கடவுளின் பெருமை

1என்றும் வாழும் ஆண்டவரே

அண்டம் முழுவதையும் படைத்தார்.

2ஆண்டவர் ஒருவரே

நீதியுள்ளவர்.

*[அவரைத்தவிர வேறு

எவரும் இலர்.

3அவர் தம் கையின் அசைவினால்

உலகை நெறிப்படுத்துகிறார்.

எல்லாம் அவருடைய திருவுளத்திற்கு

அடிபணிகின்றன. அவர்

எல்லாவற்றிற்கும் மன்னர்;

தம் ஆற்றலால் தூயவற்றைத்

தூய்மை அல்லாதவற்றினின்று

பிரித்துவைக்கிறார்.]

4அவர் தம் செயல்களை அறிவிக்க

யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை;

அவருடைய அரும்பெரும்

செயல்களைக் கண்டுபிடிப்பவர் யார்?

5அவரது பேராற்றலை எவரால்

அளவிட்டுக் கூற முடியும்?

அவரது இரக்கத்தை எவரால்

முழுவதும் விரித்துரைக்க இயலும்?

6ஆண்டவரின் வியத்தகு

செயல்களைக் குறைக்கவோ

கூட்டவோ எவராலும் முடியாது;

அவற்றை ஆழ்ந்தறிய எவராலும்

இயலாது.

7மனிதர் அவற்றைக் கண்டுணர்ந்து

விட்டதாக எண்ணும்போதுதான்

கண்டுணரவே தொடங்குகின்றனர்;

அவற்றைக் கண்டுணர்ந்து

முடிக்கும்போது மேலும்

குழப்பம் அடைகின்றனர்.

மனிதரின் சிறுமை

8மனிதர் என்போர் யார்?

அவர்களால் ஏற்படும்

நன்மைகள் என்ன?

அவர்களிடம் இருக்கும்

நன்மைகள் யாவை?தீமைகள் யாவை?

9மனிதருடைய வாழ்நாள்களின்

எண்ணிக்கை கூடிப்போனால்

நூறு ஆண்டுகள்.

10நித்தியத்தோடு ஒப்பிடும்போது

அந்தச் சில ஆண்டுகள்

கடல்நீரில் ஒருதுளி போன்றவை.

கடல் மணலில் ஒரு துகள் போன்றவை.

11இதனால்தான் ஆண்டவர்

அவர்கள்மீது பொறுமையுடன்

இருக்கிறார்; தம் இரக்கத்தை

அவர்கள்மீது பொழிக்கிறார்.

12அவர்களின் அழிவு இரங்கத்தக்கது

என அவர் கண்டறிகிறார்;

அளவுக்கு மிகுதியாகவே

அவர்களை மன்னிக்கிறார்.

13மனிதர் அடுத்திருப்பவருக்கே

இரக்கம் காட்டுகின்றனர்;

ஆண்டவர் எல்லா உயிருக்கும்

இரக்கம் காட்டுகிறார்;

அவற்றைக் கண்டிக்கிறார்;

பயிற்றுவிக்கிறார்; அவற்றுக்குக்

கற்றுக் கொடுக்கிறார்;

இடையர்கள் தங்கள்

மந்தையைத் தங்களிடம்

மீண்டும் அழைத்துக்கொள்வது

போல் அவரும் செய்கிறார்.

14தாம் அளிக்கும் நற்பயிற்சியை

ஏற்றுக்கொள்வோர்மீதும்

தம் தீர்ப்புகளை ஆர்வத்துடன்

தேடுவோர்மீதும் இரக்கம் காட்டுகிறார்.

ஈகையின் சிறப்பு

15குழந்தாய், நீ நன்மை

செய்யும்போது கடிந்துகொள்ளாதே;

கொடைகள் வழங்கும்போது

புண்படுத்தும் சொற்களைக் கூறாதே.

16கடும் வெப்பத்தைப் பனி

தணிக்கும் அன்றோ?

உனது சொல் கொடையைவிடச்

சிறந்தது.

17ஒரு சொல் நல்ல கொடையைவிட

மேலானது அன்றோ?

கனிவுள்ள மனிதரிடம்

இவ்விரண்டுமே காணப்படும்.

18அறிவிலிகள் கடுஞ்சொல்

கூறுவார்கள்.

மனம் ஒப்பாது கொடுக்கும் ஈகை

அதனைப் பெறுவோருக்கு

எரிச்சலையே கொடுக்கும்.

சிந்தனையும் முன்மதியும்

19கற்றபின் பேசு;

நோய் வருமுன்

உடல்நலம் பேணு.

20ஆண்டவரின் தீர்ப்பு

வருமுன் உன்னையே

ஆராய்ந்து பார்; கடவுள்

சந்திக்க வரும் நாளில்

நீ மன்னிப்பு பெறுவாய்.

21நோய்வாய்ப்படுமுன் உன்னையே

தாழ்த்திடு; பாவம்

செய்தபின் மனந்திரும்பு.

22நேர்ச்சையைத் தகுந்த நேரத்தில்

செலுத்த எதுவும் தடையாய்

இருக்க வேண்டாம்;

அதை நிறைவேற்ற இறக்கும்

வரையில் நீ காத்திருக்கவேண்டாம்.

23நேர்ச்சை செய்யுமுன்

அதைக் கடைப்பிடிக்க

ஆயத்தம் செய்துகொள்;

இதில் ஆண்டவரைச்

சோதிப்பவனாய் இருந்துவிடாதே.

24இறுதி நாளில் வரவிருக்கும்

அவரது சீற்றத்தை

நினைவில் கொள்;

அவர் தம் முகத்தைத்

திருப்பிக்கொண்டு

பழிவாங்கும் நேரத்தையும்

எண்ணிப்பார்.

25நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது,

பட்டினி கிடந்த காலத்தை

நினைவில் கொள்;

உனது செல்வச் செழிப்பின்

காலத்தில், உன் வறுமை,

தேவையின் காலத்தை எண்ணிப்பார்.

26காலை தொடங்கி மாலைக்குள்

காலங்கள் மாறுகின்றன;

ஆண்டவர் திருமுன் அனைத்தும்

விரைகின்றன.

27ஞானிகள் எல்லாவற்றிலும்

எச்சரிக்கையாய் இருக்கின்றார்கள்;

பாவம் பெருகும்பொழுது

தீச்செயல்களினின்று

தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள்.

28அறிவுக்கூர்மை படைத்தோர்

அனைவரும் ஞானத்தை அறிவர்;

அதை அடைந்தோரைப் போற்றுவர்.

29நாவன்மை படைத்தோர்

ஞானியர் ஆகின்றனர்;

பொருத்தமான நீதிமொழிகளைப்

பொழிகின்றனர்.

தன்னடக்கம்

30கீழான உணர்வுகளின்படி

நடவாதே; சிற்றின்ப

உணர்வுகளைக் கட்டுப்படுத்து.

31கீழான உணர்வுகளில்

இன்பம் காண உன்

உள்ளத்தை அனுமதிக்கும்போது

உன் பகைவரின் நகைப்புக்கு

அவை உன்னை உள்ளாக்கும்.

32அளவு மீறி உண்டு குடிப்பதில்

களிகூராதே;

அதனால் ஏற்படும் செலவு

உன்னை ஏழையாக மாற்றிவிடும்.

33உன் பணப்பையில் ஒன்றும்

இல்லாதபோது கடன் வாங்கி

விருந்துண்டு ஏழையாகாதே.


18:8 யோபு 7:17. 18:10 2 பேது 3:8. 18:13 திபா 145:9. 18:22 இச 23:22.
18:2-3 18:2ஆ-3 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 18:3 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.