1ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு
என்னைக் கண்டியாதேயும்;
என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு
என்னைத் தண்டியாதேயும்.
2ஆண்டவரே, எனக்கு இரங்கும்;
ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;
ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;
ஏனெனில், என் எலும்புகள்
வலுவிழந்து போயின.
3என் உயிர் ஊசலாடுகின்றது;
ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
4ஆண்டவரே, திரும்பும்;
என் உயிரைக் காப்பாற்றும்.
உமது பேரன்பை முன்னிட்டு
என்னை மீட்டருளும்.
5இறந்தபின் உம்மை நினைப்பவர்
எவருமில்லை; பாதாளத்தில்
உம்மைப் போற்றுபவர் யார்?
6பெருமூச்சினால் இளைத்துப் போனேன்;
ஒவ்வோர் இரவும் கண்ணீரில்
என் படுக்கை மிதக்கின்றது.
என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
7துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;
என் பகைவர் அனைவரின் காரணமாக
அது மங்கிப்போயிற்று.
8தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும்
என்னை விட்டு அகன்றுபோங்கள்;
ஏனெனில், ஆண்டவர் என்
அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.
9ஆண்டவர் என் விண்ணப்பத்தைக்
கேட்டருளினார்; அவர் என்
வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
10என் எதிரிகள் யாவரும்
வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;
அவர்கள் திடீரென
நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.