பவுல் எருசலேமுக்குச் செல்லுதல்

1நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து கப்பல் ஏறி நேராகக் கோசு தீவு வந்தடைந்தோம். மறு நாள் நாங்கள் ரோதுக்கும் அங்கிருந்து பத்தாராவுக்கும் சென்றோம்.
2அங்கு பெனிசிய நாட்டுக்குச் செல்லும் கப்பலொன்றைக் கண்டு, அதில் ஏறிப் பயணம் செய்தோம்.
3வழியில் சைப்பிரசு தென்பட்டது. அங்கே போகாமல் அதன் இடப் புறமாக, சிரியா சென்று பின், தீர் நகரை அடைந்தோம். அங்கே கப்பலிலுள்ள சரக்கு இறக்கப்பட்டது.
4அங்குச் சில சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களோடு ஏழு நாள் தங்கினோம். அவர்கள் தூய ஆவியால் தூண்டப்பட்டு, பவுலிடம் எருசலேம் செல்லக் கப்பலேற வேண்டாமெனக் கூறினர்.
5அந்த நாள்கள் முடிந்தபின் நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அவர்கள் அனைவரும் மனைவி மக்களோடு நகரின் எல்லை வரை எங்களை வழி அனுப்பி வைக்குமாறு வந்தார்கள். கடற்கரையில் நாங்கள் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினோம்.
6பின் ஒருவரிடமொருவர் பிரியா விடை பெற்றுக் கொண்டு கப்பலில் ஏறினோம். அவர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
7நாங்கள் தீர் நகரிலிருந்து எங்கள் கடல் பயணத்தைத் தொடர்ந்து தாலமாய் வந்தடைந்தோம். அங்குள்ள சகோதரர் சகோதரிகளை வாழ்த்தி ஒரு நாள் அவர்களுடன் தங்கியிருந்தோம்.
8மறுநாள் நாங்கள் புறப்பட்டுச் செசரியா வந்தோம். நற்செய்தி அறிவிப்பவரான பிலிப்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தங்கினோம். அவர் திருத்தொண்டர் எழுவருள் ஒருவர்.
9அவருக்குத் திருமணமாகா நான்கு பெண் மக்கள் இருந்தனர். அவர்கள் இறைவாக்குரைத்து வந்தார்கள்.
10நாங்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தோம். அப்போது அகபு என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் ஒருவர் யூதேயாவிலிருந்து வந்தார்.
11அவர் எங்களிடம் வந்து பவுலின் இடைக் கச்சையை எடுத்து தம் கைகளையும் கால்களையும் கட்டிக் கொண்டு, “இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் யூதர்கள் இவ்வாறு கட்டிப் பிற இனத்தாரிடம் ஒப்புவிப்பார்கள். தூய ஆவியார்தாமே இப்படிக் கூறுகிறார்” என்றார்.
12இவற்றைக் கேட்டதும் நாங்களும் அவ்விடத்தாரும் பவுலை எருசலேமுக்குச் செல்ல வேண்டாமெனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
13அதற்குப் பவுல் மறுமொழியாக, “நீங்கள் அழுது ஏன் என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர் இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்கும் தயார்” என்றார்.
14அவரை நாங்கள் இணங்க வைக்க முடியாது போகவே, “ஆண்டவரின் திருவுளப்படி நடக்கட்டும்” எனக்கூறிப் பேசாமலிருந்து விட்டோம்.
15இந்நாள்களுக்குப் பின்பு நாங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து எருசலேமுக்குச் சென்றோம்.
16செசரியாவிலிருந்து சீடர் சிலரும் எங்களுடன் வந்தனர். சைப்பிரசு தீவைச் சேர்ந்த தொடக்க காலச் சீடரான மினாசோவின் வீட்டில் நாங்கள் விருந்தினராகத் தங்குமாறு அழைத்துச் செல்லப்பட்டோம்.

எருசலேம் நகரில் பவுல்

பவுல் யாக்கோபைச் சந்தித்தல்

17நாங்கள் எருசலேம் சென்று சேர்ந்தபோது சகோதர் சகோதரிகள் எங்களை மகிழ்வுடன் வரவேற்றார்கள்.
18மறுநாள் பவுல் எங்களைக் கூட்டிக் கொண்டு யாக்கோபிடம் சென்றார். அங்கு அனைத்து மூப்பரும் வந்திருந்தனர்.
19பவுல் அவர்களை வாழ்த்திய பின் தம் திருப்பணி மூலம் கடவுள் பிற இனத்தாரிடம் செய்தவற்றை ஒவ்வொன்றாக விளக்கினார்.
20இதைக் கேட்டவர்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். எனினும், அவர்கள் அவரிடம், “சகோதரரே! யூதருள் எத்தனையோ ஆயிரம்பேர் நம்பிக்கை கொண்டுள்ளதையும் அவர்கள் அனைவரும் திருச்சட்டத்தின்மீது ஆர்வமுடையவர்களாயிருப்பதையும் நீர் பார்க்கிறீர் அல்லவா?
21நீர் பிற இனத்தாரிடையே வாழும் யூதர் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லையென்றும் நம் முறைமைகளின் படி நடக்க வேண்டியதில்லையென்றும் கூறி மோசேயின் சட்டத்தை விட்டு விலகுமாறு கற்றுக் கொடுப்பதாக உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
22நீர் வந்திருப்பது பற்றி இங்குள்ள யூதர்கள் எப்படியும் கேள்விப்பட்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். அவர்கள், “இப்போது என்ன செய்வது?” என்று சிந்தித்துக் கொண்டே,
23“நாங்கள் உமக்குக் கூறுவதை நீர் செய்யும். பொருத்தனை செய்து கொண்ட நான்கு பேர் எங்களிடையே உள்ளனர்.
24இவர்களைக் கூட்டிக் கொண்டு போய், இவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளும். அவர்கள் முடிவெட்டுவதற்கான செலவை நீரே ஏற்றுக்கொள்ளும். இதனால் நீர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பவர் என்றும் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டவைகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அனைவரும் தெரிந்து கொள்வர்.
25சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தமையை ஆகியவற்றை நம்பிக்கை கொண்ட பிற இனத்தவர் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்து அவர்களுக்கு எழுதியுள்ளோம்” என்று அவரிடம் கூறினார்கள்.
26மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து தாமும் தூய்மைச் சடங்கு செய்துகொண்டார். பின் கோவிலுள் சென்று எப்போது தூய்மைச் சடங்கு காலம் நிறைவு பெறுகிறது என்றும் எப்போது அவர்களுள் ஒவ்வொருவருக்காகவும் பலி செலுத்தப்படும் என்றும் தெரியப்படுத்தினார்.

கோவிலுள் பவுல் கைது செய்யப்படுதல்

27அந்த ஏழு நாள்களும் முடியப் போகும் வேளையில் ஆசியாவிலுள்ள யூதர் கோவிலுள் பவுலைக் கண்டனர். உடனே அவர்கள் மக்கள் கூட்டம் முழுவதையும் தூண்டிவிட்டுப் பவுலைப் பிடித்து,
28“இஸ்ரயேல் மக்களே! உதவ வாருங்கள்; மக்களுக்கும் திருச்சட்டத்துக்கும் இந்த இடத்துக்கும் எதிராக எல்லா இடங்களிலும் கற்பிப்பவன் இந்த மனிதன்தான்; மேலும் கிரேக்கரைக் கோவிலுக்குள் கூட்டி வந்து இந்தத் தூய்மையான இடத்தை தீட்டுப்படுத்தியுள்ளான்” என்று கத்தினார்கள்.
29ஏனெனில், அவர்கள் எபேசியரான துரொப்பியம் என்பவரை அவரோடு நகரில் கண்டிருந்தனர். பவுல் அவரைக் கோவிலுக்குள் கூட்டிக்கொண்டு போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டனர்.
30நகரெங்கும் கலகம் உண்டாயிற்று. மக்கள் கூட்டமாய் ஓடிச்சென்று பவுலைப் பிடித்துக் கோவிலின் வெளியே இழுத்து வந்து கதவுகளை அடைத்தனர்.
31அவர்கள் அவரைக் கொலை செய்ய வழி தேடியபோது எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் நிலவுகிறது என்ற செய்தி படைப்பிரிவின் ஆயிரத்தவர் தலைவருக்கு எட்டியது.
32உடனே அவர் போர் வீரர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் கூட்டிக்கொண்டு ஓடி வந்தார். ஆயிரத்தவர் தலைவரையும் அவரோடு போர்வீரர்களையும் கண்டதும் பவுலை அடிப்பதை மக்கள் நிறுத்தினார்கள்.
33ஆயிரத்தவர் தலைவர் அருகில் வந்து பவுலைப் பிடித்து இரு சங்கிலிகளால் கட்டுமாறு ஆணை பிறப்பித்தார்; பின்பு “இவன் யார்? என்ன செய்தான்?” என்று வினவினார்.
34கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் இப்படியும் சிலர் அப்படியமாகக் கூச்சலிட்டனர். அமளி மிகுதியால் உறுதியாய் எதுவும் தெரிந்துகொள்ள முடியாதவராய் ஆயிரத்தவர் தலைவர் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.
35பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காததாய் இருந்ததால் படைவீரர் அவரைத் தூக்கிக்கொண்டு மேலே செல்ல நேரிட்டது.
36ஏனெனில், “இவன் ஒழிக!” என்று கத்திக்கொண்டே அங்குத் திரண்டிருந்த மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.

பவுல் தம் நிலையை விளக்குதல்

37அவர்கள் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லவிருந்தபோது பவுல் ஆயிரத்தவர் தலைவரிடம், “நான் உம்மோடு பேசலாமா?” என்று கேட்க அவர், “உனக்குக் கிரேக்க மொழி தெரியுமா?” என்றார்.
38“அப்படியானால் சிலநாள்களுக்கு முன்னால் கலகம் செய்து கத்தி ஏந்திய நாலாயிரம் பேரைப் பாலை நிலத்துக்குக் கூட்டிச் சென்ற எகிப்தியன் நீ தானோ?” என்று கேட்டார்.
39அதற்குப் பவுல், நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரைத்தைச் சேர்ந்தவன். புகழ் பெற்ற அந்நகரத்தின் குடிமகன்; மக்களிடம் இப்போது பேச அனுமதி வேண்டுகிறேன்” என்றார்.
40பவுல் அனுமதி பெற்றுப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு மக்களை நோக்கிக் கையால் சைகை காட்டினார். மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் பவுல் எபிரேய மொழியில் உரையாற்றத் தொடங்கினார்.

21:23-24 எண் 6:13-21. 21:25 திப 15:29.