1தங்களது வீழ்ச்சிக் காலத்தில்

அவர்கள் உதவி பெறுவர்.

குழந்தாய்,

ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;

கையேந்தி நிற்போரைக்

காத்திருக்க வைக்காதே.

2பசித்திருப்போரை

வாட்டி வதைக்காதே;

வறுமையில் உழல்வோரை

எரிச்சலூட்டாதே.

3உள்ளம் உடைந்தோர்க்குத்

துயரங்களைக் கூட்டாதே;

வறுமையில் உழல்வோருக்குக்

காலம் தாழ்த்தாமல் உதவி செய்.

4துன்புறுவோரின் வேண்டுதலைத்

தள்ளிவிடாதே;

ஏழையரிடமிருந்து

உன் முகத்தைத் திருப்பிக்

கொள்ளாதே.

5உன்னிடம் உதவி

வேண்டுவோரிடமிருந்து

உன் கண்களைத்

திருப்பிக் கொள்ளாதே;

உன்னைச் சபித்திட யாருக்கும்

வாய்ப்பு அளிக்காதே.

6ஏழைகள் கசப்புணர்வினால்

உன்னைச் சபித்தால்,

அவர்களைப் படைத்தவர்

அவர்களுடைய வேண்டுதலுக்குச்

செவிசாய்ப்பார்.

7மக்களின் அன்புக்கு

உரியவனாய் இரு;

பெரியோர்களுக்குத் தலை வணங்கு.

8ஏழைகளுக்குச் செவிசாய்;

அவர்களுக்கு அமைதியாக,

கனிவோடு பதில் சொல்.

9ஒடுக்குவோரின் கையினின்று

ஒடுக்கப்பட்டோரை விடுவி;

நீதியான தீர்ப்பு வழங்குவதில்

உறுதியாய் இரு.

10கைவிடப்பட்டோர்க்குத்

தந்தையாய் இரு;

அவர்களின் அன்னையர்க்குத்

துணைவன்போல் இரு.

அப்போது நீ உன்னத

இறைவனின் பிள்ளைபோல்

இருப்பாய்; தாயைவிட

அவர் உன்மீது அன்புகூர்வார்.

ஞானம் என்னும் ஆசான்

11ஞானம் தன் மக்களை

மேன்மைப்படுத்தும்;

தன்னைத் தேடுவோர்க்குத்

துணைநிற்கும்.

12ஞானத்திற்கு அன்பர்

வாழ்விற்கும் அன்பர்;

அதனை வைகறையிலேயே

தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.

13அதனைப் பற்றிக்கொள்வோர்

மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்;

அது செல்லும் இடமெல்லாம்

ஆண்டவர் ஆசி வழங்குவார்.

14அதற்குப் பணி செய்வோர்

தூய இறைவனுக்கே

ஊழியம் புரிகின்றனர்;

ஞானத்துக்கு அன்பர்

ஆண்டவருக்கும் அன்பர்.

15ஞானத்துக்குப் பணிவோர்

மக்களினங்களுக்குத்

தீர்ப்பு வழங்குவர்;

அதற்குச் செவிசாய்ப்போர்

பாதுகாப்பாய் வாழ்வர்;

16ஞானத்தை நம்புவோர்

அதனை உரிமையாக்கிக்

கொள்வர்; அவர்களுடைய

வழி மரபினரும் அதனை

உடைமையாக்கிக் கொள்வர்;

17முதலில் அவர்களை

அது கோணல் வழியில்

அழைத்துச் செல்லும்;

அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை

வருவிக்கும்;

தனக்கு அவர்கள்மீது

நம்பிக்கை ஏற்படும்வரை

அவர்களை அது கண்டிக்கும்,

வதைக்கும்;

தன் நெறிமுறைகளால்

அவர்களைச் சோதிக்கும்.

18அது மீண்டும் அவர்களிடமே

வந்து அவர்களை மகிழ்விக்கும்;

அவர்களுக்குத் தன்

இரகசியங்களை வெளிப்படுத்தும்.

19அதைவிட்டு அவர்கள்

விலகிச் சென்றால்,

அவர்களை அது கைவிட்டுவிடும்;

அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.

தன்னம்பிக்கை

20தக்கநேரம் பார்;

தீமையைக்குறித்து

விழிப்பாயிரு;

உன்னைப்பற்றியே

நாணம் அடையாதே.

21ஒரு வகை நாணம்

பாவத்திற்கு இட்டுச்செல்லும்;

மற்றொரு வகை நாணம்

மாட்சியையும் அருளையும் தரும்.

22பாகுபாடு காட்டி

உனக்கே கேடு

வருவித்துக் கொள்ளாதே;

பணிவின் பெயரால் வீழ்ச்சி

அடையாதே.

23பேச வேண்டிய நேரத்தில்

பேசாமல் இருந்துவிடாதே.*

24ஞானம் பேச்சில் புலப்படும்;

நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும்.

25உண்மைக்கு மாறாகப் பேசாதே;

உன் அறியாமைக்காக

நாணம் கொள்.

26உன் பாவங்களை அறிக்கையிட

வெட்கப்படாதே;

ஆற்றின் நீரோட்டத்தைத்

தடை செய்யமுயலாதே.

27மூடருக்கு அடிபணியாதே;

வலியோருக்குப் பாகுபாடு

காட்டாதே.

28இறக்கும்வரை

உண்மைக்காகப் போராடு;

கடவுளாகிய ஆண்டவர்

உனக்காகப் போரிடுவார்.

29பேச்சில் துடுக்காய் இராதே;

செயலில் சோம்பலாகவும்

ஈடுபாடின்றியும் இராதே.

30வீட்டில் சிங்கம்போல் இராதே;

பணியாளர்முன் கோழையாய் இராதே.

31பெறுவதற்காக மட்டும்

கைகளை விரித்து வைத்திராதே;

கொடுக்கும் நேரத்திலோ

உன் கைகளை மூடிக்கொள்ளாதே.


4:4 தோபி 4:7. 4:6 இச 15:9; யோபு 34:28. 4:9 எசா 1:17; எரே 22:3. 4:12 நீமொ 8:17. 4:15 சாஞா 3:8. 4:26 நீமொ 28:13; யாக் 5:16. 4:31 திப 20:35.
4:23 ‘அழகை முன்னிட்டு உன் ஞானத்தை மூடி மறைக்காதே’ என்னும் தொடர் சில கிரேக்கச் சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.