இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும்

இயேசுவைக் கொல்லச் சதித்திட்டம்
(மாற் 14:1-2; லூக் 22:1-2; யோவா 11:45-53)

1இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம்,
2
“பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார்”
என்றார்.
3அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள்.
4இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்.
5“ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

பெண் ஒருவர் நறுமணத் தைலம் ஊற்றுதல்
(மாற் 14:3-9; யோவா 12:1-8)

6இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார்.
7அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார்.
8இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?
9இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள்.
10இதை அறிந்த இயேசு,
“ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.
11ஏனெனில், ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை.
12இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்.
13
உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”
என்று கூறினார்.

காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்
(மாற் 14:10-11; லூக் 22:3-6)

14பின்னர், பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,
15“இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.
16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்
(மாற் 14:12-16; லூக் 22:7-14)

17புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
18இயேசு அவர்களிடம்,
“நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்”
என்றார்.
19இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்
(மாற் 14:17-21; லூக் 22:21-23; யோவா 13:21-30)

20மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.
21அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர்,
“உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
22அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், “ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
23அதற்கு அவர்,
“என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.
24
மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்”
என்றார்.
25அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?” என அவரிடம் கேட்க இயேசு,
“நீயே சொல்லிவிட்டாய்”
என்றார்.

ஆண்டவரின் திருவிருந்து
(மாற் 14:22-26; லூக் 22:15-20; 1 கொரி 11:23-25)

26அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து,
“இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்”
என்றார்.
27பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து,
“இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;
28ஏனெனில், இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.
29
இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
30அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்
(மாற் 14:27-31; லூக் 22:31-34; யோவா 13:36-38)

31அதன்பின்பு, இயேசு அவர்களிடம்,
“இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது.
32
நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்”
என்றார்.
33அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்” என்றார்.
34இயேசு அவரிடம்,
“இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்”
என்றார்.
35பேதுரு அவரிடம், “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு
(மாற் 14:32-42; லூக் 22:39-46)

36பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர்,
“நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்”
என்று அவர்களிடம் கூறி,
37பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.
38அவர்,
“எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்”
என்று அவர்களிடம் கூறினார்.
39பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து,
“என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்”
என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.
40அதன் பின்பு, அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம்,
“ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?
41
உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால், உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்”
என்றார்.
42மீண்டும் சென்று,
“என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்”
என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.
43அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன.
44அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.
45பிறகு சீடர்களிடம் வந்து,
“இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார்.
46
எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்”
என்று கூறினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுத்தலும் கைது செய்தலும்
(மாற் 14:43-50; லூக் 22:47-53; யோவா 18:3-12)

47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.
48அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், “நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
49அவன் நேராக இயேசுவிடம் சென்று, “ரபி வாழ்க” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
50இயேசு அவனிடம்,
“தோழா, எதற்காக வந்தாய்?”
என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.
51உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
52அப்பொழுது இயேசு அவரிடம்,
“உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.
53நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு* மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே.
54
அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?”
என்றார்.
55அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,
“கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே;
56
இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன”
என்றார். அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு
(மாற் 14:53-65; லூக் 22:54-55; 63-71; யோவா 18:13-14, 19-24)

57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள்.
58பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.
59தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.
60பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.
61அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்” என்று கூறினார்கள்.
62அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?” என்று கேட்டார்.
63ஆனால், இயேசு பேசாதிருந்தார். மேலும், தலைமைக் குரு அவரிடம், “நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்” என்றார்.
64அதற்கு இயேசு,
“நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
65உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, “இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.
66நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” எனப் பதிலளித்தார்கள்.
67பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,
68“இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்” என்று கேட்டனர்.

பேதுரு மறுதலித்தல்
(மாற் 14:66-72; லூக் 22:56-62; யோவா 18:15-18, 25-27)

69பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, “நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே” என்றார்.
70அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார்.
71அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, “இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்” என்று அங்கிருந்தோரிடம் சொன்னார்.
72ஆனால், பேதுரு, “இம்மனிதனை எனக்குத் தெரியாது” என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.
73சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில், உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது” என்று கூறினார்கள்.
74அப்பொழுது அவர், “இந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று.
75அப்பொழுது,
“சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்”
என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

26:3-4 திபா 2:1,2; யோவா 17:47-53; திப 4:25-27. 26:7 லூக் 7:37,38. 26:11 இச 15:11. 26:21 திபா 55:22-14. 26:23 திபா 41:9; யோவா 13:18. 26:27 1 கொரி 10:16. 26:28 எசா 53:12; எரே 31:31-34. 26:31 செக் 13:7. 26:32 மத் 28:7,16. 26:39 யோவா 4:34; உரோ 5:19; பிலி 2:8. 26:48 நீமொ 27:6. 26:54 லூக் 24:26,27. 26:55 லூக் 19:47; 21:37; யோவா 18:20. 26:61 யோவா 2;19; திப 6:14. 26:64 தானி 7:13; திப 2:33; 7:55. 26:65-66 லேவி 24:16. 26:67 எசா 50:6.
26:53 பெரும் படைப் பிரிவு என்பது உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட இலேகியோன் என்னும் பிரிவு.