இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்

இயேசுவின் மூதாதையர் பட்டியல்
(லூக் 3:23-38)

1-2தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;

ஈசாக்கின் மகன் யாக்கோபு;

யாக்கோபின் புதல்வர்கள்

யூதாவும் அவர் சகோதரர்களும்.

3யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த

புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;

பெரேட்சின் மகன் எட்சரோன்;

எட்சரோனின் மகன் இராம்.*

4இராமின் மகன் அம்மினதாபு;

அம்மினதாபின் மகன் நகசோன்;

நகசோனின் மகன் சல்மோன்.

5சல்மோனுக்கும் இராகாபுக்கும்

பிறந்த மகன் போவாசு;

போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த

மகன் ஓபேது;

ஓபேதின் மகன் ஈசாய்.

6ஈசாயின் மகன் தாவீது அரசர்;

தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்

பிறந்த மகன் சாலமோன்.

7சாலமோனின் மகன் ரெகபயாம்;

ரெகபயாமின் மகன் அபியாம்;

அபியாமின் மகன் ஆசா.*

8ஆசாவின் மகன் யோசபாத்து;

யோசபாத்தின் மகன் யோராம்;

யோராமின் மகன் உசியா.

9உசியாவின் மகன் யோத்தாம்;

யோத்தாமின் மகன் ஆகாசு;

ஆகாசின் மகன் எசேக்கியா.

10எசேக்கியாவின் மகன் மனாசே;

மனாசேயின் மகன் ஆமோன்;

ஆமோனின் மகன் யோசியா.

11யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்* அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

12பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.

13செருபாபேலின் மகன் அபியூது;

அபியூதின் மகன் எலியாக்கிம்;

எலியாக்கிமின் மகன் அசோர்.

14அசோரின் மகன் சாதோக்கு;

சாதோக்கின் மகன் ஆக்கிம்;

ஆக்கிமின் மகன் எலியூது.

15எலியூதின் மகன் எலயாசர்;

எலயாசரின் மகன் மாத்தான்;

மாத்தானின் மகன் யாக்கோபு.

16யாக்கோபின் மகன்

மரியாவின் கணவர் யோசேப்பு.

மரியாவிடம் பிறந்தவரே

கிறிஸ்து* என்னும் இயேசு.

17ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.

இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1-7)

18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
22-23“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

1:1 மத் 9:27; கலா 3:16; எபி 7:14. 1:3 தொநூ 38:29. 1:18 லூக் 1:27; 2:5,11. 1:21 லூக் 1:31. 1:23 எசா 7:14. 1:25 லூக் 2:21.
1:3 கிரேக்க பாடம்: ஆராம். 1:7 கிரேக்க பாடம்: ஆசாபு. 1:11 எக்கோனியா என்பவரின் மறுபெயர் ‘யோவாக்கின்’ ஆகும். 1:16 ‘மெசியா’ என்னும் எபிரேயச் சொல்லே ‘கிறிஸ்து’ என்று கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ‘அருள்பொழிவு பெற்றவர்’ அல்லது ‘கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்’ என்பது பொருள்.