ஆட்டுக்குட்டியும் சுருளேடும்

1அரியணையில் வீற்றிருந்தவரது வலக்கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது; அது ஏழு முத்திரை பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது.
2“முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.
3நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை.
4சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.
5அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார்” என்று கூறினார்.
6அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே.
7ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது.
8அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள்.
9அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:

“ஏட்டை எடுக்கவும்

அதன் முத்திரைகளை

உடைத்துப் பிரிக்கவும்

தகுதி பெற்றவர் நீரே.

நீர் கொல்லப்பட்டீர்;

உமது இரத்தத்தால்

குலம், மொழி, நாடு, மக்களினம்

ஆகிய அனைத்தினின்றும்

மக்களைக் கடவுளுக்கென்று

விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.

10ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும்

குருக்களாகவும்

அவர்களை எங்கள் கடவுளுக்காக

ஏற்படுத்தினீர்.

அவர்கள் மண்ணுலகின்மீது

ஆட்சி செலுத்துவார்கள்.”

11தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்:

12“கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி

வல்லமையும் செல்வமும்

ஞானமும் ஆற்றலும்

மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும்

பெறத் தகுதி பெற்றது”

என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
13பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும்,

“அரியணையில் வீற்றிருப்பவருக்கும்

ஆட்டுக்குட்டிக்கும்

புகழ்ச்சியும் மாண்பும்

பெருமையும் ஆற்றலும்

என்றென்றும் உரியன”

என்று பாடக் கேட்டேன்.
14அதற்கு அந்த நான்கு உயிர்களும், ‘ஆமென்’ என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

5:1 எசே 2:9,10; எசா 29:11. 5:5 விப 49:9; எசா 11:1,10. 5:6 எசா 53:7. 5:8 திபா 141:2. 5:9 திபா 33:3; 98:1; எசா 42:10. 5:10 விப 19:6; திவெ 1:6. 5:11 தானி 7:10.