தியாகத் தடங்கள்
சிலுவைப் பாதை நம் வாழ்வின் பாதை. கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரது மனநிலையை நமது மனநிலையாக்கி அவருக்குகந்த சீடராக வாழ நமக்கு அழைப்பு விடுப்பதுதான் சிலுவைப்பாதை. சிலுவைப்பாதை துன்பத்தின் பாதை என்ற மனநிலை மாறி, நம்மை கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழ அழைப்பு விடுக்கும் பாதை என்ற சிந்தனை நம்மை ஆட்கொள்ள வேண்டும். பதினோறு சிலுவைப்பாதைகள், பல்வேறு சமூகச் சூழலில், பலதரப்பட்ட மக்களின் சிந்தனையை தூண்டும் வண்ணம் எழுதப்பட்ட சிலுவைப்பாதைகளின் தொகுப்பு நூல். சமூகம், அன்பு, உறவு, மீட்பு, பெண்ணியம் என்று பல்வேறு நிலைகளில் பயன்தரும் அருமையான எண்ணங்கள் அடங்கிய சிலுவைப்பாதைகள். மறைதிரு. ஜா. அமிர்தராச சுந்தர் பெரும்பாலான சிலுவைப்பாதைகளை எழுதி தொகுத்துள்ளார். அவரோடு இணைந்து முனைவர். தே. ஜாண், அருட்சகோ. சாந்தி, மறைதிரு. ஜா. அடைக்கல ராசா அவர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். புனித வார திருவழிப்பாடுகளை பக்தியோடும், விளக்கவுரைகளும், மறையுரை சிந்தனைகளும் இதில் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் தவக்காலத்தில் தூய வாழ்வு வாழ இப்புத்தகம் பெரிதும் உதவும். மறைதிரு. ஜா. அமிர்தராச சுந்தர் அவர்கள், பாளையங்கோட்டையில் நினைவில் வாழும் முனைவர். தே. ஜாண், திருமதி பிலோமின் அவர்களின் மகனாக 1964 - ஆம் ஆண்டு பிறந்து 1981 முதல் 1990 வரை திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரியில் படித்து 1990 - ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஊத்துமலை, வீரவநல்லூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பங்குகளில் பங்குப் பணியாளராகப் பணிசெய்து தற்போது தென்காசி மறைமாவட்ட அதிபராகவும், தூய மிக்கேல் திருத்தலப் பங்குப் பணியாளராகவும் பணிசெய்து கொண்டிருக்கிறார்.
|