27 சனவரி 2021, புதன்

வல்லமைமிக்க இறைவார்த்தை

பொதுக்காலம் மூன்றாம் வாரம் புதன்கிழமை


I எபிரேயர் 10: 11-18
II மாற்கு 4: 1-20

வல்லமைமிக்க இறைவார்த்தை


மிகப்பெரிய பொக்கிஷம் திருவிவிலியம்

தன்னிடம் மறைக்கல்வி பயின்ற, ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புவரை உள்ள மாணவர்களிடம் ஆசிரியை திருமதி மிரியம், ‘என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் (புதையல்)’ என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு ஒரு கட்டுரை எழுதிவரச் சொன்னார்.

மறைக்கல்வி வகுப்பிலிருந்து திரும்பிய சிறுவன் அன்பு, தன் பெற்றோரிடம் ‘என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம்’ என்ற தலைப்பில் மறைக்கல்வி ஆசிரியர் ஒரு பக்கத்திற்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறார். எதைப் பற்றி எழுதுவது?” என்று கேட்டபொழுது, அவனுடைய பெற்றோர், “எது உனக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகத் தோன்றுகின்றதோ, அதைப் பற்றி எழுது” என்று சொல்லி அனுப்பி வைத்தனர். இதற்குப் பிறகு தன் அறைக்குள் வந்த சிறுவன் அன்பு, தனக்கு எது மிகப்பெரிய பொக்கிஷமாகத் தோன்றியதோ, அதைப்பற்றி எழுதித் தன் பெற்றோரிடம் காட்டினான். அதை அவர்கள் படித்துப் பார்த்தபொழுது, அதன் முதல்வரி, “என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் திருவிவிலியம்” என்று தொடங்கியிருந்ததைக் கண்டு வியந்து, அவனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

‘என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் திருவிவிலியம்’ என்று சிறுவன் அன்பு எழுதிய வார்த்தைகள்தான் எவ்வளவு உணர்வுப்பூர்வமானவை. இன்றைய இறைவார்த்தை மிகப்பெரிய பொக்கிஷமான கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடப்பதால், ஒருவர் எத்தகைய ஆசியைப் பெறுகிறார் என்பதையும், இறைவார்த்தையைக் கேளாமலும், கேட்டு அதன்படி நடக்காமலும் போகும்போது அவர் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்திக்கின்றார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது.

திருவிவிலியப் பின்னணி:

நற்செய்தியில் இயேசு கிறிஸ்து விதைப்பவர் உவமையைப் பற்றிப் பேசுகின்றனர். இந்த உவமையில் இடம்பெறும் நான்கு வகையான நிலங்களை, பலன் தரும் நிலம், பலன் தரா நிலம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்த இரண்டு வகையான நிலங்களையும் இரண்டு வகையான மனிதர்களாகப் பிரிக்கலாம். இறைவார்த்தையைக் கேளாமலும், ஒருவேளை கேட்டாலும் அதன்படி நடவாமலும் இருப்பவர் ஒரு வகையினர். இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர் இரண்டாவது வகையினர். இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரோ மிகுந்த பலன் தருபவர்களாக இருக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்” என்று தூய ஆவியார் சான்று பகர்வதைக் குறித்து வாசிக்கின்றோம். ஒருவருடைய உள்ளத்தில் பதிக்கப்பட்ட ஆண்டவரின் சட்டத்தின்படி, அவருடைய வார்த்தையின்படி அவர் நடவாமல் இருக்கும்பொழுது, அது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பு? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 மனிதர்கள் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் திருவிவிலியத்தில் தீர்வு இருக்கின்றது – ரொனால்ட் ரீகன்.

 கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்குப் புதிய புதிய வழிகளைக் கண்டு பிடியுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்.

 மந்திரக்கோலை அசைப்பதால் இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை வந்துவிடுவதில்லை; இறைவார்த்தையைக் கேட்பதால் மட்டுமே, அவர்மீது நம்பிக்கை வரும் – ஜான் பைபர்.

இறைவாக்கு:

‘நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடதானே உள்ளன’ (யோவா 6: 68) என்பார் பேதுரு. எனவே, நாம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.