இறைவாக்கினரும் சற்று நிறுத்தி, பின் அமட்சியாவை நோக்கி, “எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவ்வாறு செய்ததனால் கடவுள் உன்னை அழிக்க முடிவு செய்திருப்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.

இஸ்ரயேலுடன் போர்
(2 அர 14:8-20)

17பின்னர், அமட்சியா ஆலோசனை செய்து, ஏகூவின் மகன் யோவகாசுக்குப் பிறந்த யோவாசு என்ற இஸ்ரயேலின் அரசனிடம், “வாரும், நாம் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம்” என்று சவால் விட்டான்.
18இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவுக்கு ஆளனுப்பி, “லெபனோன் முட்செடி, லெபனோன் கேதுரு மரத்திடம் தூது அனுப்பி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக்கொடு என்று கேட்டதாம்; அப்பொழுது லெபனோன் காட்டு விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் அம் முட்செடியை மிதித்துப் போட்டதாம்!
19ஏதோமை நீர் முறியடித்ததனால், உம் இதயம் தற்பெருமை கொண்டு எழுகிறது; இப்பொழுது நீர் உம் வீட்டிலேயே இரும்! நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி, தீமையை நீர் ஏன் தேடிக்கொள்ள வேண்டும்?” என்று பதிலளித்தான்.
20ஆனால், அமட்சியா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஏதோமின் தெய்வங்களை அவன் வழிபட்டு வந்ததனால், அவனை எதிரிகளின் கையில் ஒப்பவிக்கக் கடவுள் திட்டமிட்டிருந்தார்.
21ஆகவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குக் புறப்பட்டு வர, அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவின் பெத்செமேசில் நேருக்கு நேர் மோதினர்.
22யூதாவினர் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டு, அவரவர் தம் கூடாரத்திற்கு ஓடினர்.
23யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியாவை யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு பெத்செமேசில் சிறைப்பிடித்து, எருசலேமுக்கு இட்டுச் சென்றான். எப்ராயிம் வாயில் தொடங்கி மூலைவாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு எருசலேம் மதிலை யோவாசு இடித்துத் தள்ளினான்.
24கடவுளின் இல்லத்தில் ஓபேது-ஏதோமின் பொறுப்பில் இருந்த அனைத்துப் பொன், வெள்ளி, அனைத்துக் கலன்கள், அரண்மனையின் கருவூலங்களில் இருந்தவை ஆகியவற்றைக் கொள்ளையடித்தான்; பிணைக் கைதிகளையும் சமாரியாவுக்கு இட்டுச் சென்றான்.

அமட்சியாவின் முடிவு

25யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு இறந்த பின்னும் யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தான்.
26அமட்சியாவின் பிற செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா, இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
27அமட்சியா ஆண்டவரைப் புறக்கணித்த காலம் முதல் எருசலேமில் அவனுக்கெதிராகச் சதி உருவானது; அவன் இலாக்கிசுக்குத் தப்பியோட, அங்கேயும் அவர்கள் ஆள்களை அனுப்பி அவனைக் கொன்றனர்.
28அவன் உடலைக் குதிரைகளால் எடுத்துச் சென்று, யூதாவின் நகரில் அவன் மூதாதையருடன் அடக்கம் செய்தனர்.

25:4 இச 24:16.
25:6 ‘நூறு தாலந்து’ என்பது எபிரேய பாடம்.