தீயோர் பெறும் தண்டனை

1பயனற்ற பிள்ளைகள்

பலரைப் பெற ஏங்காதே;

இறைப்பற்றில்லாத மக்கள் பற்றி

மகிழ்ச்சி கொள்ளாதே.

2அவர்கள் பலராய் இருப்பினும்

ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சம் அவர்களிடம்

இல்லையெனில் அவர்களால்

மகிழ்ச்சி அடையாதே.

3அவர்களின் நீடிய வாழ்வில்

நம்பிக்கை வைக்காதே;

அவர்களுடைய எண்ணிக்கையை

நம்பியிராதே.

ஓராயிரம் பிள்ளைகளைவிட

ஒரே பிள்ளை சிறந்ததாய்

இருக்கலாம்;

இறைப்பற்றில்லாத பிள்ளைகளைப்

பெறுவதைவிடப் பிள்ளையின்றி

இறப்பது நலம்.

4அறிவுக்கூர்மை படைத்த ஒருவர்

ஒரு நகரையே மக்களால்

நிரப்பக் கூடும்;

ஒழுக்க வரம்பு அற்றோரின்

ஒரு குலம் அதைச் சுடுகாடாக

மாற்ற இயலும்.

5இவைபோன்ற பலவற்றை

என் கண் கண்டுள்ளது;

இவற்றினும் பெரியனவற்றை

என் காது கேட்டுள்ளது.

6பாவிகளின் கூட்டத்தில்

தீ கொழுந்துவிட்டு எரியும்;

கட்டுப்பாடில்லா நாட்டில் சினம்

பற்றியெரியும்.

7தங்கள் வலிமைகொண்டு

கிளர்ச்சி செய்த பழங்கால

அரக்கர்களை ஆண்டவர்

மன்னிக்கவில்லை.

8லோத்து என்பவரை அடுத்து

வாழ்ந்தவர்களை அவர் அழிக்காமல்

விடவில்லை; அவர்களின்

இறுமாப்பினால் அவர்களை

வெறுத்தார்.

9கேட்டிற்குரிய நாட்டின்மீது

அவர் இரக்கம் காட்டவில்லை;

தங்கள் பாவங்களால் அவர்கள்

வேருடன் களைந்து

எறியப்பட்டார்கள்.

10தங்கள் பிடிவாதத்தால்

திரண்ருந்த ஆறு

இலட்சம் காலாட்படையினரையும்

அவர் தண்டிக்காமல் விடவில்லை.

11பிடிவாதம் கொண்ட

ஒருவர் இருந்திருந்தால்கூட

அவர் தண்டனை பெறாது

விடப்பட்டிருந்தால் அது

வியப்பாக இருந்திருக்கும்!

இரக்கமும் சினமும்

ஆண்டவரிடம் உள்ளன.

அவர் மன்னிப்பதில் வல்லவர்;

தம் சினத்தைக் காட்டுவதிலும்

வல்லவர்.

12அவரின் இரக்கம் பெரிது;

அவரது தண்டனை கடுமையானது.

அவரவர் செயல்களுக்கு ஏற்ப

அவர் மனிதருக்குத் தீர்ப்பளிக்கிறார்.

13பாவிகள் தங்கள் கொள்ளைப்

பொருள்களுடன் தப்பமாட்டார்கள்.

இறைப்பற்றுள்ளோரின் பொறுமை

வீண்போகாது.

14தருமங்கள் அனைத்தையும்

அவர் குறித்து வைக்கிறார்;

மனிதர் எல்லாரும் அவரவர்

தம் செயல்களுக்கு ஏற்பக்

கைம்மாறு பெறுவர்.

15*[ஆண்டவரைப் பார்வோன்

அறிந்து கொள்ளாதவாறும்

அதனால் அவருடைய

செயல்களை உலகம்

தெரிந்து கொள்ளாதவாறும்

அவனுக்குப் பிடிவாதமுள்ள

உள்ளத்தைக் கொடுத்தார்.]

16படைப்பு முழுவதற்கும் அவர்

தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார்;

ஒளியையும் இருளையும்

தூக்குநூல் கொண்டு

பிரித்துவைத்தார்.

கைம்மாறு பெறுவது உறுதி

17‘நான் ஆண்டவரிடமிருந்து

ஒளிந்து கொள்வேன்;

உயர் வானிலிருந்து யார்

என்னை நினைப்பார்?

இத்துணை பெரிய மக்கள் திரளில்

என்னை யாருக்கும் தெரியாது;

அளவற்ற படைப்பின்

நடுவே நான் யார்?’

என்று சொல்லிக் கொள்ளாதே.

18இதோ! அவரது வருகையின்போது

வானமும் வானகத்தின்

மேல் உள்ள விண்ணகமும்

கீழுலகும் மண்ணுலகும் நடுங்கும்.

19அவரது பார்வைப் பட்டதும்

மலைகளும் மண்ணுலகின்

அடித்தளங்களும் அதிர்ந்து

நடுங்குகின்றன.

20இவைபற்றி மனிதர் யாரும்

நினைத்துப் பார்ப்பதில்லை.

அவருடைய வழிகளை

யாரே அறிவர்?

21புயலை யாரும் காண்பதில்லை;

அவருடைய செயல்களுள்

பல மறைந்துள்ளன.

22அவருடைய நீதியின்

செயல்களை யாரால்

அறிவிக்கமுடியும்?

அவற்றுக்காக யார்

காத்திருக்க முடியும்?

அவரின் உடன்படிக்கை

தொலைவில் உள்ளது.

23மேற்கூறியவை அறிவில்லாதவர்களின்

எண்ணங்கள்; மதிகெட்ட,

நெறிபிறழ்ந்த மனிதர்கள்

மூடத்தனமானவற்றை

நினைக்கிறார்கள்.

படைப்பின் மணிமுடி மானிடர்

24குழந்தாய், நான்

சொல்வதைக் கேள்;

அதனால் அறிவு பெறு;

என் சொற்கள்மீது

உன் கருத்தைச் செலுத்து.

25நற்பயிற்சியை உனக்கு

நுட்பமாகக் கற்பிப்பேன்;

அறிவை உனக்குச்

செம்மையாய் புகட்டுவேன்.

26தொடக்கத்தில் ஆண்டவர்

தம் படைப்புகளை

உண்டாக்கியபோது,*

பின்னர் அவற்றின் எல்லைகளை

வரையறுத்தபோது,

27தம் படைப்புகளை என்றென்றைக்கும்

ஒழுங்கோடு அமைத்தார்;

அவற்றின் செயற்களங்களை

எல்லாத் தலைமுறைகளுக்கும்

வகுத்தார். அவற்றுக்குப்

பசியுமில்லை, சோர்வுமில்லை;

தங்கள் பணியிலிருந்து

அவை தவறுவதுமில்லை.

28அவற்றுள் ஒன்று மற்றொன்றை

நெருங்குவதில்லை;

அவரது சொல்லுக்கு அவை

என்றுமே கீழ்ப்படியாமலில்லை.

29அதன்பின் ஆண்டவர்

மண்ணுலகை நோக்கினார்;

அதைத் தம் நலன்களால் நிரப்பினார்.

30நிலப்பரப்பை எல்லாவகை

உயிரினங்களாலும் நிறைத்தார்.

அவை மண்ணுக்கே திரும்ப வேண்டும்.


16:3 சாஞா 4:1-3. 16:7 தொநூ 6:4; சாஞா 19:24. 16:8 தொநூ 19:24. 16:10 எண் 14:35. 16:14 யோபு 34:11. 16:28 திபா 14:8. 16:30 சஉ 3:20.
16:15 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 16:26 இது எபிரேய பாடம்; ‘தீர்ப்பிடப்பட்ட போது’ என்பது கிரேக்க பாடம்.