5ஆண்டவர் கூறுகின்றார்;
திடுக்கிடச் செய்யும் ஒலியை
நான் கேட்கின்றேன்;
அது அச்சத்தின் ஒலி;
சமாதானத்தின் ஒலி அன்று.
6‘ஆண்மகன் எவனாவது
பிள்ளை பெற்றதுண்டா?’ என்று
கேட்டுப் பாருங்கள்.
அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும்
பேறுகாலப் பெண்ணைப்போலத்
தன் இடுப்பில் கையை
வைத்துக் கொண்டிருப்பதை
நான் ஏன் காண்கிறேன்?
எல்லா முகங்களும் மாறிவிட்டன;
அவை வெளிறிப்போய்விட்டன!
7அந்தோ! அந்த நாள் பெரிய நாள்;
மற்றெந்த நாளும்
அதைப் போன்றில்லை.
யாக்கோபுக்கு அது
வேதனையின் காலம்;
ஆனால் அதனின்று
அவன் விடுவிக்கப்பெறுவான்.
10என் ஊழியன் யாக்கோபே,
அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே,
என்கிறார் ஆண்டவர்.
தொலை நாட்டினின்று
உன்னை நான் மீட்பேன்;
அடிமைத்தன நாட்டினின்று
உன் வழிமரபினரை விடுவிப்பேன்.
யாக்கோபு திரும்பிவந்து
அமைதியில் இளைப்பாறுவான்;
அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
11நான் உன்னோடு இருக்கின்றேன்;
உன்னை மீட்பதற்காக உள்ளேன்,
என்கிறார் ஆண்டவர்.
எந்த மக்களினத்தார் இடையே
நான் உன்னைச் சிதறடித்தேனோ
அவர்கள் அனைவரையும்
முற்றிலும் அழித்தொழிப்பேன்;
உன்னையோ முற்றிலும்
அழிக்கமாட்டேன்;
உன்னை நீதியான முறையில்
தண்டிப்பேன்;
உன்னைத் தண்டிக்காமல்
விட்டுவிடமாட்டேன்;
உன்னை எவ்வகையிலேனும்
தண்டியாதுவிடேன்.
12ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;
உனது காயத்தைக்
குணப்படுத்த முடியாது;
உனது புண் புரையோடிப்போனது.
13உனக்காக வாதிட எவனும் இல்லை;
உனது காயத்தை ஆற்ற
மருந்தே இல்லை;
உன்னைக் குணப்படுத்தவே முடியாது.
14உன் காதலர் அனைவரும்
உன்னை மறந்துவிட்டனர்;
உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;
மாற்றான் தாக்குவது போல
நான் உன்னைத் தாக்கினேன்;
கொடியோன் தண்டிப்பதுபோல
நான் உன்னைத் தண்டித்தேன்;
ஏனெனில் உனது குற்றம் பெரிது;
உன் பாவங்களோ எண்ணற்றவை.
15நீ நொறுக்கப்பட்டதை எண்ணி
ஏன் அழுகின்றாய்?
உனது வேதனையைத் தணிக்கமுடியாது;
ஏனெனில் உனது குற்றமோ பெரிது;
உன் பாவங்களோ எண்ணற்றவை;
எனவே இவற்றை எல்லாம்
நான் உனக்குச் செய்தேன்.
16ஆயினும், உன்னை விழுங்குவோர்
எல்லாரும் விழுங்கப்படுவர்;
உன் பகைவர் எல்லாரும்
ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;
உன்னைக் கொள்ளையடிப்போர்
அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்;
உன்னைச் சூறையாடுவோர்
அனைவரும், நான் கையளிக்க,
சூறையாடப்படுவர்.
17நான் உனக்கு நலம் அளிப்பேன்;
உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,
என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று
உன்னை அழைத்தார்கள்;
‘இந்தச் சீயோனைப் பற்றிக்
கவலைப்படுவார் யாருமிலர்’,
என்றார்கள்.
18ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;
அடிமைத் தனத்தினின்று
நான் யாக்கோபின் கூடாரங்களை
திரும்பக் கொணர்வேன்;
அவனுடைய உறைவிடங்கள்மீது
நான் இரக்கம் காட்டுவேன்;
அவற்றின் இடிபாடுகள்மேலேயே
நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்;
அரண்மனையும் அதற்குரிய
இடத்திலேயே அமைக்கப்படும்.
19அவர்களிடமிருந்து
நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;
மகிழ்ச்சியுறுவோரின்
ஆரவாரம் கேட்கும்.
அவர்களை நான்
பல்கிப் பெருகச் செய்வேன்;
அவர்கள் எண்ணிக்கையில்
குறைய மாட்டார்கள்.
நான் அவர்களைப்
பெருமைப் படுத்துவேன்;
இனி அவர்கள்
சிறுமையுற மாட்டார்கள்.
20அவர்களுடைய பிள்ளைகள்
முன்புபோல் இருப்பர்;
அவர்களது கூட்டமைப்பு
என் திருமுன் நிலை நாட்டப்படும்;
அவர்களை ஒடுக்குவோர்
அனைவரையும் தண்டிப்பேன்.
21அவர்களின் தலைவன்
அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;
அவர்களை ஆள்பவன்
அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;
அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;
அவனும் என்னை அணுகிவருவான்;
ஏனெனில், என்னை அணுகிவர
வேறு யாருக்குத் துணிவு உண்டு?,
என்கிறார் ஆண்டவர்.
22நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;
நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
23இதோ ஆண்டவரின் புயல்!
அவரது சினம்
சூறாவளிபோல் சுழன்றெழும்.
அது தீயோரின் தலையைத் தாக்கிச்
சுழன்றடிக்கும்.
24ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள
திட்டங்கள் அனைத்தையும்
செயல்படுத்தி நிறைவேற்றாமல்
அவரது வெஞ்சினம் திரும்பிவராது;
வரவிருக்கும் நாள்களில்
அதை நீங்கள் உணர்வீர்கள்.