மீக்காவும் தாண் குலத்தாரும்

1அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் இல்லை; அந்நாள்களில் தாண் குலத்தார் தாம் வாழ்வதற்கென உரிமைப் பகுதியைத் தேடிக் கொண்டிருந்தனர். ஏனெனில், அந்நாள்வரை இஸ்ரயேலின் குலங்களிடையே அவர்களுக்கு உரிமைப் பகுதி கிடைக்கவில்லை.
2தாண் மக்கள் தங்கள் குலத்தாருள் ஆற்றல் வாய்ந்த அனைவரிலிருந்தும், சோராவையும் எசுத்தாவோலையும் சார்ந்த ஐந்து போர்வீரர்களை, நாட்டை உளவு பார்க்கவும் வேவு பார்க்கவும் அனுப்பினர். அவர்கள் அவர்களிடம், “செல்லுங்கள், நிலத்தை வேவு பாருங்கள்” என்றனர். ஐவரும் எப்ராயிம் மலைநாட்டில் இருந்த மீக்காவின் வீட்டுக்கு அருகே வந்து இரவைக் கழித்தனர்.
3அவர்கள் மீக்காவின் வீட்டருகே இருந்தபொழுது, லேவியரான இளைஞரின் குரலைக் கண்டுகொண்டு, அவர் பக்கம் திரும்பிச் சென்று, அவரிடம் “உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? இங்கு உனக்கு என்ன வேலை?” என்று கேட்டனர்.
4அவர் அவர்களிடம் மீக்கா தமக்குச் செய்ததனைத்தையும்பற்றிக் கூறியபொழுது, “அவர் என்னை வேலைக்கு அமர்த்தியுள்ளார். நான் அவரிடம் குருவாக இருக்கின்றேன்” என்றார்.
5அவர்கள் அவரிடம், “நாங்கள் செல்லும் பயணம் வெற்றிகரமாக இருக்குமா என்பதை நாங்கள் அறியுமாறு கடவுளிடம் கேள்” என்றனர்.
6குரு அவர்களிடம், “மன அமைதியுடன் செல்லுங்கள். நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை ஆண்டவர் கண்ணோக்கிக் காப்பார்” என்றார்.
7ஐவரும் பயணத்தைத் தொடர்ந்து இலாயிசை வந்தடைந்தபொழுது அங்கிருந்த மக்கள் அச்சமின்றி, சீதோனியர் நெறிமுறைக்கேற்ப, அமைதியாக கவலையற்றவர்களாக வாழ்வதைக் கண்டனர். நாடு எதிலும் குறைவற்றதாகவும், செழிப்புடையதாகவும் இருந்தது. அம்மக்கள் சீதோனியரிடமிருந்து தூரத்தில் இருந்ததால் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
8அவர்கள் சோராவிலும் எசுத்தாவோலிலும் இருந்த சகோதரர்களிடம் திரும்பி வந்தனர். அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், “நீங்கள் கண்டதென்ன?” என்று கேட்டனர்.
9அவர்கள், “வாருங்கள், அவர்களுக்கு எதிராகப் புறப்படுவோம். ஏனெனில், நாங்கள் ஒரு நாட்டைக் கண்டோம். அது மிகவும் செழிப்பானது. நீங்கள் எதுவும் செய்யப் போவதில்லையா? அங்கு செல்லவும், அந்நாட்டில் நுழைந்து அதை உரிமையாக்கிக் கொள்ளவும் தயங்க வேண்டாம்.
10நீங்கள் கவலையற்ற மக்களிடம் செல்லவிருக்கின்றீர்கள். பரந்த அந்நிலத்தைக் கடவுள் உங்கள் கையில் ஒப்புவித்துவிட்டார். நாடு அனைத்திலும் குறைவற்றதாக உள்ளது” என்றனர்.
11தாண் குலத்தார் அறுநூறுபேர் போர்க்கோலம் தாங்கிச் சோராவிலிருந்தும் எசத்தாவோலிலிருந்தும் புறப்பட்டுச் சென்றனர்.
12அவர்கள் யூதாநாட்டுக் கிரியத்து எயாரிமில் பாளையம் இறங்கினர். ஆகவே, அவ்விடத்தை ‘மகனே தாண்’* என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது கிரியத்து எயாரிமுக்கு மேற்கே உள்ளது.
13அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எப்ராயிம் மலைநாட்டுக்குச் சென்று மீக்காவின் வீட்டை நெருங்கினார்கள்.
14இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது: இவ்வீடுகளில் ஏபோது, தெராபிம், செதுக்கிய உருவம், வார்ப்புச்சிலை, ஆகியவை உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிச் சிந்தியுங்கள்” என்றனர்.
15அவர்கள் மீக்காவின் வீட்டில் லேவியரான இளைஞர் இருந்த இடம் நோக்கித் திரும்பி வந்து, அவரிடம் நலம் விசாரித்தனர்.
16போர்க்கோலம் தாங்கிய அறுநூறு தாண்வீரர்களும் நுழைவாயிலின் முன் நின்றனர்.
17நாட்டை வேவு பார்க்க வந்திருந்த ஐவரும் உள்ளே சென்று, செதுக்கிய உருவம், ஏபோது, தெராபிம், வார்ப்புச்சிலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். குருவும் போர்க் கோலம் தாங்கிய அறுநூறு வீரர்களும் நுழைவாயிலின்முன் நின்று கொண்டிருந்தனர்.
18மீக்காவின் வீட்டுக்குள் சென்ற ஐவரும் செதுக்கிய உருவம், ஏபோது, தெராபீம், வார்ப்புச்சிலை, ஆகியவற்றை எடுத்தபொழுது குரு அவர்களிடம், “நீங்கள் செய்வது என்ன?” என்று கேட்டார்.
19அவர்கள் அவரிடம், “பேசாதே! வாயை மூடு!! எங்களுடன் நட. எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய். எது உனக்கு நலம்? ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? இஸ்ரயேலின் ஒரு குலத்திற்கு, ஒரு குடும்பத்திற்குக் குருவாக இருப்பதா?” என்றனர்.
20குருவின் இதயம் மகிழ்வுற்றது. அவர் ஏபோது, தெராபிம் செதுக்கிய உருவம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மக்களிடையே வந்தார்.
21குழந்தைகளும் கால்நடைகளும் உடைமைகளும் அவர்கள் முன்னே செல்ல, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
22அவர்கள் மீக்காவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபின், அடுத்த வீட்டு ஆள்கள் ஒன்றுதிரண்டு, குரலெழுப்பி, தாண் மக்களைத் துரத்திச் சென்றனர்.
23அவர்கள் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், “நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டனர்.
24அவர், “நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள்; குருவையும் கூட்டிக் கொண்டு செல்கிறீர்கள். எனக்கு வேறு என்ன இருக்கிறது? இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே?” என்றார்.
25தாண் மக்கள் அவரிடம், “எங்களோடு விவாதம் செய்யாதே! செய்தால் கொடிய மனம் கொண்ட இம்மனிதர் உங்களைத் தாக்குவர். நீயும் உன் வீட்டாரும் உயிரிழக்க நேரிடும்” என்றனர்.
26தாண் மக்கள் தங்கள் வழியே சென்றனர். மீக்கா அவர்கள் தம்மைவிட வலிமை வாய்ந்தவர்கள் என்று கண்டு தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.
27தாண் மக்கள் மீக்கா செய்து வைத்திருந்ததையும் அவருடைய குருவையும் கவர்ந்து சென்றனர். அவர்கள் அமைதியாகவும் கவலையற்றும் வாழ்ந்த இலாயிசு மக்களுக்கு எதிராக நின்று அவர்களை வாளுக்கு இரையாக்கி நகரை எரித்தனர்.
28ஏனெனில், இலாயிசு மக்கள் சீதோனிலிருந்து தொலையில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. இலாயிசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தனர்.
29இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை “தாண்” என்று அழைத்தனர். அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு.
30செதுக்கிய உருவத்தைத் தாணின் மக்கள் தங்களுக்கென்று நிறுவிக்கொண்டனர். மோசேயின் புதல்வனான கெர்சோமின் மகன் யோனத்தானும் அவன் மக்களும் தாணின் குடும்பத்தினருக்கு, மக்கள் நாடு கடத்தப்படும் வரை, குருக்களாக இருந்தனர்.
31கடவுளின் உறைவிடம் சீலோவில் இருந்தவரை, மீக்கா செய்திருந்த செதுக்கப்பட்ட உருவத்தைத் தாண் மக்கள் தங்களுக்கென்று வைத்திருந்தனர்.

18:12 எபிரேயத்தில், ‘தாணின் பாளையம்’ என்பது பொருள்.