செல்வச் செருக்கு

1உன் செல்வங்களில் நம்பிக்கை

வைக்காதே;

‘எனக்கு அவை போதும்’

எனச் சொல்லாதே.

2உன் நாட்டங்களுக்கும்

வலிமைக்கும் அடிமையாகாதே;

உன் உள்ளத்து விருப்பங்களைப்

பின்பற்றாதே.

3எனக்கு எதிராய்ச்

செயல்படக்கூடியவர் யார்?

எனச் சொல்லாதே;

ஆண்டவர் உன்னைத்

தண்டியாமல் விடமாட்டார்.

4‘நான் பாவம் செய்தேன்;

இருப்பினும்,

எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’

எனக்கூறாதே;

ஆண்டவர் பொறுமை உள்ளவர்.

5பாவத்துக்கு மேல் பாவம்

செய்யும் அளவுக்குப்

பாவ மன்னிப்புப்பற்றி

அச்சம் இல்லாமல் இராதே.

‘ஆண்டவரின் பரிவு எல்லையற்றது;

6‘எண்ணற்ற என் பாவங்களை

அவர் மன்னித்துவிடுவார்’

என உரைக்காதே.

அவரிடம் இரக்கமும்

சினமும் உள்ளன;

அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.

7ஆண்டவரிடம் திரும்பிச்

செல்லக் காலம் தாழ்த்தாதே.

நாள்களைத் தள்ளிப்போடாதே.

ஆண்டவரின் சினம்

திடீரென்று பொங்கியெழும்;

அவர் தண்டிக்கும் காலத்தில்

நீ அழிந்துபோவாய்.

8முறைகேடான செல்வங்களில்

நம்பிக்கை வைக்காதே;

பேரிடரின் நாளில் அவற்றால்

உனக்குப் பயன் இராது.

வாய்மையும் தன்னடக்கமும்

9எல்லா வகைக் காற்றிலும்

தூற்றிக் கொள்ளாதே;

எல்லா வழிகளிலும் போகாதே;

இரட்டை நாக்குக்* கொண்ட

பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.

10உன் மனச்சான்றை

உறுதியோடு பின்பற்று;

முன் பின் முரண்படாமல் பேசு.

11விரைந்து செவிசாய்;

பொறுத்திருந்து விடை கூறு.

12உனக்குத் தெரிந்தால்,

மறுமொழி கூறு;

இல்லையேல் வாயை மூடிக்கொள்.

13பெருமையும் சிறுமையும்

பேச்சினால் வரும்;

நாக்கே ஒருவருக்கு

வீழ்ச்சியைத் தரும்.

14புறங்கூறுபவன் எனப்

பெயர் வாங்காதே;

உன் நாவால் மற்றவர்களுக்குக்

கண்ணி வைக்காதே.

திருடர்களுக்கு உரியது இகழ்ச்சி;

இரட்டை நாக்கினருக்கு

உரியது கடும் கண்டனம்.

15பெரிதோ சிறிதோ எதிலும்

குற்றம் செய்யாதே;

நண்பனாவதற்கு மாறாகப்

பகைவனாகாதே.

கெட்ட பெயர் இழுக்கையும்

பழிச்சொல்லையும் வருவிக்கும்;

இரட்டை நாக்குக்கொண்ட

பாவிகளுக்கு இவை நேரும்.


5:1 திபா 62:10. 5:4 சஉ 8:11. 5:8 எசே 7:19. 5:11 யாக் 1:19. 5:13 நீமொ 18:21.
5:9 ‘இரட்டை நாக்கு’ என்றால் புரட்டிப் பேசுதல். (காண் 5:15;28:13). 5:15 [ ] 6:1- ஆகக் கொள்ளப்படுகிறது.