Chapter: Verses:
Start  End 
 
 
 
 
  Example: To input அன்பு
type anbu or to input
ஆண்டவரே type ANdavarE
Find us on

Tamil Catholic Holy Bible online
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு

செப்பனியா

முன்னுரை

கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செப்பனியா இறைவாக்கு உரைத்தார். அவர் இறைவாக்கு உரைத்த காலம் யோசியா அரசன் கி.மு. 621 இல் செயல்படுத்திய சமயச் சீர்திருத்தத்திற்கு முன்னைய பத்தாண்டாக இருக்கலாம்.

ஏனைய இறைவாக்கு நூல்களில் மிகுதியாகக் காணப்படும் கருத்துக்களையே இந்நூலும் கொண்டுள்ளது: அழிவின் நாள் நெருங்கிவிட்டது; அப்பொழுது யூதா வேற்றுத் தெய்வங்களை வழிபட்டதற்காகத் தண்டிக்கப்படும்; எருசலேம் அழிவுற்றாலும் மீண்டும் ஒரு நாள் முன்னைய நன்னிலைக்கு உயர்த்தப்படும்; பணிவும் நேர்மையும் மிக்க மக்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.

நூலின் பிரிவுகள்
  1. ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் 1:1 - 2:3
  2. வேற்றினத்தாரின் அழிவு 2:4 - 15
  3. எருசலேமின் அழிவும் மீட்பும் 3:1 - 20


அதிகாரம் 1
1 ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்வரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியாவின் மைந்தர் ஆவார். 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.
ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள்
2 "மண்ணுலகில் எதுவும் இராதவாறு 3 அனைத்தையும் அழித்துவிடுவேன்," என்கிறார் ஆண்டவர். "மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்; வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்; கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்; மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன்," என்கிறார் ஆண்டவர். 4 யூதாவுக்கும் எருசலேமில் வாழும் அனைவர்க்கும் எதிராக நான் கையை ஓங்குவேன். பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன். 5 வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன். 6 ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும் ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது இருப்போரையும் அழித்துவிடுவேன். 7 தலைவராகிய ஆண்டவர் திருமுன் மௌனமாயிருங்கள்; ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்; தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார் 8 ஆண்டவரது பலியின் நாளில் தலைவர்களையும் அரசனுடைய புதல்வர்களையும் வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன். 9 வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து, தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்பேன். 10 ஆண்டவர் கூறுகின்றார்: "அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும், புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும். 11 நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே! கதறி அழுங்கள்; ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது; பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்; 12 அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்; 'ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார்' என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன். 13 அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்; வீடுகள் பாழாக்கப்படும்; அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்வார்கள்; ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை; திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை." 14 ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது; அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்; மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும். 15 அந்த நாள் கடும் சினத்தின் நாள்; துன்பமும் துயரமும் நிறைந்த நாள்; பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்; இருட்டும் காரிருளும் கவிந்த நாள்; 16 அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள். 17 மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்; பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்; சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும். 18 ஆண்டவரது சினத்தின் நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும் அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார்.
BodyTop